By Village Missionary Movement
Friday, 29-May-2026இன்றைய தியானம்(Tamil) 29.05.2026
உண்மையாயிரு
“உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்;..” - நீதி. 28:20
ஒரு ஊழியர் கிராமங்களுக்குச் சென்று ஊழியம் செய்ய தினமும் ஒரு பஸ்ஸில் பயணம் செய்வார். அதனால் அந்த பஸ்ஸில் உள்ள டிரைவர், கண்டெக்டர் அவருக்கு நன்கு பழக்கம். ஒரு நாள் அந்த ஊழியர் டிக்கெட் எடுக்க கண்டெக்டரிடம் பணத்தைக் கொடுத்தார். அப்போது கண்டெக்டர் டிக்கெட்டும், மீதி பணத்தையும் கொடுத்தார். அதில் 50 ரூபாய் கூடுதலாக இருந்தது. அந்த ஊழியர் ஒரு நிமிடம் சந்தோஷப்பட்டார். ஆனால் மறு நிமிடமே “உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்;..” (நீதி. 28:20) என்ற வசனம் அவருக்கு ஞாபகத்திற்கு வரவே, கண்டெக்டரிடம் அந்த 50 ரூபாயைத் திருப்பிக் கொடுத்தார். அவர் சிரித்துக் கொண்டே கிறிஸ்தவர்கள் உண்மையாயிருப்பார்கள் என சொல்வார்கள். நீங்க எப்படின்னு தெரிந்து கொள்ளத்தான் கூடுதலாக பணத்தைக் கொடுத்தேன் என்றார்.
இதே போல் தான் இந்த உலகத்திலுள்ளவர்களும் நம்மை கிறிஸ்தவர்கள் என அறிந்து சோதித்துப் பார்க்கின்றனர். யோபுவின் வாழ்வை எடுத்துக் கொண்டால் சாத்தான் யோபுவின் மேல் கண் வைக்கிறான். கர்த்தர் சாத்தானை நோக்கி: நீ என் தாசனாகிய யோபின் மேல் கவனம் வைத்தாயோ? என சொல்லி, யோபுவைக் குறித்து உத்தமனும், சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவன் என்று சாட்சி கொடுக்கிறார். உடனே சாத்தான், நீர் உம்முடைய கையை நீட்டி, அவன் எலும்பையும் அவன் மாம்சத்தையும் தொடுவீரானால், அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மை தூஷிக்கானோ பாரும் என்றான். கர்த்தர் சாத்தானிடம் இதோ, அவன் உன் கையிலிருக்கிறான். ஆகிலும் அவன் பிராணனை மாத்திரம் தப்பவிடு என்றார். அதே போல் சாத்தான் ஒரே நாளில் யோபுவின் பிள்ளைகள், சம்பத்து, வேலைக்காரர் என எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டான். யோபு பாவஞ்செய்யவுமில்லை, தேவனைப் பற்றிக் குறை சொல்லவுமில்லை. பின்னும் சாத்தான் யோபுவின் சரீரத்தை தொட அனுமதி பெற்றுக் கொண்டு, உச்சந்தலை தொடங்கி உள்ளங்கால் மட்டும் பருக்களால் வாதித்தான். ஆனாலும் யோபு தன் உதடுகளால் பாவஞ்செய்யவில்லை. ஆம், தன் உண்மையில் உறுதியாய் இருந்தார். தேவன் யோபுவைக் குறித்து சாட்சி கொடுக்கும் போது முதலாவது உத்தமன் என்கிறார். யோபு தான் இழந்ததை இரண்டத்தனையாய்ப் பெற்றார்.
பிரியமானவர்களே, நாமும் நம் வாழ்வில் தேவனுக்கு முன்பாகவும், மனிதருக்கு முன்பாகவும் உண்மையாய் இருக்க வேண்டும். அப்பொழுது தேவன் நம்மைக் குறித்து சாட்சியிடுவார். நமக்கு இழப்புகள் ஏற்பட்டாலும் அவற்றை மீண்டும் பெற, அதுவும் இரண்டத்தனையாய் பெற கிருபை செய்வார். உண்மையாயிருந்து இரட்டிப்பான ஆசீர்வாதங்களைப் பெறுவோம்.
- Mr. அருண் ஐயப்பன்
ஜெபக்குறிப்பு:-
NH சாலையில் ஜெபக் கோபுரம் கட்டுவதற்கான தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864