By Village Missionary Movement
Tuesday, 25-May-2021இன்றைய தியானம்(Tamil) 25-05-2021
அதோ பார் விமானம்!
“கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.” - ரோமர் 8:2
சர். ஐசக் நியூட்டன் புவிஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார் என்பதை அறிவோம். ஒருமுறை அவர் ஒரு ஆப்பிள் மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்பொழுது, ஆப்பிள் ஒன்று கீழே விழுந்ததாகவும், உடனே அவர் ஆப்பிள் கீழே விழக் காரணம் என்ன என்று சிந்தித்ததினாலேயே, பூமியில் ஒரு ஈர்ப்பு சக்தி இருப்பதைக் கண்டுபிடித்தார் என்றும் கூறப்படுகிறது. இந்த விதியின்படி ஒரு பொருளை ஆகாயத்தில் தூக்கிப்போட்டால் பூமி அதை ஈர்ப்பதினால் அது பூமியில் விழுந்துவிடும். ஆனால் பல மனிதர்களையும், அவர்களது பெட்டிகளையும் சுமந்து கொண்டு வானில் பறக்கும் விமானம், பூமியின் ஈர்ப்பு சக்தியால் ஈர்க்கப்படாமல் எப்படிப் பறக்க முடிகிறது? விமானத்தில் உள்ள ஜெட் எந்திரம், விமானம் முன்னோக்கிச் செல்லவும், உயர எழும்பவும், புவிஈர்ப்பு சக்திக்கு எதிரான மிகப்பெரிய சக்தியைக் கொடுக்கிறது. எனவேதான் புவிஈர்ப்பு சக்தியால் விமானத்தைக் கீழே இழுத்துப் போட முடியவில்லை.
வேதாகமமும் இரண்டு விதமான சட்டங்களைப் பற்றி பேசுகிறது. ஒன்று பாவ பிரமாணம், மற்றொன்று ஆவியின் பிரமாணம். பாவ பிரமாணம் ஒரு மனிதனை தன்பக்கமாய் ஈர்க்கிறது. ஆனால் ஆவியின் பிரமாணமோ, பாவத்தால் இழுப்புண்டு கிடக்கும் மனிதனை பாவத்திலிருந்து விடுதலை செய்கிறது. பாவம் நாம் விரும்பாததை செய்யும்படி நம்மை ஏவும் தன்மையுள்ளது. எப்படியெனில், நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதை செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன். இப்படி நான் விரும்பாததைச் செய்கிறவனாயிருக்க நியாயப்பிரமாணம் நல்லதென்று ஒத்துக்கொள்கிறேனே. ஆதலால் நான் அல்ல, எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது என்று பவுல் அப்போஸ்தலர் அங்கலாய்க்கிறார்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! அனுதினமும் நீங்கள் பாவத்தோடு போராடிக்கொண்டு இருக்கிறீர்களா? நீங்கள் செய்ய வேண்டுமென்று நினைக்கிற காரியங்களை செய்யாதபடிக்கு பாவம் உங்களை மேற்கொள்ளுகிறதா? கவலைப்படாதீர்கள், நிச்சயம் விடுதலை உண்டு. ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள் என்று எழுதப்பட்ட வசனத்தின்படி, பாவத்தைக் காட்டிலும், வல்லமையான பரிசுத்த ஆவியானவர், நம்முடைய பாவச் செயல்களை அழித்து, பரிசுத்தமாய் வாழ்வதற்கு உதவி செய்வார். எப்படி விமானம் கீழே விழாதபடி அதற்குள் இருக்கிற மிக அதிகமான சக்தி போராடி அதை விண்ணில் பறக்கச் செய்கிறதோ அதேப் போல, நமக்குள் இருக்கிற ஆவியானவரின் வல்லமை நம்மையும் பரிசுத்தத்திற்கு நேராய் பரலோகத்திற்கு நேராய் கொண்டு செல்லும். எப்படி சிறுவர்கள் விண்ணில் உலா வரும் விமானத்தைக் கண்டு வியக்கிறார்களோ, அப்படியே நம்முடைய பரிசுத்த வாழ்வைக் கண்டு நாமே வியப்போம். அல்லேலூயா!
- P. சிவா
ஜெபக்குறிப்பு:
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய 7 மொழிகளில் வெளிவரும் நமது தியானச் செய்தி மூலம் அநேகர் உயிர்ப்பிக்கப்பட ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250