By Village Missionary Movement
Monday, 12-Aug-2024இன்றைய தியானம்(Tamil) 12.08.2024
உபத்திரவம்
"நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; . . ." -சங்கீதம் 119 :71
அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து சீனா நோக்கி சென்று கொண்டிருந்தது அந்த கப்பல். மாலை வேளையில் கப்பலின் மேல் தட்டில் ஒரு கிறிஸ்தவ குருவானவரும், ஒரு வியாபாரியும் உரையாடிக் கொண்டிருந்தனர். வியாபாரி கேட்டார் "சீனாவிற்கு என்ன விஷயமாக போகிறீர்கள்?" என்று. "இயேசுவை அறிவிக்க போகிறேன்" என்றார் குருவானவர். ஒரு நிமிடம் அதிர்ந்து போன வியாபாரி, சீனாவுக்கு மிஷனெரிகள் செல்வது வீண். ஒருமுறை மர்பி என்ற குரு சென்றிருந்தார். ஒரு நாள் அவரை தூக்கிக் கொண்டு போய் அவரது கையின் மூன்று விரல்களையும் துண்டித்து விட்டனர். அவர் இப்போது அமெரிக்காவில் இருக்கிறார். இந்த விஷயம் எல்லாம் உங்களுக்கு தெரிந்திருந்தால் சீனாவிற்கு போக துணிந்திருக்க மாட்டீர்கள் என்றார். குரு அமைதியாக சிரித்துக் கொண்டார். பின்பு பல காரியங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். சற்று நேரத்தில் அவர்களுக்கு தேநீர் பரிமாறப்பட்டது. தேநீரை வாங்கிய குருவின் கையைக் கண்ட வியாபாரி திகைத்துப் போனார். ஏனென்றால் அவரது கையில் மூன்று விரல்கள் இல்லை. ஆம், அன்று சீனாவுக்கு சென்ற மர்பி இவரே! விரல்கள் துண்டிக்கப்பட்டாலும் மீண்டும் தேவன் கொடுத்த பொறுப்பை பயமின்றி உபத்திரவத்தின் மத்தியிலும் செய்யப் புறப்பட்டார்.
பவுலும், சீலாவும் சுவிசேஷம் அறிவித்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனாலும் அவர்கள் சிறையில் கர்த்தரைப் பாடித் துதித்தனர். அப்பொழுது அவர்களை கட்டியிருந்த கட்டுகள் எல்லாம் கழன்று போயிற்று. இவர்களைக் காத்துக் கொண்டிருந்த சிறைச்சாலைக்காரன் சிறையில் வைக்கப்பட்டவர்கள் தப்பித்து விட்டார்கள் என்று எண்ணி, தற்கொலை செய்து கொள்ளப் போகிறான். அவ்வேளையில் சிறைச்சாலைக்காரனுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது. சிறைச்சாலைக்காரனும் இரட்சிக்கப்பட்டார். சிறைச்சாலைக்காரனுடைய வீட்டார் யாவரும் சுவிசேஷத்தைக் கேட்டு இரட்சிப்பைப் பெற்றுக் கொண்டனர். சிறைக்கு வெளியே இருக்கும் போது சுவிசேஷம் அறிவித்த இவர்கள் சிறைக்குள்ளும் அதே வேலையை செய்து இரட்சிப்பை பிரஸ்தாபப்படுத்தினார்கள்.
பிரியமானவர்களே! யாரை நான் அனுப்புவேன் யார் நமது காரியமாய்ப் போவான் என்ற கேள்வியை தேவன் தன்னிடம் கேட்பதாக உணரும் யாராலும் அமைதியாக இருக்க முடியாது. ஆகவே தான் பவுலின் வாழ்விலே எவ்வளவு உபத்திரவம் வந்தாலும் அது அவரை ஊழியம் செய்யாமல் சோர்ந்து போகச் செய்யவே இல்லை. உபத்திரவத்தை பார்க்காமல், நான் சவுக்கடி பட்டால் என்ன? என் விரல் போனால் என்ன? என்று வைராக்கியமாய் அவருக்காய் ஓடும் போது நிச்சயம் நம்மை பார்த்து தேவன் சந்தோஷப்படுவார். எனவே நமக்கு ஏற்படுகின்ற உபத்திரவங்களை பெரிதாய் எண்ணாமல் எனது இலக்கு பூமிக்குரியது அல்ல, அதைவிட மேலான ஜீவ கிரீடமே என்று எண்ணி ஊழியம் செய்வோம். இன்றே புறப்படுவோமா? கர்த்தர் நம்மோடு இருக்கிறார்!
- T. சங்கர் ராஜ்
ஜெபக்குறிப்பு:
இம்முகாமிற்காக உழைக்கும் முழுநேர ஊழியர்களின் சரீர பாதுகாப்பிற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864