By Village Missionary Movement
Thursday, 25-Jun-2026இன்றைய தியானம்(Tamil) 25.06.2026
சாந்தம்
"மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே" - யாக்கோபு 1:20
“அப்பா எந்திரிங்க, என்னை விட்டு போயிடாதீங்க” என்று மரித்துப்போன தன் தந்தையைப் பார்த்து கதறி அழுதான் வாட்சன். பணத்துக்கு ஆசைப்பட்டு தன் அப்பாவின் நண்பர் இவர்களுடைய சொத்துக்கள் அனைத்தையும் ஏமாற்றி தன் பெயரில் மாற்றிக் கொண்டார். இதை அறிந்த வாட்சனின் அப்பா மன வேதனை அடைந்து மாரடைப்பால் காலமானார். மிகவும் கோபமடைந்த வாட்சன், அப்பாவின் நண்பரை கொலை செய்து அவரை பழி வாங்கினான். இதினிமித்தம் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை பெற்றான். சிறையில் அடைக்கப்பட்ட வாட்சன் குற்ற உணர்வோடு காணப்பட்டான். அவன் கொலை செய்த அந்த நபரின் குடும்பத்தினர் மிகுந்த வேதனையோடு காணப்பட்டாலும், அவர்கள் வாட்சன் மீது கரிசனை கொண்டு அவன் மனம் மாற வேண்டுமென்று ஜெபித்து வந்தனர்.
அந்த சமயத்தில் ஜெயிலுக்கு சுவிசேஷம் அறிவிக்க மிஷனெரி ஒருவர் வந்தார். அவர் அன்றைய தினம் யாக்கோபு 1:20 ஐ கூறி, நம்மிடம் கோபம் காணப்படுமேயானால் நம்மால் எதையும் சாதிக்க முடியாது. ஏனென்றால் கோபம் மிகவும் பொல்லாதது. அது நம்மில் காணப்படும் தேவ சாயலை கெடுத்து விடும். நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது (எபேசியர் 4:26) என்ற வசனத்தையும் அவர்களுக்கு போதித்து அறிவுரை கூறினார். அவர் போதனையை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த வாட்சன், தன் தவறை உணர்ந்து இயேசுவிடம் மன்னிப்புக் கேட்டான். தன் பாவங்களை ஆண்டவரிடம் அறிக்கை செய்து, பாவமன்னிப்பின் நிச்சயத்தை பெற்றுக் கொண்ட அவனுக்குள் தேவ சமாதானம் உண்டானது. மூர்க்கமான கோபத்துடன் காணப்பட்ட அவனின் முகம் சாந்தமாக மாறியது. அனுதினமும் அதிகாலையிலே எழுந்து பாடல் பாடி, வேதம் வாசித்து, ஜெபிக்க ஆரம்பித்தான். சிறையில் இருந்தவர்களுக்கு சுவிசேஷம் அறிவித்தான். வாட்சனின் தண்டனை காலம் முடிந்த போது, அவனின் தந்தையை ஏமாற்றின நபரின் குடும்பத்தினர் அவனுக்கு சேர வேண்டிய எல்லா சொத்துக்களையும் அவனிடம் திரும்ப கொடுத்தனர். அவன் தேவனுக்கு நன்றி கூறினான். அதன் பிறகு அவன் எப்போதுமே சாந்த குணமுள்ளவனாய் காணப்பட்டான்.
இதை வாசிக்கிற அன்பு நண்பர்களே, மனுஷனின் கோபம் வீண். நம்முடைய பிரச்சனை எதுவாக இருந்தாலும் அதை அமைதலாய் தேவனிடம் சொல்லும் போது, அவர் நமக்காக வழக்காடி நமக்கு நியாயம் கிடைக்கப் பண்ணுவார். ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்தது போல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். எந்த காரியமானாலும் கோபப்படாமல் நிதானமாய் இருப்போம். நம் வாழ்வை தேவனுடைய கரங்களில் ஒப்படைப்போம். அவரே நம்மை ஆளுகை செய்யட்டும்.
- R. பிளஸ்ஸி ஜெனிபர்
ஜெபக்குறிப்பு:-
நம் சிறுவர் முகாமில் கலந்து கொண்ட பிள்ளைகளுக்கு தேவ பாதுகாப்பு உண்டாக ஜெபியுங்கள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864