By Village Missionary Movement
Saturday, 12-Apr-2025இன்றைய தியானம்(Tamil) 12.04.2025
நீங்கள் யார்?
"தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்" - சங்கீதம் 14:2
நீங்கள் யார்? என்று கேட்டால் என்ன அர்த்தம் என்று கேட்கிறார்களா? இப்படிக் கேட்டால் உங்கள் பெயரையோ அல்லது நீங்கள் செய்யும் தொழிலையோ, உங்கள் பதவியையோ சொல்வீர்கள் அப்படிதானே, சரி இருக்கட்டும். இப்பொழுது நாம் பரிசுத்த வேதாகமத்திலுள்ள நபர்களோடு நம்மை ஒப்பிட்டு பார்த்து நாம் யாராக இருக்கிறோம் என சிந்திப்போம்!
பரிசுத்த வேதாகமத்தில் அன்னாள், பெனின்னாள் என்ற இருவரை பார்க்கிறோம். பெனினாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள். அன்னாளுக்கோ பிள்ளை இல்லை. ஆகவே பெனின்னாள் அன்னாளை மிகவும் துக்கப்படுத்துகிறவளாக காணப்பட்டாள். அன்னாளோ எப்பொழுதும் அழுத வண்ணமாக இருந்தாள். ஆனால் எப்போதாவது பெனின்னாளோடு அன்னாள் சண்டையிட்டதாகவும், அல்லது பிறரிடம் புலம்பியதாகவும் வேதத்தில் எங்கும் எழுதப்படவில்லை. அன்னாளோ தன் இருதயத்தை தேவசமுகத்தில் ஊற்றி ஜெபித்தாள். அவள் விண்ணப்பம் கேட்கப்பட்டது. அவள் சாமுவேல் என்னும் தீர்க்கதரிசியைப் பெற்றாள். அதுமட்டுமல்ல மேலும் பிள்ளைகளை பெற்றாள், என்பதை வாசிக்கிறோம். நம் குடும்பத்தில் நாம் அன்னாளைப் போன்ற சுபாவமுடையவர்களாயிருக்கிறோமா? அல்லது பெனினாளாய் இருக்கிறோமா? நாம் யார்? என சிந்திப்போம்.
வேதத்தில் இன்னும் அநேகரை சொல்ல முடியும். ஏசா, யாக்கோபு, ஈசாக்கு, தாவீது, சவுல் என பலரை ஆராய்ந்து பார்க்க முடியும். சில நபர்கள் அவர்களின் பெயருக்கு ஏற்றாற்போல வாழ்வதில்லை, சிலர் வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆனால் அவர்களின் பெயர்கள் நன்றாய் இருப்பதில்லை.
இதை வாசிக்கின்றதான பிரியமானவர்களே! பிறருடைய குணாதிசயங்களை நாம் மாற்ற இயலாது. ஆனால் நாம் நம்மை மாற்றிக்கொள்ள முடியும். மற்றவர்களை நியாயந்தீர்க்கிறவர்களாகவும் நாம் இருக்க கூடாது. நம்மைநாமே நியாயந்தீர்த்துக் கொண்டால் நாம் யார் என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்க்க இடமுண்டு. நாம் யாராக இருக்கிறோம் என்பதை சிந்தித்து பார்ப்போம். நாம் ஒவ்வொருவரும் தேவசாயலில் உண்டாக்கப்பட்டிருக்கிறோம். எனவே நமக்குள் தேவனின் குணாதிசயங்கள் காணப்பட வேண்டும். தேவனால் படைக்கப்பட்ட நாம் ஒவ்வொருவரும் விசேஷித்தவர்கள். எவரையும் மேன்மைப்படுத்தவும், பெலப்படுத்தவும் தேவனால் ஆகும். எனவே நம்மை உயர்த்தும் வரைக்கும் அவருடைய பலத்த கரத்துக்குள் அடங்கியிருக்க, கீழ்படிய இன்றே அர்ப்பணிப்போம்.
- R. ராம்குமார்
ஜெபக்குறிப்பு
38 மாவட்டங்களிலும் தோழமை ஊழியர்கள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864