By Village Missionary Movement
Thursday, 15-Jul-2021இன்றைய தியானம்(Tamil) 14-07-2021 (Bible Characters Special)
அரிமத்தியா ஊர் யோசேப்பு
“...பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்;…” – 1 யோவான் 4:18
இஸ்ரவேலின் உயர்நீதிமன்றம் போன்றது சனகெரிப் ஆலோசனைச் சங்கம். அதில் கனம் பொருந்திய ஆலோசனைக்காரனாக இருந்தவர்தான் அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு. அச்சங்கத்தின் தீர்ப்பின்படிதான் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அச்சங்கத்தின் உறுப்பினராக இருந்துகொண்டு இயேசுவைப் பின்பற்றுவது ஆபத்தானது. ஆனால் தன் செல்வாக்கு, ஜீவன் எல்லாவற்றையும் துச்சமாக மதித்து இயேசுவைப் பின்பற்றினார் இந்த யோசேப்பு. ஐசுவரியவான்கள் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிது என்று இயேசுவே கூறியிருந்தபோதிலும், ஐசுவரியவானாகிய அவர் தேவராஜ்யம் வரக் காத்திருந்தார். ஆரம்பத்தில் யூதருக்கு பயந்ததினால் அந்தரங்க சீஷனாக இருந்த அவர், இயேசுவின் மரணத்திற்குப் பிறகு பின்மாற்றமடைந்துவிடவில்லை. பாவிகளுக்காக மரித்து, உயிரோடு எழுவேன் என்ற இயேசுவின் வார்த்தைகளை முழு நிச்சயமாக விசுவாசித்தார். எனவே இப்போது பகிரங்கமாய் பிலாத்துவினிடத்தில் துணிந்து போய் இயேசுவின் சரீரத்தைக் கேட்டு வாங்கி, சனகெரிப் சங்கத்தில் அங்கம் வகித்த நிக்கோதேமு என்ற சகவிசுவாசியுடன் இணைந்து, இயேசுவை மிக்க மரியாதையுடன் அடக்கம் செய்தார். யூதருக்கு சற்றும் பயப்படாமல் அவர் இவ்வாறெல்லாம் எப்படி செயல்பட்டார்? அவர் இயேசுவின் மேல் வைத்திருந்த பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளியது. அன்பினால் கிரியை செய்கிற விசுவாசம் அவரிடம் இருந்தது. தன் விசுவாசம் செத்ததல்ல, அது உயிருள்ளது என்று தன் கிரியையினால் நிரூபித்தார்.
இயேசுவின் உயிர்த்தெழுந்த நாளை நினைவுகூர ஆயத்தமாயிருக்கும் நம்மோடு, இன்று யோசேப்பு நிழலாட்டமாய் பேசிக்கொண்டிருக்கிறார். கிறிஸ்தவ எதிர்ப்பு அதிகரித்து வரும் இந்நாட்களில் விசுவாசத்திற்காக துணிந்து நிற்கவும் விலைக்கிரயம் செலுத்தவும் நாம் ஆயத்தமாயிருக்கிறோமா? உற்றார் உறவினருக்கு பயப்படுவதால் இயேசுவை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள தயங்குகிறோமா? கிறிஸ்தவர் என்று குறிப்பிட்டால், வேலை, ஸ்காலர்ஷிப் கிடைக்காது என்ற சூழ்நிலைகள் வரும்போது கர்த்தர் எல்லாம் பார்த்துக்கொள்வார் என்ற மனரம்மியம் உண்டா? சுவிசேஷ வேலைகளில் ஈடுபட்டால் பதவி பறிபோகுமே, பதவி உயர்வு பாதிக்கப்படுமே என்ற பயம் உண்டா? ஆனால் யோசேப்போ யூதருக்கு பயப்படவில்லை, தன் பதவி பறிபோகுமோ என அஞ்சவில்லை!
மேலும் விலையுயர்ந்த மெல்லிய துப்பட்டியை வாங்கி கன்மலையில் வெட்டப்பட்ட புதிய கல்லறையில் இயேசுவை நல்லடக்கம் செய்கிறார். இயேசுவுக்காக தம் ஆஸ்தியில் பெரும்பகுதியை செலவழிக்க மனமுவந்து முன்வருகிறார். இயேசு மரித்தபோது ஐசுவரியவானோடு இருந்தார் (ஏசா. 53:9) என்ற தீர்க்கதரிசனம் நிறைவேறும் தேவதிட்டத்தில் இந்த யோசேப்பு இணைக்கப்பட்டார். அவருடைய குணநலன்கள் நம்மிடத்திலும் காணப்பட்டால், தேவன் நிச்சயமாக அவருடைய மீட்பின் திட்டத்தில் நம்மையும் இணைத்துக்கொள்வார்.
- Mrs. கீதா ரிச்சர்ட்
ஜெபக்குறிப்பு:
ஒரு கிராமத்தை ரூ. 2000/- கொடுத்து தத்தெடுக்கும் குடும்பங்கள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250