By Village Missionary Movement
Wednesday, 29-Oct-2025இன்றைய தியானம்(Tamil) 30.10.2025
எழும்பு! எழும்பு!
"எழும்பு, எழும்பு, பெலன்கொள்; கர்த்தரின் புயமே,..." - ஏசாயா 51:9
பாரா ஒலிம்பிக் போட்டி பிரம்மாண்டமாய் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஓட்டப்பந்தயம் அறிவிக்கப்பட்டதும் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் பத்து பேரும் தங்களுக்குரிய இடத்திலே தயாராய் நின்றார்கள். விசில் சத்தம் கேட்டவுடன் அனைவரும் ஓடத் தொடங்கினார்கள். பார்வையாளர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்து அவர்களை உற்சாகப்படுத்தினார்கள். சில வினாடிகளில் ஒரு போட்டியாளர் தடுமாறி கீழே விழுந்தார். மறு வினாடி மற்ற ஒன்பது போட்டியாளர்களும் நின்று விட்டார்கள். கூட்டம் அமைதியுடனும், அதிர்ச்சியுடனும் பார்த்துக் கொண்டிருக்க மீதி ஒன்பது பேரும் பின்னோக்கி நடந்து வந்து, கீழே விழுந்தவரை கைபிடித்து தூக்கி, பத்து பேரும் ஒன்றாக கரம் கோர்த்து மனம் இசைந்து ஓடி, ஒரே நேரத்தில் வெற்றி கோட்டின் மேல் தங்கள் கால்களை பதித்தனர். மைதானத்தில் உள்ள பார்வையாளர்கள் யாவரும் எழுந்து கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். பத்து பேரும் வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டார்கள். இது ஒரு மெய்சிலிர்க்க வைத்த சம்பவம்.
ஆம், அன்பானவர்களே, கிறிஸ்தவ பயணம் என்பது நான் மட்டும் ஆயத்தப்பட்டு பரலோக ராஜ்யம் அடைவது அல்ல; ஆயத்தப்பட்ட நான் மற்றவரை ஆயத்தப்படுத்தி இலக்கை அடைவதே சிறப்பு. இங்கே அந்த நடுவழியிலே தடுமாறி விழுந்தவரை தூக்கி நிற்க வைத்து மீண்டும் வெற்றிப் பயணத்தை தொடர்ந்த மற்ற ஒன்பது பேரில் ஒருவராக நீங்கள் ஏன் இருக்கக்கூடாது? இந்த கரிசனை உங்களுக்குள் வரும்போது கிறிஸ்துவுக்காக உங்கள் நிலையிலிருந்து இறங்கி வர தயங்க மாட்டீர்கள். கலப்பையின் மீது கை வைத்து அதாவது களத்தில் இறங்க அர்ப்பணித்த நீங்கள் திரும்பி பார்க்க மாட்டீர்கள். அவரது வலது கரம் உங்கள் கரத்துடன் இணைந்து பராக்கிரமம் செய்யும். அந்த பத்து விளையாட்டு வீரர்களும் ஒன்றாய் வெற்றிக் கோட்டில் தடம் பதித்தார்கள்.
அதே உந்துதல், அந்த ஒருமனம், அந்த தேவ அன்பு உங்களை நெருக்கி ஏவும்படி கர்த்தர் கிருபை செய்வாராக. உங்கள் விதைப்பு மிகுந்த பலனை எஜமானாகிய இயேசுவுக்கு கொடுக்க, உங்களுக்காக முழங்காலில் நிற்கும் ஒரு கூட்ட ஜெப வீரர்கள் உண்டு. சவால்களை முறியடிக்க எழும்பும் அந்தகார வல்லமைகளை இயேசு ராஜன் பார்த்துக்கொள்வார். "எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்." (ஏசாயா 52:1). தேவனுடைய பணிக்காக எழும்பும் ஒவ்வொரு ஊழியருடனும் கர்த்தரின் கிருபை நிறைவாய் இருப்பதாக. ஆமென்.
- Mrs. எமீமா சௌந்தரராஜன்
ஜெபக்குறிப்பு:-
நற்செய்தி கூட்டங்களில் சகோதரர். டேவிட் கணேசன் அவர்களைத் தேவன் வல்லமையாய் எடுத்துப் பயன்படுத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864