By Village Missionary Movement
Saturday, 27-Jun-2026இன்றைய தியானம்(Tamil) 27.06.2026
கன்மலையாகிய இயேசு
“...அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே” - 1 கொரி 10:4
ஒரு கடலில் கப்பல் சென்று கொண்டிருந்த போது திடீரென்று அடித்த புயலில் கப்பல் சேதமாகியது. அக்கப்பலில் பயணித்த பலரும் கடலில் தத்தளித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். ஒரு சிறுவன் மட்டும் அதிர்ஷ்டவசமாக பாறை மீது தள்ளப்பட்டான். 2 மணி நேரம் கழித்து மீட்புக்குழுவினர் வந்து பாறை மீது இருந்த சிறுவனை மீட்டனர். அப்பொழுது அவனிடம் உனக்கு பயமாக இல்லையா? என்று கேட்டனர். அதற்கு அவன் உறுதியான பாறை மீது நான் இருந்ததினால், பிழைத்துக்கொள்வேன் என்ற நம்பிக்கை எனக்குள் வந்தது என்றான்.
வேதத்திலும் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து விடுதலையாக்கி, கானான் தேசத்திற்கு மோசே வழிநடத்திச் சென்ற போது, தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டனர். அப்போது ஜனங்கள் மோசேயிடம் வாதாடினர், கல்லெறிய முற்பட்டனர். மோசே கர்த்தரை நோக்கி ஜெபித்தார். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன்; நீ அந்தக் கன்மலையை அடி; அப்பொழுது ஜனங்கள் குடிக்கத் தண்ணீர் அதிலிருந்து புறப்படும் என்றார்; அப்படியே மோசே இஸ்ரவேல் மூப்பரின் கண்களுக்கு முன்பாகச் செய்தார். இஸ்ரவேல் ஜனங்கள் தண்ணீர் குடித்தனர். இதைப் பவுல் எழுதும் போது எல்லோரும் ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தனர், அந்தக் கன்மலை கிறிஸ்துவே என்கிறார். இப்போதும் நம் குறைவுகளை நிறைவாக்குகிறவராய் இருக்கும் கன்மலை கிறிஸ்துவே. தாவீது என் கன்மலை, என் கோட்டை என தேவனை கூறுகிறார். அதனால் எதிரிகள் அவரை நெருக்கினாலும் மேற்கொள்ள முடியவில்லை. சவுல் பின் தொடர்ந்து வந்தாலும், தாவீதை தப்புவித்து காப்பாற்றுகிறார். இஸ்ரவேல் ஜனங்கள் வழிநடந்து போகும் போது மீண்டும் தண்ணீர் கிடைக்காமற் போகிறது. அப்போது தேவன் பேசு என்கிறார். மோசே மக்கள் முறுமுறுத்ததினால் கோபப்பட்டு, பழைய அனுபவத்தை வைத்து கன்மலையை அடிக்கிறார், தண்ணீர் வந்தது. அதனால் கானானின் வாழ்வை இழக்கிறார். ஏனெனில் கிறிஸ்து ஒரே தரம் அடிக்கப்பட வேண்டும்.
நமக்காக உலகத்தில் வந்து பாடுபட்டு, மரித்து உயிர்த்த கன்மலையாகிய கிறிஸ்து, இன்று நம் குறைவுகளைத் தீர்க்க நம்முடன் இருக்கிறார். நாம் அவருடன் பேசினால், அதாவது நம் குறைவுகள், தேவைகள், கஷ்டங்கள், நெருக்கங்களை சொல்லும் போது தேவன் அவற்றை மாற்றுகிறார். எப்பேர்பட்ட கடினமான சூழ்நிலைகளாக இருந்தாலும் நமக்கு உதவி செய்வது அவருக்கு லேசான காரியம். எனவே சூழ்நிலையை கண்டு நாம் அஞ்ச வேண்டாம். சங்கீதக்காரர் கூறுகையில், “கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன். அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.” உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் கூடவே இருக்கிறேன் என்றவர் வாக்கு மாறாதவர். அவர் உடனிருந்து நம்மை நடத்துவார். ஆகவே கன்மலையாகிய கிறிஸ்துவை பற்றிக் கொள்ளுங்கள்.
- S. சிந்து
ஜெபக்குறிப்பு:-
நம் வாலிபர் முகாமில் கொண்ட வாலிபர்கள் தாங்கள் எடுத்த தீர்மானத்தில் உறுதியாயிருக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864