By Village Missionary Movement
Friday, 27-Mar-2026இன்றைய தியானம்(Tamil) 27.03.2026
அர்ப்பணிப்பின் ஆசீர்வாதம்.
“பூமியிலுள்ளவைகளை அல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.” - கொலோ 3:2
Rev. Wesley Duewel என்பவர் பின்வருமாறு கூறுகிறார்: உன் வாழ்க்கை வரலாறு ஒவ்வொரு நாளும் பரலோகத்தில் பதிவாகி கொண்டேயிருக்கிறது. உன் ஜெபங்கள், பிரயாசங்கள், நோக்கங்கள், நீ கவனமாயிருந்தவை, உன் கவலையீனங்கள் எல்லாவற்றையும் பதிவு செய்ய தேவன் கவனமாக இருக்கிறார். கர்த்தர் உன் செயல்களுக்காக நித்திய நித்தியமாக பலனளிக்க திட்டம் வைத்திருக்கிறபடியால் உன் வாழ்க்கை வரலாறு அவ்வளவு முக்கியம் வாய்ந்ததாக உள்ளது. இந்த பிரதிபலன்களுக்கு பரிசுகளும் அன்றாடம் பதிவாகும் உன் வாழ்க்கையின் நிகழ்ச்சிகளைப் பொறுத்தே அமையும் என்பதில் கர்த்தர் மிக கண்டிப்பாக இருக்கிறார். தேவ ராஜ்யத்திற்காக நீ செய்தது என்ன? மற்றவர்களுக்கு நன்மை உண்டாக உனக்கு உண்டானவைகளை கர்த்தருக்காக எவ்வாறு பயன்படுத்தினாய்? என்று கேட்கிறார்.
பிரியமானவர்களே! இப்படியிருக்க தேவன் நமக்கு கொடுத்த ஆசீர்வாதங்களில் தேவனுக்காக எவ்வளவு ஒதுக்குகிறோம்? நமக்கு தேவன் தந்துள்ள தாலந்துகள், செல்வத்தை திட்டமிட்டு பயன்படுத்தினாலே காலத்தை பிரயோஜனப்படுத்தி விடுவோம். மகிழ்ச்சிக்கு பிசாசு கொடுத்துள்ள மறு பெயர் பொழுதுபோக்கு என்று ரேவன்ஷில் என்ற பக்தர் கூறுகிறார். ஆதலால் தேவனுக்கு பிரயோஜனமில்லாத பொழுதுபோக்கிகளாக இருந்து மகிழ்ச்சியை தேடக்கூடாது. தேவன் கொடுத்த ஞானம் என்ற தாலந்தை நீதிமொழிகள், பிரசங்கி, உன்னத பாட்டு சாலமோன் பயன்படுத்தினார்.தன் தையல் திறமையை ஏழை விதவைகளுக்காக தொற்காள் பயன்படுத்தினாள். தேவன் மனிதருக்கு அருளும் தாலந்துகளில் மிகச் சிறந்ததும், உன்னதமுமான தாலந்து ஜெபித்தல் என்று அலெக்சாண்டர் ஒய்ட் என்ற பக்தர் கூறுகிறார்.
உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரை கனம் பண்ணு என்று நீதி 3:9 கூறுகிறது. தாவீது ராஜா தங்கம், வெள்ளியினாலும், ஸ்திரீகள் தங்கள் ஆஸ்திகளாலும் கர்த்தரை கனம் பண்ணினார்கள். தன் வீட்டை ஊழியர் தங்கவும், ஜெபம் நடத்தவும் லீதியாள் கொடுத்தார்கள். நாமும் நம் ஆஸ்திகளையும், வீடுகளையும், நம் இரு, நான்கு சக்கர வாகனங்களையும் கர்த்தரின் காரியங்களுக்காக பயன்படுத்தலாம். பிள்ளைச் செல்வங்களை கர்த்தருக்கு பயன்படும்படி செய்யலாம். அனைத்தும் உமக்கு சொந்தம் என்று அற்புத நாதர் கரத்தில் அர்ப்பணிப்போம்! ஆசீர்வாதம் பெறுவோம்!
- Mrs. கீதா ரிச்சர்ட்
ஜெபக்குறிப்பு:-
நம்முடைய சிறுவர் முகாமில் கலந்து கொண்ட சிறுவர்களில் அநேகர் மிஷனெரிகளாய் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864