By Village Missionary Movement
Saturday, 16-May-2026இன்றைய தியானம்(Tamil) 16.05.2026
மகிழ்ச்சி
“..(இருதயத்தின்) அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தையாகான்” - நீதி. 14:10
ஒரு ஊழியக்காரர் ‘தம்பதியினருக்கான கூட்டத்தில்’ பேசிக் கொண்டிருந்தார். அப்போது முன்வரிசையில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணியைப் பார்த்து உங்கள் கணவர் உங்களை மகிழ்ச்சியாக வைத்துள்ளாரா ? எனக் கேட்டார். மனைவியோ இல்லை என்றார்கள். உடனே அவர்களது கணவர் மற்றும் அங்கிருந்த எல்லோரும் அதிர்ந்து பார்த்தனர். மனைவி தொடர்ந்து என் மகிழ்ச்சி என் கணவரை சார்ந்தது அல்ல. எந்த மனிதரையோ, பொருளையோ சார்ந்திருந்தால், மாறுகிற உலகத்தில் நம்மைச் சுற்றியிருப்பவைகள் மாறும் போது, சந்தோஷமும் மாறிவிடும். என் வாலிப வயதில் இயேசு கிறிஸ்துவுக்கு என் உள்ளத்தை திறந்து கொடுத்தேன். அப்பொழுது என் உள்ளம் சந்தோஷத்தினால் நிறைந்தது. அன்று முதல் எப்பொழுதும் சந்தோஷமா இருக்கணும்னு நான் முடிவெடுத்திருக்கிறேன். சூழ்நிலைகள் மாறினாலும் தேவன் என்னை எந்த நிலைமையில் வைத்திருந்தாலும் நான் சந்தோஷமாய் இருப்பேன். ஏனென்றால் இயேசு எப்பவும் என் கூடவே இருக்கிறார் என்றார்கள். உடனே கரவோசையினால் அரங்கம் அதிர்ந்தது. தாவீது ராஜா கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை. ஆகையால் என் இருதயம் பூரித்தது என்கிறார். உயர்த்தப்பட்ட நிலையிலிருந்தாலும், எல்லாவற்றையும் உடையவராய் இருந்தாலும் அதனால் மகிழ்ச்சி என்பது அல்ல. கர்த்தர் எனக்கு முன்பாக, என் வலது பாரிசத்தில் இருப்பது தான் என் மகிழ்ச்சி என்கிறார். படை பலம் இருப்பதால் அல்ல, அவர் என் வலதுபாரிசத்தில் இருப்பதால் நான் அசைக்கப்படுவதில்லை என்கிறார். மேலும் உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு என்கிறார். பரிபூரண ஆனந்தம் என்பது நிரம்பி, வழியக்கூடிய சந்தோஷம். நித்திய பேரின்பம் என்பது எப்போதும் நிலைத்து நிற்கக் கூடிய, யாராலும் எடுக்க முடியாத சந்தோஷம்.
பிரியமானவர்களே, வாழ்வில் சந்தோஷம், மகிழ்ச்சி என்பதே இல்லை என புலம்பிக் கொண்டிருக்கிறீர்களா ? அப்படியானால் நீங்கள் எதை மகிழ்ச்சி என எண்ணுகிறீர்கள் என்று உங்களையே கேட்டுப் பாருங்கள். உங்களுடைய சந்தோஷம் மனிதர்களை, பொருட்களை சார்ந்திருந்தால் அது அவ்வப்போது மாறிக் கொண்டே தான் இருக்கும். ஆனால் என்றென்றும் மாறாத, நம்மை ஒரு நாளும் மறவாத இயேசு நம் சந்தோஷமாயிருந்தால், தாவீதைப் போல் அரியணையில் இருந்தாலும், ஆடுகள் பின் இருந்தாலும், குகையில் இருந்தாலும், சந்தோஷமாயிருக்கலாம். பவுலும், சீலாவைப் போல் கட்டுகளிலும், சிறையிலும் பாடித் துதிக்கலாம். இரட்சகராம் இயேசு நமக்குள் இருப்பாரென்றால் குறையாத, நிலைத்து நிற்கும் சந்தோஷம் நமக்குள் இருக்கும். இயேசுவை இறுகப்பற்றிக் கொள்வோம், மகிழ்ச்சியைப் பெற்றுக் கொள்ளுவோம், கர்த்தரின் ஆசீர்வாதத்தை சுதந்தரிப்போம்.
- Mrs. அன்பு ஜோதி ஸ்டாலின்
ஜெபக்குறிப்பு:
VBS ஊழியத்திற்கென்று தன்னார்வமாய் இணையும் நபர்களைத் தேவன் ஆசீர்வதிக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864