By Village Missionary Movement
Thursday, 02-Jul-2026இன்றைய தியானம்(Tamil) 02.07.2026
மதில் சுவற்றில் ஓட்டை
“...தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம் பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்” - 1 பேதுரு 4:7
வியாபாரி ஒருவர் வீட்டில் நிறைய பணம் வைத்திருந்தார். இதையறிந்த ஒரு திருடன் தினமும் இரவு அந்த வியாபாரியின் வீட்டை கொள்ளையடிக்க வருவான். அவரது வீட்டை சுற்றி பெரிய மதில் சுவர் இருப்பதால் கொள்ளையடிக்க முடியாமல் திரும்பிச் செல்வான். ஒரு நாள் வழக்கம் போல அந்த வீட்டிற்குச் சென்றான். அப்போது அந்த வீட்டின் சுவற்றில் ஒரு ஓட்டை இருப்பதைக் கண்டு அதின் வழியாக உள்ளே சென்றான். இப்போது அவன் நோக்கம் திருடுவதில் இல்லை. இந்த வீட்டிற்கு எப்படி இரவு மாத்திரம் மதில் சுவர் உண்டாகும் எனவும், அதே நேரத்தில் இன்று இரவு மாத்திரம் சுவரில் ஓட்டை இருக்கிறதே என்ன ஆச்சரியம்! இதன் உண்மையை அறிய வேண்டும் என்று எண்ணினான்.
எனவே அந்த வியாபாரியை தூக்கத்திலிருந்து எழுப்பி, அவரிடம் அவனது சந்தேகத்தைக் கேட்டான். வியாபாரி சற்று யோசித்துவிட்டு, தினமும் இரவு இயேசுவிடம் என்னையும், எனக்குரியதையும் பாதுகாக்கும்படி ஜெபிப்பேன். இன்றோ மிகுந்த களைப்பாயிருந்தபடியால் ஜெபிக்க மறந்து போனேன். படுக்கையில் விழுந்து அப்படியே தூங்கி விட்டேன் என்றார். திருடன் இயேசு கிறிஸ்துவின் வல்லமையால் தொடப்பட்டான்.
எனக்கன்பான தேவ மக்களே! இங்கே பாருங்கள் வியாபாரியின் வீட்டிற்கு எதுவரைக்கும் பாதுகாப்பு சுவர் இருந்தது. அந்த வியாபாரி ஜெபித்து வந்த நாள் வரை இரவு நேரத்தில் அந்த பாதுகாப்பு சுவர் இருந்தது. எப்பொழுது பாதுகாப்பு சுவரில் ஓட்டை தெரிந்தது? அவர் ஜெபிக்க மறந்த போது. ஆம், யோபு புத்தகத்தில் முதல் அதிகாரத்தை வாசிப்பீர்களென்றால், சாத்தான் (திருடன்) தேவ சமுகத்துக்கு வருகிறான், தேவன் சாத்தானை (திருடனை) பார்த்து ஒரு கேள்வி கேட்கிறார். எங்கேயிருந்து வருகிறாய், அவனோ எங்கும் சுற்றித்திரிந்து வருகிறேன் என்கிறான். அப்போது தேவன் என் தாசனாகிய யோபு வீட்டிற்கு போனாயா? என்றார். அப்பொழுது சாத்தான் நீர் அவனையும், அவனுக்குள்ளதையும் வேலியடைத்து வைத்திருக்கிறீர் என்றான்.
நாம் ஜெபிக்கும் வரை நமக்கோ, நமது உடமைகளுக்கோ மிகுந்த பாதுகாப்பை தேவன் தருவார். ஜெபத்தில் சற்று சோர்வு காணப்படும் போது பாதுகாப்பு சற்று குறையும். மோசே ஜெபித்த போது தான் இஸ்ரவேலருக்கு, யோசுவாவுக்கு தேவ உதவி கிடைத்தது. யோசுவாவின் கூட்டம் அமலேக்கியர்களை வென்றார்கள். மோசேயின் ஜெபத்தில் தளர்வு ஏற்பட்டபோது அமலேக்கியர்கள் மேற்கொண்டார்கள் (யாத் 17:12-15). அதலால் பிரியமான மக்களே, ஜெபிப்பதில் ஜாக்கிரதையாயிருங்கள். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!
- Rev.S.A இம்மானுவேல்
ஜெபக்குறிப்பு:
பசித்தோருக்கு உணவளிக்கும் திட்டத்தின் மூலம் பயனடைவோர் கர்த்தரின் அன்பை அறிய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864