By Village Missionary Movement
Saturday, 23-May-2026இன்றைய தியானம்(Tamil) 23.05.2026
தாழ்மையை தரித்தல்
“(இயேசு) தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.” -பிலிப்பியர் 2:7
நான் சிறு வயதாய் இருக்கும் போது வாசித்த கதை ஒன்றில், அரசர் ஒரு குடிமகனை போல மாறுவேடம் அணிந்து தனது நாட்டின் மக்களைப் பார்க்கச் செல்வார். அவரது செயற்கை முடியும், அவரது உடையும் அவர் அரசர் என்ற அவரது அடையாளத்தை மறைத்து சாதாரண குடிமகனைப் போன்ற தோற்றத்தை தந்தது. அடிக்கடி தனது நாட்டில் இருக்கும் நகரங்களுக்கும், ஊர்களுக்கும் சென்று பார்வையிடுவதால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அவரால் விரைவாக தீர்க்க முடிந்தது. அவர்கள் தேவைகளை சந்திக்க முடிந்தது.
நம்முடைய பாவங்களைத் தீர்ப்பதற்காக, நம்மை உண்டாக்கின தேவன் பரலோக சிங்காசனத்தை விட்டு, “இயேசு” என்ற பெயரில் தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அதாவது கடவுள் ஒரு மனிதனாக இந்த பூமிக்கு வந்தார். அவர் பூமியில் மனிதனாக வாழ்ந்து நாம் அனுபவிக்கும் அத்தனை பாடுகளையும், சோதனைகளையும் அனுபவித்தார். எனினும் அவர் பாவம் செய்யவில்லை. பரலோக ராஜ்யத்தைப் பற்றிய காரியங்களை நமக்கு போதித்தார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரண பரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தி, நம்மைப் பாவங்களிலிருந்தும், சாபங்களிலிருந்தும் விடுதலை செய்வதற்காக சிலுவையில் மரித்தார். நமக்காக மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார். தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். இயேசு கிறிஸ்து தம் ஜீவனை நமக்காக பாவ நிவாரண பலியாக ஒப்புக்கொடுத்தார். கிறிஸ்துவுக்குள் ஆறுதலும் இரக்கங்களும் கிடைக்கப்பெற்ற நாமும் நம் இரட்சகரை போல மனத்தாழ்மையாய் இருக்கிறோமா? பிலிப்பியர் 2:3 ன் படி நாமும் ஒன்றையும் வாதினாலாவது வீண் பெருமையினாலாவது செய்யாமல், சக விசுவாசிகளை நம்மிலும் மேன்மையானவர்களாக எண்ணுவோமா?
பிரியமானவர்களே, நாமும் கிறிஸ்துவின் சிந்தை உள்ளவர்களாய் பிறரை நேசித்து அவர்களுக்கு உதவி செய்யும்படி நம்மைத் தாழ்த்துவோமா? அப்படிப்பட்ட மனநிலையை நாடுவோம். இயேசு கிறிஸ்துவின் தியாகத்துக்காக நன்றி சொல்கிறோமா? என நம்மை நாமே சோதித்துப் பார்ப்போம். இயேசு கிறிஸ்துவிலிருந்த சிந்தையே நம்மிடம் இருக்கத் தொடர்ந்து ஜெபிப்போம். “மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல், வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.” (மீகா 6:8)
- A. பியூலா
ஜெபக்குறிப்பு:-
ஜார்கண்ட் மாநிலத்தில் 10 ஆலயங்கள் கட்டுவதற்கான தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864