By Village Missionary Movement
Thursday, 26-Mar-2026இன்றைய தியானம்(Tamil) 26.03.2026
The Best
"விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்;...” - எபிரெயர் 11:4
ஒரு நாள் இரவில் தேவனுடைய இருதயத்தை குறித்து தியானித்துக் கொண்டிருந்தேன். மறுநாள் அதிகாலை ஜெப நேரத்தில் தேவன் என்னுடைய உள்ளத்தில் ஒரு கேள்வியை வைத்தார். உன்னுடைய இருதயம் எப்படி இருக்கிறது? உன் இருதயம் ஆபேலைப் போல உள்ளதா? அல்லது காயீனைப் போல உள்ளதா? என்றார். வேதத்தை திருப்பி அந்த பகுதியை வாசித்தேன். ஆபேல் தேவனை மிகவும் கனப்படுத்தி தன்னிடத்தில் இருப்பதில் சிறந்ததை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கொடுத்தான். காயீனுக்கு அந்த எண்ணம் இல்லை. தேவனை அவன் கனப்படுத்தியது அவ்வளவுதான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கீகரித்தார் என்பதை வாசித்து தியானித்தேன். அன்றைய தினம் தேவனுக்கு கொடுப்பதில் என்னுடைய இருதயம் எப்படி இருக்கிறது என சிந்திக்கலானேன்.
நான் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, ஒருவர் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து, புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றிச் செல்வார். ஏன், என்று கேட்டபோது, அவர் சொன்னார், "என்னுடைய சம்பள பணத்தில் ஆண்டவருக்கென்று, கொடுக்கும் காணிக்கை எல்லாம் புது நோட்டாக இருக்க வேண்டும் என்ற ஆசை, ஆகவேதான் " என்றார். ஆண்டவர், புது நோட்டை எனக்கு போட்டால்தான் நான் அங்கீகரிப்பேன் என்று சொல்லவில்லை; ஆனால் தேவனுக்கு நான் எல்லாவற்றிலும் சிறப்பானதை கொடுக்க வேண்டும் என்ற அவருடைய இருதயத்தை என்னால் உணர முடிந்தது. இன்னும் சிலரை பார்த்திருக்கிறேன். அவர்கள் எங்கள் தகப்பனார் நடத்தி வரும் மளிகை கடையில், சனிக்கிழமை கடையை அடைக்கும் சமயத்தில் 50 அல்லது 100 ரூபாயை கொடுத்து பத்து ரூபாய் நோட்டுகளாக மாற்றிச் செல்வார்கள். ஏன் என்று கேட்டபோது, நாளைக்கு ஆலயத்தில் காணிக்கை போட வீட்டில் இருக்கிற ஒவ்வொருவருக்கும் கொடுக்க வேண்டும் என்று கூறுவார்கள். அவர்கள் வீட்டிற்கு ஒருவர் வெளிநாட்டில் வேலை செய்பவர்களாய் இருப்பார்கள். 100 ரூபாயை காணிக்கையாக கொடுக்கலாம். ஆனாலும் ஏதோ காணிக்கை கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே ஒழிய, தேவனுக்கு சிறப்பானதை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. காணிக்கை கொடுக்கும் விஷயத்தில் நான் பிறரை நியாயந்தீர்க்கும் இருதயத்தோடு இதை கூறவில்லை. இயேசு கிறிஸ்துவே காணிக்கையின் மதிப்பைக் கொண்டு யாரையும் குற்றஞ்சாட்டவில்லை. ஒருமுறை இயேசு கிறிஸ்து ஏழை விதவை காணிக்கை பெட்டியில் போட்ட இரண்டு காசை பாராட்டி கூறினார். ஆகவே நாம் கொடுக்கும் காணிக்கை பத்தோ, நூறோ அது பிரச்சனை அல்ல. எப்படிப்பட்ட மனநிலையோடு கொடுக்கிறோம் என்பதையே அவர் பார்க்கிறார். இந்த இரண்டு நபர்களிடமிருந்தும் தேவனுக்கு கொடுப்பதில் ஒரு பாடத்தை கற்றுக் கொண்டேன்.
இதை வாசித்துக் கொண்டிருக்கும் அன்பானவர்களே! நம்முடைய பங்களிப்பாக தேவனுக்கு நம்முடைய வருமானத்தில் கொடுக்க வேண்டியது கட்டாயம். அதை நாம் காயீனைப் போல கடமைக்காக கொடுக்கிறோமா? அல்லது தேவனை கனப்படுத்தி நம்மிடத்தில் இருப்பதில் சிறந்ததை, மேலானதை தேவனுக்கு கொடுக்கிறோமா என சிந்தித்துப் பார்ப்போம். உங்களின் பங்களிப்பு best ஆக இருக்கும் என்றால், அவர் உங்களை The Best ஆக உயர்த்தி ஆசீர்வதிப்பார்.
- Bro. ஜேசுராஜா
ஜெபக்குறிப்பு:-
நம்முடைய சிறுவர் முகாம் மூலம் சிறுவர்கள் கற்றுக்கொண்ட காரியங்கள், வசனங்கள் அவர்களுக்குள் கிரியை செய்ய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864