By Village Missionary Movement
Saturday, 11-Apr-2026இன்றைய தியானம்(Tamil) 11.04.2026
காரியத்தின் கடைத்தொகை
“காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக,...” - பிரசங்கி 12:13
எந்த ஒரு காரியத்திற்கும் அதின் முடிவு மகிமையாய் இருத்தல் அவசியம். நாம் ஏதேனும் கதைகள் படித்தாலோ, நாடகங்களைக் கண்டுகளித்தாலோ அதின் முடிவு என்ன என்பதை நாம் அறிய விரும்புவது இயல்பு. உலகமெங்கிலும் ஞானியென்று அறியப்பட்ட வேதாகமக் கதாபாத்திரம் சாலொமோன் ராஜா ஆவார். பிரசங்கி 12:9 ல் அவர் ஞானவான் என்பதும், ஜனத்துக்கு அறிவைப் போதித்து, கவனமாய்க் கேட்டாராய்ந்து, அநேகம் நீதிமொழிகளைச் சேர்த்து எழுதினார் என்ற கருத்தைப் பதிவிட்டுள்ளார். அடுத்த வசனத்தில் இதமான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க வகைதேடினதால், கர்த்தராகிய மேய்ப்பர் செவ்வையும் சத்தியமுமான வாக்கியங்களைக் கொடுத்ததாக எழுதுகிறார். மேலும் இந்த ஞானமுள்ள பரிசுத்த ஆவியினால் எழுதப்பட்ட வாக்கியங்கள் நம்மை சீர்பொருந்தச் செய்கிற தாற்றுக்கோல்கள் போலவும், ஆழமாக மனதில் பதியச் செய்யப்பட வேண்டிய அறையப்பட்ட ஆணிகள்போலவும் இருக்கிறது என்கிறார். மேலும் அநேக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு பலவகையான புத்தகங்கள் வெளிவந்தாலும், அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு என்கிறார்.
அதை சொல்லிவிட்டு காரியத்தின் கடைத்தொகையாக கர்த்தரால் தனக்கு வெளிப்படுத்தப்பட்டு, சாலொமோன் ராஜா எழுதியதாவது, பிரசங்கி 12:13 ன் படி “தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே” என்பதாகும். குறிப்பாக ஆகாய் 2:9 ல் எழுதப்பட்டுள்ளபடி, “முந்தின ஆலயத்தின் மகிமையைப் பார்க்கிலும், இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும்.”
ஆகவே துவக்கம் அற்ப்பமாயிருந்தாலும் நம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும்படி ஆண்டவரிடம் தினமும் கேட்க வேண்டும். அநேக தேவனுடைய பிள்ளைகள் சாட்சியாய் வாழ்ந்து பின்மாற்றத்துக்குள் சென்றிருக்கிறார்கள். அது பந்தயப் பொருளை இழக்கச் செய்யும் அபாயம் நிறைந்தது. எனவே முந்தின இரசத்தைப்பார்க்கிலும் மதுரமான பிந்தின இரசத்தை, சாதாரண தண்ணீர் போன்ற நம்மைக்கொண்டு பரிசுத்த ஆவியானவர் மாற்றியமைக்க ஜெபித்து வெற்றிபெறுவோம்.
எனக்கு அன்பானவர்களே! ஏனென்றால் நாம் செய்யும் ஒவ்வொரு கிரியையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் அதாவது நன்மையானாலும், தீமையானாலும் தேவன் நியாயத்திலே கொண்டுவரப்போகிறார். ஆதலால், ஆண்டவரை அறிந்த நாம் யாவரும் அவருக்கு பயந்து அவர் கற்பனைகளின்படி நடக்க தீவிரப்படுவோம்.
- Mrs. மெர்ஸி அலெக்ஸாண்டர்
ஜெபக்குறிப்பு:-
எல்லா தாலுகாவிலும் 30 வீட்டு ஜெபக் குழுக்கள் ஆரம்பிக்கப்பட ஜெபியுங்கள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864