By Village Missionary Movement
Monday, 27-Jan-2025இன்றைய தியானம்(Tamil) 27.01.2025
பேசும் தெய்வம்
"கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது; கர்த்தருடைய சத்தம் மகத்துவமுள்ளது" - சங்கீதம் 29:4
ஆண்டவரை அறியாத என் உறவினர் ஒருவர் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்செய்தியை அறிந்தவுடன் அவர்களுக்காக ஜெபித்தேன். என் ஜெப நண்பர்களுக்கும் தெரியப்படுத்தி ஜெபிக்கக் கேட்டுக் கொண்டேன். ஆனால் ஜெபத்திற்கு பலனின்றி அவர் இறந்து போனார். மறுநாள் குறைந்த வயதில் இப்படி இறந்துவிட்டாரே, தேவன் ஏன் அவரைக் காப்பாற்றவில்லை என்ற எண்ணம். வழக்கம் போல் வேதம் வாசிக்க அமர்ந்து வாசிக்கும் போது ஆதி. 4,5 ன் மூலம் தேவன் என்னோடு பேசினார். விலங்குகளின் இரத்தத்திற்காக கூட நான் பழிவாங்குவேன். தேவ சாயலில் படைக்கப்பட்ட மனித இரத்தத்திற்காக அவன் சகோதரரிடத்தில் பழிவாங்குவேன் என்றார். பின் மரித்தவர் வாழ்வை திரும்பி பார்க்கும் போது அவர் தம்பி தனது தங்கையை தூக்கிலிட்டு கொலை செய்தது தெரிய வந்தது. தேவன் எப்படி நம்மிடம் பேசுகிறார் என கண்டு வியந்தேன்.
நாம் தேவனை நம்பி, விசுவாசித்து அவரிடம் பேசும் போது அவரும் நம்மிடம் பேசுகிற தேவனாயிருக்கிறார். நாம் எந்த நிலையில் எப்படிப்பட்டவர்களாயிருந்தாலும் அவர் நம்முடன் பேசுகிறார். நம் அந்தஸ்து மற்றும் வசதி இவற்றை தேவன் பார்ப்பதில்லை, நம் உள்ளத்தைப் பார்க்கிறார். இயேசு பூமியிலிருந்த நாட்களில் வழியருகே இருந்த இரண்டு குருடர்கள், இயேசுவைப் பற்றி அறிந்து தங்கள் இடத்தின் வழியாய் செல்வதைக் கேள்விப்பட்டு, நம்பிக்கையோடு கூப்பிட்டனர். உடனே இயேசுவின் பின் செல்லுகிற ஜனங்கள் அவர்களை அதட்டினார்கள். இயேசு நின்று அவர்களை அழைத்து வரச் சொல்லி அற்புதத்தை செய்யாமல், நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று இருக்கிறீர்கள் என கேட்கிறார். அவர்கள் மனதின் எண்ணமெல்லாம் அவருக்கு தெரியும். அவர்களின் நிலை தெரியும். ஆனாலும் அவர் அவர்களுடன் பேச வேண்டும் என விரும்பி பேசுகிறார். நாம் அவரிடத்தில் தேடி, நம்பி சேரும் போது நம் எல்லா வார்த்தைகளையும் அவர் கவனித்துக் கேட்டு அதற்கான பதிலைத் தருகிறார். இங்கே இந்த இரண்டு குருடர்கள் வழியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக் கொண்டிருந்திருப்பர். மக்கள் எல்லாரும் அவர்களை அற்பமாய் எண்ணி கடந்து சென்றிருந்திருப்பார்கள். அவர்களின் வார்த்தையைக் கேளாமல் இருந்திருப்பார்கள். ஆனால் இயேசு தன் பயணத்தை நிறுத்தி, அவர்களிடம் பேசி அவர்களைத் தொட்டு சுகப்படுத்துகிறார்.
இதை வாசிக்கும் அன்பரே, மனிதர்களால் கைவிடப்பட்டு, தள்ளப்பட்டு என் கவலையைக் கேட்க, கண்ணீரைப் பார்க்க யாருண்டு என எண்ணுகிறீர்களா? என்னுடன் பேச யாருமே இல்லை என்றிருக்கிறீர்களா? இன்றும் பேசும் தெய்வம் உங்களுக்காக நீங்கள் பேசுவதைக் கேட்க ஆவலோடு இருக்கிறார். அவரை நம்பி அவரிடம் பேசுங்கள். அவர் உங்களோடு பேசுவார். அல்லேலூயா!
- Sis. ராஜி
ஜெபக்குறிப்பு:
வடமாநில மிஷனெரிகள் நம் தரிசனங்களை தங்கள் பகுதிகளில் நிறைவேற்ற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864