By Village Missionary Movement
Tuesday, 23-Jun-2026இன்றைய தியானம்(Tamil) 23.06.2026
சுயபுத்தியின் மேல் சாராதே
“…இந்த விஷயத்தில் மதியில்லாதவராயிருந்தீர்;..” - 2 நாளாகமம் 16:9
மாலைப் பொழுதில் சாலையின் ஓரமாக நடந்து கொண்டிருந்த ஒரு மனிதன் சிறிது தொலைவில் ஒரு பாம்பு ஊர்ந்து வருவதைக் கண்டு பதறிப்போய், செய்வதறியாது சாலையின் மறு ஓரத்தை நோக்கி ஓடினான். அந்தோ, பரிதாபம்! வேகமாக வந்த ஸ்கூட்டர் அவன் மீது மோதியதில் பலத்த காயமடைந்தான். அங்கிருந்த மக்கள் துரிதமாக செயல்பட்டு அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர்.
வாழ்க்கையில் நமக்கு ஏற்படுகின்ற துன்பங்களை விட, அதைக் குறித்த சிந்தனைகளின் வேகம் பல மடங்காகி நம்மை நிலை குலையச் செய்து விடுகின்றன. நாம் சந்திக்கின்ற பிரச்சனைகள் நாம் எதிர்பார்த்த கஷ்டங்களைத் தருவதில்லை. ஆனால் அதைக் குறித்த பயத்தால் பதறிப்போய் நாம் எடுக்கும் முடிவுகள், நமது நடவடிக்கைகளே பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. எத்தகைய சூழ்நிலையாக இருந்தாலும், அதின் நடுவில் தேவன் ஒரு வழியை வைத்திருப்பார் என்று விசுவாசித்தால் நாம் வெற்றி பெறுவது நிச்சயம்.
எத்தியோப்பியனாகிய சேரா, பத்துலட்சம் பேர்கள் சேர்ந்த சேனையோடும் முந்நூறு இரதங்களோடும் புறப்பட்டு ‘மரேசா’ வில் பாளையமிறங்கினபோது கொஞ்சமும் கலங்காமல் “தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்” என்று கர்த்தரிடம் மன்றாடி, உதவி பெற்று எத்தியோப்பிய மகா சேனையை முறியடித்த ஆசா, பாஷா என்ற இஸ்ரவேல் ராஜா தனக்கு (யூதாவிற்கு) எதிராக வந்த போது பொறுமையாக தேவ ஆலோசனையைக் கேட்டு செயல்படாமல், பதறிப் போய் கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களிலிருந்து, பொன்னையும் வெள்ளியையும் எடுத்து பென்னாதாத் என்னும் சீரியாவின் ராஜாவுக்குக் கொடுத்து அவனின் உதவியை நாடினதின் விளைவாக தேவன் அவனைக் கைவிட்டார். பல வேதனைகளைச் சந்தித்தான்.
“இந்த விஷயத்தில் மதியில்லாதவராயிருந்தீர்,” என்று ஞானதிருஷ்டிக்காரன் அனானி ஆசாவை எச்சரித்தான். அவசரப்படாமல் தேவனைத் தேடியிருந்தானென்றால் எத்தியோப்பிய பெருஞ்சேனையினின்று காப்பாற்றிய தேவன் அவனை பாஷாவிடமிருந்தும் காப்பாற்றி, தேவனுக்கு பிரியமான ராஜா என்ற உன்னத இடத்தை அடைந்திருப்பான். நாமும் தேவபிள்ளை என்ற உன்னத இடத்தை இழக்காமல் ஜாக்கிரதையாயிருக்க கர்த்தர் கிருபை செய்வாராக!
- Mrs. ஜாஸ்மின் பால்
ஜெபக்குறிப்பு:-
எல்லா மாவட்டங்களிலும் வாலிபர் முகாம் நடத்தப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864