By Village Missionary Movement
Monday, 29-Jun-2026இன்றைய தியானம்(Tamil) 29.06.2026
ஆண்டவரா?ஆசீர்வாதமா?
“…அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்” - யோபு 23:10
ஊழியத்தில் வல்லமையாய் பிரகாசிக்கும் ஒரு சகோதரி, தன் சாட்சியைத் தனது புஸ்தகத்தில் எழுதியிருந்தார். ஊழியத்தின் ஆரம்ப நாட்களில் ஒரு நாள் ஆண்டவருடைய சத்தத்தை தெளிவாக கேட்டார், “என் மகளே, நீ நேசிக்கும் அந்த நபரை விட்டுவிடு. உன்னை நான் பயன்படுத்த விரும்புகிறேன்” என்று. அந்த சகோதரிக்கு தன் உயிரைக் கேட்பதுப் போல, இருதயம் நொறுக்கப்பட்டது. ஆனாலும், என்னைப் படைத்த, என்னை நேசிக்கும் தேவன் ஒரு நாளும் எனக்குத் தீமைச் செய்ய மாட்டார் என்ற முழு நிச்சயத்தோடு, அந்த நபரை விட்டு விலக ஆரம்பித்தார். சிறிது நாட்களில் அநேகருக்கு ஆசீர்வாதமாக, வல்லமையாகப் பயன்படுத்தப்பட்டார்.
வேதத்தில் தேவன் ஆபிரகாமைச் சோதிக்க அவர் புத்திரனும், ஏகசுதனும், நேசகுமாரனுமாகிய ஈசாக்கை தகனபலியிடச் சொன்னார். தன்னுடைய மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய ஈசாக்கை தேவனுக்காக பலிபீடத்தில் தகனபலியிட முற்பட்டார். சாராளிடம் அதை தெரிவிக்கவில்லை. மோரியா மலைக்குத் தன்னுடன் வந்த இரண்டு வேலைக்காரரும் தன்னை தடை பண்ணக் கூடாது என்பதற்காக வழியிலே அவர்களை நிறுத்தி விட்டார். தேவனுக்கும், தனக்கும் உள்ள ஐக்கியத்தில் எந்த உறவும் ஆபிரகாமுக்குத் தடையாக இல்லை. தேவன் மேலுள்ள அன்போடும், விசுவாசத்தோடும், ஈசாக்கை பலியிட முற்பட்டபோது, கர்த்தருடைய தூதனானவர், “பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே” என்றார். பின்னும் கர்த்தர் ஆபிரகாமிடம் நீ உன் புத்திரன் என்றும், உன் ஏக சுதன் என்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தைச் செய்தபடியால்; நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப் போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன் என்றார். ஆபிரகாம் கர்த்தரின் சொல்லுக்கு கீழ்ப்படிந்தபடியினால், “உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்” என்ற வாக்குத்தத்தத்தைப் பெற்றுக் கொண்டார்.
ஆம், பிரியமானவர்களே, தேவன் நம்மை சோதிப்பது, நம்மை விசேஷமாக அடையாளப்படுத்த. இன்று நம்முடைய இருதயம் எதைப் பற்றுகிறது? தேவனையா? அல்லது அவர் தந்த ஆசீர்வாதத்தையா? நாம் எதை நோக்கி பயணிக்கிறோம்? தேவ மகிமைக்காகவா? உலக மேன்மைக்காகவா? சாதாரண மனிதனாக இருந்த ஆபிரகாம், விசுவாசத்தின் தகப்பனாக தலைமுறை, தலைமுறையாய் பேசப்படுகிறார். தேவன் விட்டுவிடச் சொல்லுகிற காரியங்களை நாம் விட்டு விலகினால், நிச்சயம் நம் பேரைப் பெருமைப்படுத்துவார்.
- G. எஸ்தர் செல்வி
ஜெபக்குறிப்பு:-
நம் வாலிபர் முகாமில் கலந்து கொண்ட வாலிபர்களின் பரிசுத்த வாழ்வு காக்கப்பட ஜெபியுங்கள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864