By Village Missionary Movement
Wednesday, 31-Jul-2024இன்றைய தியானம்(Tamil) 31.07.2024
காலம் தாழ்த்தாதே
“…இதோ இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள்" - 2 கொரிந்தியர் 6:2
D.L. மூடி பிரசங்கியார் சிக்காகோ நகரத்தில் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது ஒரு பெரிய வியாபாரி, கூட்டங்களில் மிகவும் ஈடுபாடு காட்டினார். ஆனால் இயேசுவை ஏற்றுக் கொள்ள தயங்கினார். ஒவ்வொரு நாளும் கண்ணீரோடு மூடி பிரசங்கியார் ஆலோசனை கூறி வற்புறுத்தும் போது, "ஐயா கொஞ்சம் தருணம் கொடுங்கள். வியாபாரத்தில் என்னோடு பங்குதாரராக இருப்பவர் இரட்சிக்கப்படாதவர், அவர் என்னை கேலி செய்வார். நானும் வியாபாரியாக இருப்பதால் இயேசுவை ஏற்றுக் கொள்ள முடியாது" என்று சொல்லிவிடுவார். திரும்பத் திரும்ப மூடி பிரசங்கியார் இயேசுவைப் பற்றி சொல்லவே அவர் ஆலயத்திற்கு வருவதையே நிறுத்திவிட்டார். சில மாதங்களில் அவர் வியாதிப்பட்டார். குணமடைந்தால் இயேசுவை ஏற்றுக் கொள்கிறேன் என்றார். மூடியும் ஜெபித்தார். அவர் சுகம் பெற்றதும் இயேசுவை மறுதலித்தார். மறுபடியும் வியாதிப்பட்டார். அப்போது இருள் சூழ்ந்து இறந்தார். இறக்கும்போது அவரது இறுதி வார்த்தை இதுதான்: " அறுப்பு காலம் சென்றது கோடை காலமும் முடிந்தது " என்பதே.
இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட கள்ளர் இருவரில் ஒருவன் தனக்கு கொடுக்கப்பட்ட நேரத்தை சரியாகப் பயன்படுத்தி பரதீசின் வாழ்வை பெற்றான். மற்றொரு கள்ளனோ சிலுவையிலுருந்து என்னை விடுவித்தாலே அவருக்கு வல்லமை உண்டு என்று நம்புவதாகக் கூறினான். இறுதியில் நஷ்டமடைந்தது அவன்தான். நாமும் இயேசுவை அறிகிறதற்கு இதுவே கடைசி தருணம் என எண்ணி உடனே ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்னும் ஒரு தருணம் கிடைக்கும், இன்னும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என நம்பி கிடைத்த தருணத்தை வீணாக்காதீர்கள். இதில் வீணாவது உங்கள் வாழ்வு தான். பரதீசின் வாழ்வை இழந்து விடுவீர்கள். அதனால் இன்றே அவரை விசுவாசித்து அவரை ஏற்றுக் கொண்டு கள்ளனைப்போல் பரதீசின்வாழ்வை பெற்றுக் கொள்ளுங்கள். இந்த தருணத்தை விட்டு விட்டால் மற்றொரு தருணம் உங்களுக்கு கிடைக்காமலும் போகலாம்.
இயேசுவே உங்களை பரலோகத்தில் சேர்ப்பவர். உங்களுக்கு வரும் கஷ்ட, நஷ்டங்களிலிருந்து உங்களை விடுவிக்க வல்லவர். இந்தப் பரதீசின் வாழ்வு கிடைப்பதற்கு முழு மனதோடு இயேசுவே என் உள்ளத்தில் வாரும். என் பாவத்தைக் கழுவும் என கெஞ்சினால் போதுமானது. அதோடு மாத்திரமல்லாமல் வேதத்தை வாசித்து அவர் சொல்லும் காரியங்களை அறிந்து அவற்றைப் பின்பற்றும்போது அவரோடுள்ள தொடர்பில் நீடித்து இருக்கமுடியும். அவ்வாறு இருக்கும்போது நாம் பெற்றுக்கொண்ட இரட்சிப்பை அல்லது தேவனோடுள்ள உறவை பூமியிலுள்ள காலம் வரை காத்துக்கொள்ள முடியும்.
- Mrs. கிரேஸ் ஜீவமணி
ஜெபக்குறிப்பு:
ஊழியர்கள் தங்குவதற்கு அறைவீட்டைக் கட்டித்தரும் சூனேமியாக்கள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864