By Village Missionary Movement
Monday, 01-Jun-2026இன்றைய தியானம்(Tamil) 01.06.2026
புதிய கல்வி ஆண்டு
"என் உண்மையும் என் கிருபையும் அவனோடிருக்கும்; என் நாமத்தினால் அவன் கொம்பு உயரும்." - சங்கீதம் 89:24
நாம் வாழுகின்ற உலகில் இன்று குழப்பங்கள், பல அழுத்தங்கள், கவனச் சிதறல்கள் உண்டு. ஆனாலும் ஆண்டவர் தம்முடைய பிள்ளைகளை அவருக்கென்று ஒளி வீசவும், விசுவாசத்தில் வேரூன்றி நிற்கவும், அறிவுடனும் துணிச்சலுடனும் செயல்பட அழைக்கிறார்.
நம்முடைய பிள்ளைகளை தேவன் இவ்வுலகில் அவரது நாமத்தின் மகிமைக்காக பயன்படுத்த முடியும். அவர்கள் சந்திக்கும் சவால்கள், தேர்வுகள், நண்பர்களால் வரும் அழுத்தங்கள், நிச்சயமற்ற சூழ்நிலைகள் ஆகியவற்றை எதிர்கொள்ளும் போது, அவர்கள் உறுதியாக நிற்க தேவன் பெலன் கொடுப்பார். ஆண்டவரின் திட்டத்தில் நடக்க அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், அபிஷேகிக்கப்பட்டவர்கள், பிரித்தெடுக்கப்பட்டவர்கள். ஆண்டவரின் வாக்குத்தத்தத்தை சுதந்தரிக்கும்படி அழைக்கப்பட்டவர்கள் என்ற நம்பிக்கை முதலாவது நமக்குள் இருக்கும்போது அவர்களுக்காக ஜெபித்து, அவர்களை தேவனுக்கேற்ற வழியில் நடத்த ஏதுவாகும்.
ஆண்டவரின் திட்டத்தில் அவர்கள் இருக்கிறார்கள். ஆகவே அவர்களின் நம்பிக்கை, அவர்கள் பெறும் மதிப்பெண், புகழ் அல்லது சாதனைகளிலிருந்து வரக்கூடாது. மாறாக "நீ என்னுடையவன்" என்று சொந்தம் பாராட்டி அழைக்கும் மாறாத ஆண்டவரின் உண்மைத் தன்மையின் மேலேயே இருக்கட்டும்.
வேதத்தில் அப்பொல்லோ நன்கு கற்றறிந்த மனிதராக அறிமுகப்படுத்தப்படுகிறார். அவர் பேச்சாற்றல் மிக்கவராகவும் இருந்தார். ஆனாலும் இன்னும் அதிகமாய் கற்றுக் கொள்ள ஆர்வமுள்ளவராகவும், பணிவுள்ளவராகவும் இருந்தார். அப்பொல்லோ போல நமது பிள்ளைகள் நன்கு படிக்கட்டும், அதே வேளையில் வேத வார்த்தையில் வளரட்டும். அதுவே தாழ்மையையும், பணிவையும் கற்றுக் கொடுக்கும். தேவன் இவ்வுலகில் அவர்களைக் கொண்டு வந்த நோக்கம் அவர்களின் தேர்ந்தெடுப்புகளில், இலட்சியங்களில் பூரணமாகட்டும். இயேசு கிறிஸ்துவுக்காக பிரகாசிக்கும் மாணவர்களாக அவர்கள் ஒளி வீசட்டும். அவர் நம்மை அறிவுள்ளவர்களாக மட்டுமல்ல, உப்பாக, ஒளியாக, அவரது சாயலை பிரதிபலிக்கவும் அழைக்கிறார். உண்மையான கல்வி என்பது தகவல்களை அறிந்து கொள்வது மட்டுமல்ல, நம்முடைய சிந்தனை வாழ்விலும் இயேசு கிறிஸ்துவின் சிந்தனையோடு இருள் நிறைந்த உலகில் ஒளி வீச வேண்டும். அப்போது இயேசு கிறிஸ்துவைப் போல சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்க முடியும். மாணவப் பருவம் ஆண்டவர் கொடுத்த பொக்கிஷம். இந்த பருவத்தில் படிப்பு, திறமை, பெலன், அனைத்தின் மூலம் தேவராஜ்யம் மகிமைப்படட்டும். ஆமென்.
- Rev. S. ஜோதி நாயகம்
ஜெபக்குறிப்பு:-
இம்மாத ஊழியங்களுக்காக ஊழியர்களின் பிரயாண பாதுகாப்பிற்காக ஜெபியுங்கள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864