By Village Missionary Movement
Wednesday, 01-Jul-2026இன்றைய தியானம்(Tamil) 01.07.2026
பிள்ளைகளே கேளுங்கள்!
“பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள்.” – நீதி. 4:1
பிள்ளைகளுக்கு பள்ளிகள் துவங்கி ஒரு மாதம் ஆயிற்று. வழக்கத்தின்படி பாடத்திட்டங்கள், வகுப்பறை செயல்பாடுகள் மற்றும் நண்பர்களுடன் உரையாடுதல் தொடர்ந்து விட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் அனைத்து வயதைச் சார்ந்த கண்மணிப் பிள்ளைகளுக்கும்தான் இந்த ஆலோசனை. கல்விக்கு மிகவும் முக்கியம் ஞானம். அந்த ஞானம் கர்த்தருக்குப் பயப்படும்போதுதான் கிடைக்கும் என்று வேதாகமம் பல இடங்களில் தெளிவாகக் கூறுகிறது. பிள்ளைகள் பெற்றோருக்குக் கர்த்தரால் கிடைக்கப்பெறும் சுதந்தரம் மற்றும் கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன் என்று வேதாகமம் சொல்லுகிறது. அந்த சுதந்தரத்தைக் கையாளுவதற்கான உரிமையைக் கர்த்தர் இந்த பூமியிலே அவர்களின் பெற்றோர்களுக்குத்தான் கொடுத்திருக்கிறார். ஆகவே அவர்களின் போதகங்களை எல்லாக் கரியத்திலும் கேட்டுக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டியது அவசியம். பெற்றோர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டிய விதத்தையும், அவர்கள் முதிர்வயதாகும்போது அவர்களைக் கனப்படுத்த வேண்டிய விதத்தையும் நீதிமொழிகளில் அறியலாம்.
எங்களுடைய பெற்றோர்கள் சிறுவயதில் தினமும் ஒரு நீதிமொழியைப் படிக்க எங்களை கட்டாயப்படுத்தினார்கள். ஒருமாதத்திற்கு அதிகபட்சம் 31 நாட்கள். ஆகவே தினமும் ஒரு நீதிமொழியை வாசித்து பயிற்சி செய்தோம். அதோடுக்கூட எங்கள் வாலிப நாட்களில் EU ஊழியத்தின் மூலமாக ACTS என்ற ஜெப முறையையும் ASPECTS என்ற வேத வாசிப்பு முறையையும் கற்றுக்கொண்டு கடைப்பிடித்தோம். பின்னர் காலப்போக்கில் பரிசுத்த ஆவியானவரின் ஒத்தாசையோடு வாழ்வின் தினசரித் தேவைகள், சவால்கள் ம்ற்றும் தூர தரிசனங்களைக் குறித்து வேதத்தில் கற்றுக்கொண்டும், பரிசுத்த ஆவியானவரின் ஒத்தாசையோடு ஜெபித்தும் ஜெயம் பெற்றும் வருகின்றோம்.
நீங்கள் படிக்கும் இடங்களில் சந்திக்கின்ற சவால்களை உங்கள் பெற்றோரிடமும், ஜெபத்தில் தேவனிடமும் தெரிவிக்கப் பழகுங்கள். மூத்தவர்களின் வாழ்க்கையின் அனுபவங்களும், வேதாகம அறிவும் உங்களை சரியாய் வழிநடத்திடும். நீதி.15:22ன்படி ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் நம்முடைய எண்ணங்கள் உறுதிப்படும். எனவே நல்ல ஆலோசனை கொடுக்கக்கூடிய உங்கள் மேல் கரிசனையுள்ள ஊழிய மூப்பர்களிடமோ அல்லது உங்கள் பராமரிப்பாளர்களிடமோ உங்கள் தடுமாற்றங்களை பகிர்ந்துகொள்ளுங்கள். நண்பர்களைத் தெரிந்தெடுப்பதில் கவனம் தேவை. எல்லோரிடமும் இன்முகத்துடன் பழகுங்கள். கர்த்தருக்குப் பயந்து, பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து, கல்வியிலும், கர்த்தர் உங்களுக்கு வைத்திருக்கும் மிகப்பெரிய எதிர்கால தரிசனத் திட்டத்திலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்!
- Mrs. மெர்சி அலெக்ஸாண்டர்
ஜெபக்குறிப்பு:
இம்மாத ஊழியங்களுக்காக, ஊழியர்களின் பிரயாண பாதுகாப்பிற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864