By Village Missionary Movement
Tuesday, 26-May-2026இன்றைய தியானம்(Tamil) 26.05.2026
குணமாக்கும் அன்பு
“…அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” - ஏசாயா 53:5
கர்த்தருடைய பெரிதான கிருபையினால் 1986 ல் நான் பீஹாரிலுள்ள ‘ஜெம்ஸ்’ என்ற ஸ்தாபனத்தின் மூலம் இயங்கும் பள்ளியில் ஒரு மிஷனெரி ஆசிரியையாக நியமிக்கப்பட்டேன். அங்கு மின்சார இணைப்பும் இல்லை. அந்த பீஹார் மக்களையும் எனக்கு பிடிக்கவில்லை. ஒரே வருடத்தில் ராஜினாமா கடிதம் கொடுத்தேன். அதன் நிறுவனரான அகஸ்டின் அண்ணன் என் கடிதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. திடீரென்று ஒரு நாள் காலை நான் எழும்பும் பொழுது என் இரண்டு கால் முட்டிகளிலும் புண்ணாக இருந்தது. ஆவியானவர் இயேசுவின் தழும்புகளால் குணமானீர்கள் என்ற வசனத்தை சொல்லி என்னை ஜெபிக்க சொன்னார். காலையில் எழும்பி என் கால் முட்டிகளைப் பார்க்கும் பொழுது புண்களெல்லாம் நன்றாக ஆறி தழும்பு மாத்திரம் இருந்தது. கர்த்தர் எத்தனை பெரிய அற்புதத்தை என் வாழ்வில் செய்திருக்கிறார்! அந்த அற்புதம் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை முற்றிலுமாக மாற்றியது. வியாதியிலிருந்து எனக்கு சுகம் கொடுத்த தேவனுக்கு இன்னும் நான் ஏதாவது செய்ய வேண்டுமென்று என்னை முற்றிலும் அர்ப்பணித்தேன். இந்நாள் வரைக்கும் கர்த்தர் எனக்கு சுகம் தந்து ஜீவனோடு காப்பாற்றி வருகிறார். புதிய ஏற்பாட்டில் யோப்பா பட்டணத்தில் தொற்காள் என்று அர்த்தங்கொள்ளும் தபீத்தாள் என்னும் சீஷி இருந்தாள். அவள் நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்து கொண்டு வந்தாள். அவள் வியாதிப்பட்டு மரணமடைந்த போது அவளைக் குளிப்பாட்டி, மேல்வீட்டிலே கிடத்திவைத்தார்கள். பேதுரு வந்து எல்லாரையும் வெளியே போகச் செய்து, முடிங்காற்படியிட்டு ஜெபம் செய்து அவளை எழுந்திருக்கப்பண்ணி, பரிசுத்தவான்களையும் விதவைகளையும் அழைத்து அவளை உயிருள்ளவளாக அவர்களுக்கு முன் நிறுத்தினார். ஏனென்றால் தொற்காளின் நற்கிரியைகள் ஜனங்களுக்கு தேவைப்பட்டது. இது யோப்பா பட்டணம் எங்கும் தெரிய வந்தது. அப்பொழுது அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.
இதை வாசிக்கிற தேவ ஜனமே, எனக்கு காலில் வந்த புண் ஒரே இரவில் மறைந்துவிட்டது. என்னுடைய வேலையை தொடர்ந்து செய்வதற்காகவும், அதன் மூலம் ஆயிரக்கணக்கான பிள்ளைகளை தேவனிடத்தில் வழிநடத்துவதற்கும் மட்டுமே தேவன் எனக்கு சுகம் கொடுத்தார் என்பதை பின்நாட்களில் என்னால் அறிய முடிந்தது. அதே போலவே மரித்துப் போன தொற்காளையும் தேவன் உயிரோடு எழுப்பினது எதற்கென்றால் அவளது நற்கிரியை அநேகருக்கு தேவைப்பட்டது. இதை வாசிக்கிற நாம் சிந்திக்கக்கடவோம். ஆண்டவர் நம்மை ஏன் இன்று வரை உயிரோடு வைத்திருக்கிறார்? யாரோ ஒருவருடைய இரட்சிப்பு நம் மூலமாக நிறைவேறுவதற்காக கூட இருக்கலாம். ஒரு கூட்ட ஜனங்களுக்கு நம்மை ஆசீர்வாதமாக வைப்பதற்காகவும் இருக்கலாம். நாம் அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவோமென்றால் நாமும் ஆசீர்வதிக்கப்படுவோம். பிறருக்கும் ஆசீர்வாதமாய் இருப்போம்.
- Sis. பாக்கிய லதா
ஜெபக்குறிப்பு:-
டி.வி யில் VBS நிகழ்ச்சியைப் பார்க்கிற யாவரும் தேவனுக்கு தம்மை பரிசளிக்கிறவர்களாக மாற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864