By Village Missionary Movement
Thursday, 02-Apr-2026இன்றைய தியானம்(Tamil) 02.04.2026
"தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்" - நீதி.22:29
நமது முன்னாள் குடியரசு தலைவர் Dr.A.P.J.அப்துல் கலாம் அவர்கள் ராமேஸ்வரத்திலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர். பள்ளியில் படிக்கும்போதே சைக்கிளில் வீடு வீடாகச் சென்று செய்தித்தாள் விநியோகம் செய்து, தன் பெற்றோருக்கு உதவினார். இவருடைய கடின உழைப்பு, உண்மை, ஆர்வம், செயல் திறன், தன் இளமை பருவத்தை ஜாக்கிரதையாய் கையாண்டதன் மூலம், “ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகைசெய்யும்" என்ற வேத வாக்கின்படி, பிற்காலத்தில் ஒரு தலை சிறந்த விஞ்ஞானியாகவும், இந்தியாவின் முதல் குடிமகனாகவும் இவரை உயர்த்தியது.
யோசேப்பு போத்திபார் என்னும் எகிப்து தேசத்தான் வீட்டில் அடிமையாக வேலை செய்தார். ஆனால் அவருடைய கடின உழைப்பு, உண்மை மற்றும் தேவபக்தியை பார்த்த போத்திபார் அவரை தன்னுடைய வீட்டு விசாரணைக்காரனாக உயர்த்தி, தனக்கு உண்டான யாவற்றையும் அவர் கையில் ஒப்புவித்தார். கர்த்தர் யோசேப்பினிமித்தம் அந்த எகிப்தியன் வீட்டை ஆசீர்வதித்தார். பிற்காலத்தில் யோசேப்பு எகிப்து தேசத்திற்கே அதிகாரியாக உயர்த்தப்பட்டார். இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் மூன்றரை ஆண்டுகள் மட்டுமே ஊழியம் செய்தார். யோவான் 4 : 34 ல் "நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது" என்று சொன்னார். யோவான் 17: 4 ல் "நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன்" என்று வெற்றி முழக்கமிட்டார்.
நாம் செய்யும் வேலையை உண்மையும், நேர்மையுமாய் குறித்த காலத்தில் திறம்பட செய்து முடிக்க வேண்டும். தன் வேலையில் அசதியாயிருப்பவன் அழிம்பனுக்குச் சகோதரன். கர்த்தருடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன். எனவே தேவப்பணி செய்கிறவர்கள் அதை அசதியாய் செய்யாமல், மிகவும் ஜாக்கிரதையாக தேவ சித்தத்தை அறிந்து அதன் படி செய்ய வேண்டும். படிக்கும் மாணவச் செல்வங்கள் ஆசிரியர் தங்களுக்கு கொடுக்கும் வீட்டு பாடங்களை காலந்தவறாமல் எழுதுவதிலும், பாடங்களை உடனுக்குடன் படிப்பதிலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அது அவர்களை அதிக மதிப்பெண் பெற செய்து, உயர் படிப்பில் சேரவும் பிற்காலத்தில் உயர்ந்த வேலையில் அமரவும் வழி வகுக்கும். இப்படி செய்யும்போது தேவன் நம்மை உயர்த்தி ஆசீர்வதிப்பார். ஆகவே அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள், ஆவியிலே அனலாயிருங்கள், கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.
- Mrs. நிர்மலா ஜெபராஜ்
ஜெபக்குறிப்பு:-
இந்த ஆண்டு 1000 மிஷனெரிகள் எழும்ப ஜெபியுங்கள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864