By Village Missionary Movement
Wednesday, 19-May-2021இன்றைய தியானம்(Tamil) 19-05-2021
சுவாச கோளாறு
“சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.” – லூக்கா 18:1
மிஷனெரி ஜான் ஹைடு ஒரு ஜெபவீரர். இந்தியாவில் ஊழியம் செய்யும்படி வந்த இவர் தனது வாழ்நாளை ஜெபத்திலேயே கழித்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. ஒருமுறை 10 நாட்கள் தொடர்ந்து உணவருந்தாமல் ஜெபித்துக்கொண்டேயிருந்தாராம். சில நாட்கள் இரவெல்லாம் ஜெபிப்பாராம். கூட இருப்பவர்கள் இவரது ஜெபவாழ்வை வியந்து பார்த்து கேட்பதுண்டு. அவர் கூறும் பதில், “இயேசுகிறிஸ்துவை நெருங்கச் செய்வது ஜெபம் மட்டுமே! அவரோடு நெருங்கியிருந்தால்தான் ஆத்துமாக்களை இயேசுவண்டை சேர்க்க முடியும்” என்பாராம். முழங்காலே அவரது உயிர் மூச்சாயிருந்தது. ஒவ்வொரு நாளும் இன்னும் கொஞ்சம் ஜெபிக்க நேரம் கிடைக்காதா என அவர் உள்ளம் ஏங்கியது.
இயேசு கிறிஸ்துவும் பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும் ஜெபித்தார். அவரது வியர்வை இரத்தத்தின் பெருந்துளியாய் விழுந்தது. இராமுழுவதும் ஜெபித்தார், வனாந்தரத்தில் தனித்து ஜெபித்தார், இப்படி ஜெபிக்கும் பழக்கத்தை உடையவராய் இருந்தார். “எப்படி சுற்றுலா பயணிகள் ஒரு புதிய இடத்திற்கு வந்தவுடன் நல்ல காட்சியைக் காண்பதற்கு கண்களால் துழாவுவதைப் போல, இயேசு கிறிஸ்துவும் அவர் சென்ற இடமெல்லாம் தான் தனியே ஜெபிக்கும்படி ஓர் அமைதியான இடத்தைக் காண அவருடைய கண்கள் துழாவியது” என்று ஒரு பரிசுத்தவான் குறிப்பிடுகிறார்.
இயேசுவே இவ்வளவு ஜெபிக்க வேண்டியிருந்தால், நீங்களும் நானும் எவ்வளவு அதிகமாய் ஜெபிக்க வேண்டும்? ஆம், ஜெபம் நமக்கு சுவாசத்தைப் போன்றதாகும். நாம் சுவாசிப்பதற்கு கஷ்டப்பட வேண்டியிருந்தால் சுவாச உறுப்புகளில் ஏதோ கோளாறு உள்ளது என்று அறிந்து கொள்கிறோம். அதுபோலவே, நமக்கு ஜெபிக்க கஷ்டமாயிருக்கிறதென்றால், கோளாறு நமக்குள் இருப்பதே காரணமாகும்.
தேவபிள்ளைகளே! நம் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு சிறிய விஷயங்களையும் தேவனுக்குத் தெரியப்படுத்தி அவரோடு உறவாட கற்றுக் கொள்வது மிகச் சிறந்த பழக்கம். இந்த அனுபவம் நம் தினசரி பழக்கத்திற்கு வந்துவிட்டால், அந்த நாள் முழுவதும் ஜெப ஆவியால் நிறைந்தவர்களாயிருப்போம். ஜெபம் ஒரு சடங்காசாரமாய், கடினமான காரியமாய் இருக்காது. தேவன் நம் இருதயத்தில் வைக்கும் சிறு சிறு பாரங்களுக்காக உண்மையோடு ஜெபித்தால், தேவன் நமக்கு அதிக அதிகமான பாரத்தை நம் இருதயத்தில் தருவதை உணர முடியும். இவ்விதமாய் நாமும் ஜான் ஹைடு போல ஒரு ஜெபவீரனாய், ஜெபவீராங்கனையாய் மாறிவிட முடியும்.
- Mrs. சூசன்னாள் மேத்யூ
ஜெபக்குறிப்பு:
அனைத்து மாநிலங்களிலும் இருந்து 12 மிஷனெரிகளை தேவன் அழைத்து வர, இவ்வூழியத்தில் பயன்படுத்த ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250