By Village Missionary Movement
Wednesday, 10-Jun-2026இன்றைய தியானம்(Tamil) 10.06.2026
முதலாவது இயேசுவே
"முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்;..." - மத்தேயு 6:33
ஒரு பேரரசர் நகை, விலையேறப்பெற்ற கற்கள் நிறைந்த தனது பெட்டகத்தோடு அரண்மனைக்குச் சென்று கொண்டிருந்தார். அவரது பாதுகாவலுக்காக சேவகர்களும், மந்திரிகளும் புடைசூழ யானையில் அமர்ந்து சென்று கொண்டிருந்தனர். திடீரென்று யானை அதிரவே பெட்டகம் சரிந்து கீழே விழுந்தது. அப்போது பெட்டகம் திறந்து அதிலிருந்த நகைகள் சிதறி விழுந்தன. தங்க நாணயங்களும், விலையேறப்பெற்ற முத்துக்களும் நான்குதிசையிலும் உருண்டோடின. அரசர் என்ன கட்டளையிடுவாரோ என்று செய்வதறியாது யாவரும் ஸ்தம்பித்து நின்றனர். அரசர் நல்மனம் கொண்ட தாராள பிரபு. ஒரு வினாடி யோசித்து விட்டு, "எல்லாம் உங்களுடையது. யார் யாருக்கு என்னென்ன வேண்டுமோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று சொன்னார். சேவகர்களும், மந்திரிகளும் அங்கும் இங்குமாக ஓடி கீழே விழுந்தவற்றை பொறுக்கி சேர்க்கலாயினர். அப்பொழுது அரசரின் பார்வை தன்னருகே நின்று கொண்டிருந்த ஒரு சேவகனின் மேல் விழுந்தது. அவன் அரசனின் மேல் வைத்த விழி வாங்காமல், ஈட்டியின் பிடியைத் தளர்த்தாதவனாக நின்று கொண்டிருந்தான். அரசருக்கு ஒரே ஆச்சரியம்! உன் குடும்பத்தினருக்கு விலையேறப்பெற்ற பொருட்களை எடுத்துச் செல்ல உனக்கு விருப்பம் இல்லையா? என்று கேட்டார்.
மகாராஜா, எல்லாருடைய கண்களும் நகைகளின் மேல் இருக்கின்றது. யாரும் கவனிக்காத போது யாராவது உங்களுக்கு ஊறு விளைவித்து விட்டால் என்ன செய்வது? அதனால் தான் என் கண்களை உங்களை விட்டு எடுக்காமல் இருக்கிறேன். இந்த நகைகளைக் காட்டிலும் நீரே விலையேறப்பெற்றவர் என்றான் சேவகன். பூரித்து போன அரசர் அவனை தனக்கு மெய்காவலராக பணி உயர்த்தி அவனுக்கு நகைகளையும், வைரங்களையும், முத்துக்களையும் பரிசாகக் கொடுத்தார்.
பிரியமுள்ள தேவ மக்களே, இன்றைய நாட்களில் நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்? அந்த சேவகனின் கண் தனது ராஜாவையே நோக்கிக் கொண்டிருந்தது. இன்றைக்கு நம்முடைய கண்கள் எதை, எவற்றை, யாரை நோக்கி கொண்டிருக்கிறது? இந்த உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காக ஓடிக்கொண்டிருக்கிறோமா இல்லை தேவன் மீது இருக்கிறதா? எவைகளை நாடி நம் இருதயம் அனுதினம் ஓடுகிறது. அந்த சேவகனுக்கு அரசர் பதவி உயர்வை கொடுத்து, பொன், வெள்ளியை கொடுக்க முடியுமென்றால் நம்முடைய ராஜாவாகிய இயேசு ஜீவனுக்குரியவற்றையும், நித்திய ஜீவனையும் கொடுப்பது எவ்வளவு நிச்சயம்! ஆதலால் இயேசுவையே நோக்குவோம். அவருக்கே முதலிடம் கொடுப்போம். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!
- Rev.S.A. இம்மானுவேல்
ஜெபக்குறிப்பு:-
இந்தியா முழுவதும் 7000 மிஷனெரிகளை உருவாக்க ஜெபியுங்கள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864