By Village Missionary Movement
Wednesday, 25-Mar-2026இன்றைய தியானம்(Tamil) 25.03.2026
தெரிந்ததை சொல்லுவோம்
"...அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்?..." - ரோமர் 10:14
கிறிஸ்துமஸ் காலத்தில் ஒரு வீட்டில் குட்டிப்பிள்ளைகளுக்காக அழகான குடில் செய்து வைத்திருந்தார்கள். இயேசு பாலகனின் பிறப்பை பிரதிபலிக்கும் வகையில் சிறிய சிறிய பொம்மைகளை வைத்து அலங்கார விளக்குகளின் ஒளியில் மிக அழகாக காட்சி அளித்தது. அந்த வீட்டிலுள்ள சிறு பெண் தன் தாயாரிடம், "இந்த குடிலில் என்ன இருக்கிறது?" என்று கேட்டாள். அந்த தாயாரும் இயேசு பிறந்த இடத்தையும், மேய்ப்பர்களின் மகிழ்ச்சியையும், சாஸ்திரிகளின் பரிசு பொருட்களையும் குறித்து விவரித்துக் கூறினார்கள். அவளும் ஆர்வத்துடன் அனைத்தையும் கவனித்தாள். மறுநாள் காலையில் அவர்கள் தெருவில் எப்பொழுதும் வரும் தூய்மை பணியாளர் வழக்கம்போல தன் பணியை செய்து கொண்டிருந்தார். இந்த சிறு பெண்ணின் வீட்டில் குடில் இருப்பதை பார்த்து அது என்னவென்று விசாரித்தார். சிறு பெண்ணும் தன் தாயார் தனக்கு கற்றுக் கொடுத்ததை குழந்தை உள்ளத்தோடு தூய்மை பணியாளருக்கு விவரித்துக் கூறினாள். மறுநாள் அந்த தூய்மை பணியாளர் தன் மகளை அழைத்து வந்து அங்கிருந்த பொம்மைகளை சுட்டிக்காட்டி கிறிஸ்துவின் பிறப்பை அறிவித்தார்கள். இப்படியாக சுவிசேஷம் ஒருவரிடமிருந்து ஒருவருக்கு மிக எளிமையான முறையில் பரவ ஆரம்பித்தது. காரணம் சிறு பெண் தனக்குத் தெரிந்ததை தயங்காமல் சொன்னதே!
வேதத்திலும் ஆதி.37:15 ல் ஒரு மனிதனைக் குறித்து வாசிக்கிறோம். அதில் யோசேப்பு தன் சகோதரர்களின் சேமத்தை அறிந்து வர தன் தகப்பன் யாக்கோபினால் அனுப்பப்பட்டபோது, தன் சகோதரர்களை காணாமல் வெளியில் வழி தப்பி திரிகிறதை கண்ட அந்த பெயர் சொல்லப்படாத நபர், "என்ன தேடுகிறாய்?" என்று விசாரிக்கிறார். பின்னர் தனக்குத் தெரிந்த விஷயங்களை அதாவது "தோத்தானுக்கு போவோம் என்று சொல்லக் கேட்டேன்" என்று கூறி, வழி தெரியாமல் தவித்த யோசேப்புக்கு வழி காட்டுகிறார். தேவனுடைய திட்டத்துக்கு நேராக யோசேப்பு வழி நடத்தப்பட இவரும் ஒரு காரணம். தனது பங்களிப்பைக் கொடுத்துவிட்டார். இதைப் போன்று நம்முடைய வாழ்க்கையிலும் நமக்கு ஆண்டவரைக் குறித்து தெரிந்த விஷயங்களை மற்றவர்களிடம் தயங்காமல் சொல்லுவோம். நாகமான் வீட்டில் அடிமையாக இருந்த சிறு பெண், நாகமான் சுகமடைய தனக்குத் தெரிந்த ஆனால் மிக உண்மையான காரியத்தை கூறினாள். அதினிமித்தம் சீரியாவுக்கே இரட்சிப்பு வந்தது.
நீங்கள் உங்களுக்குத் தெரிந்ததை, தேவன் உங்கள் வாழ்வில் செய்ததை முழு நிச்சயத்தோடு சொல்லுங்கள். நிச்சயம் தேவன் கேட்பவரின் உள்ளத்தில் கிரியை செய்வார். மாறாக பெரிய பெரிய ஊழியர்களை கண்முன் நிறுத்தி அவர்களைப் போல், இவர்களைப் போல் எனக்கு பேசத் தெரியாது என எண்ணி தயங்கி நின்று விடாமல், தெரிந்ததை சொல்லி தேவ ராஜ்யத்திற்கு உங்கள் பங்களிப்பைக் கொடுக்க முன் வாருங்கள். பெயர் சொல்லப்படாத நபர் யோசேப்புக்கு வழிகாட்டியதினிமித்தம் வேதத்தில் இடம்பிடித்தார். நாமும் இருளில் இருக்கிற ஜனங்களை வெளிச்சத்திற்கு வழி நடத்தி பரலோகத்திற்கு பங்குள்ளவர்களாக மாறுவோம். ஆமென்!
- Mrs. ஐடா கிங் டேவிட்
ஜெபக்குறிப்பு:-
எல்லா தாலுகாவிலும் சிறுவர் முகாம்கள், வாலிபர் முகாம்கள் நடத்தப்பட ஜெபியுங்கள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864