By Village Missionary Movement
Tuesday, 07-Apr-2026இன்றைய தியானம்(Tamil) 07.04.2026
நீங்கள் ஆயத்தமா?
“நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்” - மத்தேயு 24:44
இயேசு கிறிஸ்துவின் முதல் வருகையின் நோக்கமே, பாவத்திலிருந்து மனிதர்களை மீட்டு, அவர்களை நித்திய ஜீவனைச் சுதந்தரிக்க ஆயத்தப்படுத்துவதுதான். முதல் வருகை முடிந்துவிட்டது. அவர் சிலுவையில் அறையுண்டு மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். “நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணின பின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவேன்” என்று இயேசு தம் சீஷர்களிடத்தில் கூறினார். ஆம், அவர் வந்து நம்மை அழைத்துச் சென்று, நித்தியமாய் அவருடனே கூட வைத்துக் கொள்வார். இது எவ்வளவு மகிழ்ச்சியான நம்பிக்கை! இரண்டாம் வருகையில் இயேசு நினையாத நாழிகையிலே வருவார்; ஆதலால், நீங்கள் ஆயத்தமாயிருங்கள் என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது.
நாம் ஒரு பிரயாணம் மேற்கொள்ள வேண்டுமானால் பலவிதமான ஆயத்தங்களைச் செய்ய வேண்டும். இந்த உலகப் பயணத்திற்கே இத்தனை ஆயத்தங்கள் தேவை என்றால், தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமானால் எத்தனை ஆயத்தங்கள் செய்ய வேண்டும்! முதலாவது, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு, நம்முடைய பாவங்கள் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டிருக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவரின் துணையோடு, மீண்டும் பாவம் செய்யாதபடி அனுதினமும் பாதுகாக்கப்பட வேண்டும்.
இயேசு கிறிஸ்து பரலோகராஜ்யத்தை தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பிடுகிறார். அந்தப் பத்துப் பேரில் ஐந்து பேர் புத்தியுள்ளவர்களாகவும், மற்ற ஐந்துபேர் புத்தியில்லாதவர்களாகவும் இருந்தார்கள். மணவாளன் வந்த போது, ஆயத்தமாயிருந்த புத்தியுள்ள ஐந்து கன்னிகைகள் மணவாளனுடன் கலியாண வீட்டுக்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது. மற்ற ஐந்து கன்னிகைகள் மணவாளனுடன் பிரவேசிக்கும் பாக்கியத்தை இழந்தார்கள்.
நாமும் அவரது இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாய், தீவட்டியும் எண்ணெயும் அதாவது இரட்சிப்பும், பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகமும் உடைய பரிசுத்த வாழ்வை வாழ்கிறோமா? இல்லையென்றால் புத்தியில்லாத கன்னிகைகளைப் போல நாமும் கைவிடப்படுவோம். நாம் அனுதினமும் நம்மை ஆராய்ந்து பார்த்து, வேதனை உண்டாக்கும் வழி உண்டோ என்று சோதித்து, நித்திய வழியிலே நடக்க வேண்டும். அப்பொழுது நித்திய ஜீவனைச் சுதந்தரிக்கும் பாக்கியத்தை நம் தேவன் நமக்குத் தந்தருள்வார்.
- Mrs. புவனா தனபாலன்
ஜெபக்குறிப்பு:-
ஒடிசாவில் கட்டி வரும் ஆலயத்திற்கான பணத்தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864