By Village Missionary Movement
Monday, 30-Mar-2026இன்றைய தியானம்(Tamil) 30.03.2026
தேவனின் பதிவு
"...சாபாயின் குமாரன் பாரூக்... பின்னொரு பங்கை வெகு ஜாக்கிரதையோடே பழுதுபார்த்துக் கட்டினான்." - நெகேமியா 3 : 20
நான் முழு நேர ஊழியத்திற்கென்று வந்தபோது கைப்பிரதி ஊழியம், சிறுவர் ஊழியம் செய்வதுதான் ஊழியம் என நினைத்தேன். ஆனால் எனக்கு அலுவலக காரியமாக வெளியே செல்வது, பிள்ளைகளை ஸ்கூலுக்கு அழைத்துச் செல்வது, ஊழியர்களை அழைத்துச் செல்வது, கொண்டு விடுவது போன்ற வேலைகள் கொடுக்கப்பட்டது. அதாவது 2 வீலர், 4 வீலர் ஓட்டுவதே எனக்கு கொடுக்கப்பட்ட பணி. இதை ஆரம்பத்தில் நான் செய்யும்போது எனக்குத் தகுதி இல்லாததால் என்னை இந்த பணியில் தேவன் வைத்துள்ளார் என என்னையும், என் வேலையையும் தாழ்வாக எண்ணினேன். இதுவும் ஊழியம் தான் என நான் நினைக்கவே இல்லை. ஒரு முறை எங்கள் ஊழியத்தின் காரியங்களை பார்த்தறிய வந்த ஊழியர் ஒருவரை அழைத்து வரச் சென்றேன். அவர் ஒரு நாள் தங்கி விட்டு கிளம்பினார். நான் அவரை பேருந்து நிலையத்தில் விட சென்ற போது, அவர் என்னிடம் தம்பி, நீங்கள் செய்வது தான் பெரிய ஊழியம். ஏற்ற சமயத்தில் அழைக்க வந்தீர்கள், மீண்டும் கொண்டு வந்து விட்டீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பார் என்றார். வீட்டுக்கு சென்ற பின்பு கூட தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு, உண்மையாகவே நீங்கள் தேவன் விரும்பும் காரியத்தை பொறுமையாய் செய்கிறீர்கள் என்றார். அன்று முதல் ஜெபத்தோடு என் ஊழியத்தை செய்து வருகிறேன். என் தனிப்பட்ட வாழ்வில், குடும்ப வாழ்வில் அதற்கான பலனைக் காண்கிறேன்.நெகேமியா அலங்கம் கட்டும்போது, அங்குள்ள பலரும் அவரோடு கரம் கோர்த்து கட்டினர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதியைப் பொறுப்பெடுத்து செய்தனர். அலங்கம் 52 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டது. அப்போது அவர்கள் செய்த காரியத்தை பரிசுத்த ஆவியானவர் வேதாகமத்தில் எழுதும் போது, ஒரு நபரைக் குறித்து சொல்லும் போது மட்டும் பாராட்டி அடைமொழியோடு கூறுகிறார். மற்ற நபர்களை சொல்லும் போது பழுது பார்த்துக் கட்டினான் என்றும், ஒரு நபரை மட்டும் வெகு ஜாக்கிரதையோடே பழுது பார்த்துக் கட்டினான் என்றும் கூறப்பட்டுள்ளது. அலங்கத்தை கட்ட தனது பங்களிப்பு சாதாரணமானதாக இருந்தாலும் அதை கர்த்தருக்கென்று, மனதில் கர்த்தர் மீதுள்ள அன்பினால் பார்த்து பார்த்து ஜாக்கிரதையாய் செய்கிறார். அதனை நெகேமியாவோ, எஸ்றாவோ, அல்லது உடன் பணி செய்தவர்களோ கவனிக்கவில்லை. பரிசுத்த ஆவியானவரே வேதத்தில் கோடிட்டு காட்டுகிறார். அவர்தான் பாரூக். ஏனெனில் நம் தேவன் வெளிப்புறமான காரியங்களைப் பார்க்கிறவர் அல்ல. உள்ளான இருதயத்தைப் பார்க்கிறவர்.
அன்பானவர்களே, உங்களுக்கும் கூட ஆலயத்தில், ஊழியத்தில், சிறுசிறு பொறுப்புகள் கொடுக்கப்பட்டாலும் அதை கர்த்தருக்கென்று மகிழ்வோடு செய்யுங்கள். மனிதர்களிடம் இருந்து பாராட்டை, பதவி உயர்வை எதிர்பார்க்காதேயுங்கள். நீங்கள் முழுமனதோடு கர்த்தருக்கென்று உண்மையாய் உங்கள் பங்களிப்பைக் கொடுங்கள். உங்களின் உண்மையான உள்ளமே உங்கள் பங்களிப்பு. தேவன் அதனை பரலோக புத்தகத்தில் கணக்கு வைத்து, உங்களைப் பாராட்டி அதற்குப் பலனளிப்பார். ஆமென்.
- M. ஸ்டாலின் ராஜா
ஜெபக்குறிப்பு:-
child care child திட்டத்தில் இணைந்துள்ளவர்கள் ஞானத்தில், கர்த்தரை அறிகிற அறிவில் வளர ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864