By Village Missionary Movement
Tuesday, 30-Jul-2024இன்றைய தியானம்(Tamil) 30.07.2024
விவரிக்க முடியாத மகிழ்ச்சி
“…கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்…” - நெகேமியா 8:10
ராஜேஸ் இரண்டு வாரம் இங்கிலாந்தில் தங்க நேரிட்டது. அவர் லண்டனை அடைந்தவுடன் பணம் அவர் கைக்கு வந்து விடும் என நம்பியிருந்தார். இரண்டு நாட்களில் அமெரிக்கா செல்ல வேண்டும். விசுவாசத்தோடு பொருட்களை வாங்கினார். அவருடைய கையில் ஒரு பைசாவும் கிடையாது. மேலும் ஒரு நபரையும் தெரியாது. ஆனால் கர்த்தரை நம்பி கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருந்தார். கடைசி நிமிடங்களில் பணம் கையில் வந்தது. தங்கியிருந்ததற்கும், சாப்பாட்டிற்கும் அனைத்துக் கட்டணமும் கட்டி தான் செல்ல இருந்த விசைப்படகிற்கும் பணம் கட்டி, மீதம் எடுத்த வண்ணம் அமெரிக்கா சென்றார். விவரிக்க இயலாத மகிழ்ச்சி அவருக்கு! நாம் சிறு பிள்ளையைப் போல் கர்த்தரை 100% நம்பும் போது 100% மகிழ்ச்சி நம் உள்ளத்தை நிறைக்கும்.
சந்தோஷம் என்ற வார்த்தைக்கு கிரேக்க பதத்தில் "கொண்டாடும் மகிழ்ச்சி" என்று அர்த்தம். கிறிஸ்துவின் பிள்ளைகளுக்கு ஒவ்வொரு நாளும் கொண்டாடப்படும் மகிழ்ச்சி உண்டு. சர்வத்தையும் படைத்த தேவன், சர்வவல்லமையுள்ள தேவன் நம்மோடு இருப்பது கொண்டாடக்கூடிய மகிழ்ச்சியல்லவோ!
R.A. டோரி என்பவர் இவ்வாறு கூறுகிறார், “கிறிஸ்துவை என் மீட்பராக ஏற்றுக் கொள்ளும் முன் உலகிலேயே மிகச் சோர்வான, கவலை நிறைந்தவனாய்க் காணப்பட்டேன். ஆனால் உண்மையான கிறிஸ்தவனாய் மாறின உடன் கவலையென்றால் என்ன விலை? என்று கேட்கும் அளவு எப்பொழுதும், அதாவது இல்லாமையிலும், இயலாமையிலும் சந்தோஷமாக இருக்கிறேன்” என்று. ஆனால் இன்று சிலருக்கு மகிழ்ச்சி அதிக பணம் கையில் இருக்கும் போது இருக்கும். சிலருக்கு ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் இருக்கிறது. ஆனால் நிலையான நிரந்தரமான சந்தோஷம் கர்த்தருக்குள் இருப்பதிலேயே உள்ளது. என்ன குறைவுகள் ஏற்றத் தாழ்வுகள் வந்தாலும் அவரைப் பார்க்கும் போது அவையெல்லாம் ஒன்றுமில்லாமல் போய் விடுகிறது. நம்மோடு கர்த்தர் இருக்கும் போது, எல்லாவற்றையும் அவர் கரத்தில் அர்ப்பணிக்கும் போது எல்லையில்லா மகிழ்ச்சியோடு ஒவ்வொரு நாளையும் கொண்டாடலாம். கஷ்ட துன்பத்தின் நேரத்திலும் சந்தோஷமாய் இருக்கலாம்.
நாம் ஒவ்வொரு நாளின் 24 மணி நேரமும் அவரை நம்பி, அவரிடம் அர்ப்பணித்து வாழும் போது மகிழ்ச்சியாக இருக்கலாம். கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள் சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன் என பவுல், பிலிப்பு பட்டணத்தாருக்கு எழுதும் போது கட்டுண்டவராய் சிறையில் இருந்தநிலையிலும் சந்தோஷமாய் எழுதுகிறார். கர்த்தரை நம்பி கர்த்தருக்குள் அவர் வல்லமையைப் பார்த்து இருக்கும் போது எல்லையில்லா மகிழ்ச்சி நம் உள்ளத்தை நிறைக்கும். எப்போதும் கர்த்தர் என்னோடிருக்கிறார் அவர் சர்வ வல்லமையுள்ள தேவன் என்ற எண்ணத்தோடு அவரை சார்ந்து கொள்ளும் போது இந்த மகிழ்ச்சி நமக்குக் கிடைக்கும்.
- Mrs. ஜாஸ்மின் பால்
ஜெபக்குறிப்பு:
நம் ஊழியத்தை ஜெபத்தாலும், காணிக்கையினாலும் தாங்குவோரின் குடும்பங்களின் ஆசீர்வாதத்திற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864