By Village Missionary Movement
Monday, 25-May-2026இன்றைய தியானம்(Tamil) 25.05.2026
தேவன் மீது நம்பிக்கை
"என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்" - யாத். 20:3
ஒரு கிராம ஊழியர் தினந்தோறும் பக்கத்திலுள்ள கிராமங்களுக்குச் சென்று ஊழியம் செய்து வந்தார். ஒரு சகோதரர் அவரை சந்திக்கும்போதெல்லாம் அவருக்கு உணவு வாங்கிக் கொடுப்பது வழக்கமாக இருந்தது. ஒருநாள் அந்த சகோதரர் அந்த ஊழியரிடம், எனது கிராமத்தைச் சுற்றியுள்ள இடங்களில் ஊழியம் செய்ய வாருங்கள் என்றார். அந்த ஊழியரும், இன்று முழுவதும் வாகனத்திற்கு பெட்ரோல், உணவு என்று எதற்கும் கவலை இல்லை என்று எண்ணியபடியே அவருடன் இணைந்து ஊழியம் செய்தார். மாலையில் ஊழியத்தை முடித்துவிட்டு, மீண்டும் சந்திப்போம் என்று கடந்து சென்றார் அந்த சகோதரர். ஊழியக்காரருக்கோ பசி ஒரு பக்கம், களைப்பு இன்னொரு பக்கம். அடுத்த நாள் காலை ஊழியத்திற்குச் செல்ல வாகனத்தில் பெட்ரோல் இல்லை. அந்த நிலையில் ஒரு வசனம் அவரின் நினைவுக்கு வந்தது. "என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்". நீ மனிதர்களை நம்பினால் அவர்கள் உனக்கு தெய்வமாகிவிடுவர் என்று உணர்த்தினார். உடனே தன் தவறை உணர்ந்து தேவனே, உமது சித்தத்தின்படி என்னை நடத்தும் என்று தன்னை முழுவதுமாக அவரின் கரங்களில் ஒப்புக்கொடுத்து ஜெபித்தார். அப்போது நீங்கள் வந்து எங்கள் வீட்டில் சாப்பிட்டுவிட்டு ஜெபித்து செல்லுங்கள் என்று ஒரு சகோதரி அவரை அழைத்தார்கள். அந்த வீட்டிற்கு சென்று ஜெபித்து, சாப்பிட்டு முடித்தவுடன் அவர் கையில் காணிக்கை கொடுத்தார்கள். அந்த காணிக்கையை வைத்துக்கொண்டு அடுத்த நாள் ஊழியம் தடையின்றி நடந்தது.
வேதத்தில் ஏசாயா 55 : 8,9 வசனங்களில் "என் நினைவுகள், உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார். பூமியைப் பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது" என்று கர்த்தர் சொல்லுகிறார். நாமும் பல நேரங்களில் நம் கல்வி, திறமை, ஆஸ்தி, அந்தஸ்து என நம் நம்பிக்கையை பலவற்றின் மீது வைக்கிறோம். நம் சிருஷ்டிகரை, நம்மை சிருஷ்டித்த அவரின் நோக்கத்தை நினையாதவர்களாய் இருக்கிறோம். பல வேளைகளில் நம் கண்கள் இவ்வுலகில் நம்மைச் சுற்றி உள்ளவர்களிடமே இருக்கிறது. ஆனால் சங்கீதக்காரர் கூறுகையில் மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், பிரபுக்களை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம் என்கிறார்.
பிரியமானவர்களே, நமக்கு கொடுக்கப்பட்ட வேலை அல்லது ஊழியம் சிறியதோ, பெரியதோ எதுவாயிருந்தாலும் அதை உற்சாகமாய், உண்மையாய், தேவ ஒத்தாசையைக் கொண்டு செய்யும்போது, தேவன் நம்மை அற்புதமாய் நடத்துவார். நாம் நம் வழியை கர்த்தருக்கு ஒப்புவித்து அவர் மேல் நம்பிக்கையாயிருக்கும்போது, அவரே நம் காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். ஆதலால் முழுமனதாய் அவரையே நோக்கிப் பார்ப்போம். அன்பினால் நிறைந்து தினமும் செயல்படுவோம்.
- N. ஜஸ்டின் பாலாஜி
ஜெபக்குறிப்பு:-
வில்லேஜ் டி.வி யில் VBS பார்க்கிற சிறுவர், பெரியவர்கள் உள்ளத்தில் மாற்றம் ஏற்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864