By Village Missionary Movement
Monday, 15-Jun-2026இன்றைய தியானம்(Tamil) 15.06.2026
நம்பிக்கை யார் மீது?
“..கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்” - எரேமியா 17:7
ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டபோது, அமெரிக்க வீரர்கள் அவரிடம் உங்கள் கடைசி ஆசை என்ன என்று கேட்டார்கள். சதாம் உசேன் அமைதியாக, என் கோட்டை எனக்குக் கொடுங்கள் அதை அணிய வேண்டும் என பதிலளித்தார். அவரது விருப்பப்படி கோட் அவரிடம் கொடுக்கப்பட்டது. அதை பார்த்த ஒரு சிப்பாய் இப்போது ஏன் கோட் அணிகிறீர்கள்? என்று ஆச்சரியமாக கேட்டார். சதாம் கூறிய பதில் பலரையும் சிந்திக்க வைத்தது: “இன்று மிகவும் குளிராக இருக்கிறது. குளிரில் நான் நடுங்க ஆரம்பித்தால், ஈராக் மக்கள் நமது தலைவர் மரண பயத்தில் நடுங்குகிறார் என்று நினைக்கக்கூடும்” என்றார். அவர் தன் வாழ்க்கையின் இறுதி நிமிடங்களில் கூட தன்னுடைய மரியாதையையும், நம்பிக்கையையும் காப்பாற்ற முயன்றார்.
இதை போலவே வேதத்திலும் ஒரு சம்பவம் எழுதப்பட்டுள்ளது. அந்நாட்களில் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் பெலிஸ்தருக்கும் யுத்தம் நடந்தது. அப்பொழுது காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள ஒரு மிகப்பெரிய வீரன் இருந்தான். அவன் உயரம் ஆறுமுழமும் ஒரு ஜாணுமாம். பெரிய ஆயுதங்களுடன் வந்த அவன், இஸ்ரவேல் சேனைகளைப் பார்த்து சத்தமிட்டு: உங்களில் யாராவது வந்து என்னுடன் யுத்தம் பண்ணுங்கள் என்று சவால் விட்டான். அதனால் இஸ்ரவேல் படையினர் அவனைப் பார்த்து மிகவும் பயந்தார்கள். அந்த சமயத்தில் அங்கு ஆடுமேய்க்கும் இளைஞன் தாவீது வந்தான். தாவீதிடம் வாள் இல்லை, கவசம் இல்லை, பெரிய ஆயுதம் கூட இல்லை. ஆனால் அவனிடம் இருந்தது கர்த்தர் மேல் நம்பிக்கை. தாவீது கோலியாத்திடம், நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன் என்றான். தாவீது ஒரு கல்லை எடுத்து, கவணிலே வைத்து சுழற்றி, எறிந்தான். அந்தக் கல் கோலியாத்தின் நெற்றியில் பதிந்து அவன் தரையிலே விழுந்தான். இவ்விதமாக சிறிய தாவீது பெரிய கோலியாத்தை மேற்கொண்டான்.
இதை வாசிக்கின்றதான பிரியமானவர்களே! இவ்வுலகில் அநேகர் கடவுள் நம்பிக்கை இல்லாமல் வாழ்கின்றனர். சிலர் தங்கள் மீது நம்பிக்கை வைக்கின்றனர். இன்னும் சிலர் தங்களின் பிள்ளைகள், உறவினர், பணம், பதவியின் மீது நம்பிக்கை வைக்கின்றனர். ஆனால் எப்பேர்பட்ட கடினமான சூழ்நிலையாக இருந்தாலும் நம் தேவன் மீது நம்பிக்கை வைப்போமானால், ஜெயம் நிச்சயம். நம்புகிறவர்களை அவர் ஒரு போதும் கைவிடமாட்டார். நம்மை நித்திய ஜீவக்கரை வரை கொண்டு சேர்க்க வல்லவராயிருக்கிறார்.
- Mrs. சக்தி சங்கர்
ஜெபக்குறிப்பு:-
Mission Action Centre கட்டுவதற்கான இடங்கள் எல்லா தாலுகாவிலும் கிடைக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864