By Village Missionary Movement
Saturday, 20-Nov-2021இன்றைய தியானம்(Tamil) 20-11-2021
கருணைக்காலம்
“நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை” – புலம்பல் 3:22
குஜராத் மாநிலத்தில் 2001ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று சில நொடிகள் ஏற்பட்ட பெரிய பூமியதிர்ச்சி மிகப்பெரிய அழிவை நம் நாட்டில் ஏற்படுத்தியது. அதில் பூஜ் என்னும் ஒரு மாவட்டம் அதிகமாக பாதிக்கப்பட்டது. அங்கு 400 பிள்ளைகள் குடியரசு தினத்தன்று அணி வகுத்து சென்றபோது, கீழே இடிந்து விழுந்த கட்டிடத்தின் கீழ் மாட்டிக் கொண்டதில் அநேகர் மரித்தனர். அஞ்சார் மற்றும் குட்ச் என்னும் மாவட்டங்களில் அந்தப் பிள்ளைகள் கூக்குரலிடும் சத்தங்களும், அவர்களை தேடும் பெற்றோரின் அவலக்குரல்களும் கேட்டன. டனிட்டா என்னும் ஒரு கிறிஸ்தவ பெண் அந்த நேரத்தில் தன் அலுவலகத்திலிருந்து வெளியே சென்றிருந்தார்கள். அவர்கள் சென்ற அதே நேரத்தில் பூமியதிர்ச்சி ஏற்பட்டு, அந்த அலுவலகம் முற்றிலுமாக இடிந்து விழுந்தது. அப்பொழுது அலுவலகத்தில் தான் இருந்திருந்தால் அன்றே மரித்திருப்பேன் என்றும், இன்றும் தான் உயிரோடிருப்பது கர்த்தருடைய சுத்த கிருபையே என்றார்.
இந்தக் கொரோனா காலத்திலும் எத்தனையோ தேவ ஊழியர்களும், தேவ பிள்ளைகளும் மரித்துப் போயினர். ஆனால் நாம் ஜீவிப்பதோ தேவனுடைய சுத்த கிருபையே! “சீலோவாமிலே கோபுரம்விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே. எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ? அப்படியல்லவென்று உங்களுக்குச்சொல்லுகிறேன். நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் என்றார்.” அப்பொழுது இயேசு ஒரு உவமையை சொன்னார், “ஒருவன் தன் திராட்சத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; ஒருவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை. அப்பொழுது அவன் இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான். அதற்கு அவன், “ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும், கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால் இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான்” என்றார்.
இந்த உவமையில் நம்மை கர்த்தர் ஜீவனோடு வைத்திருப்பது நாம் கனிகொடுக்க வேண்டும் என்பதற்காகவே. மரித்தவர்கள் பாவிகள் என்பதினால் அல்ல, அவர்கள் கர்த்தர் தங்களுக்கு கொடுத்த திட்டத்தை நிறைவேற்றி சென்று விட்டார்கள். நமக்கு கர்த்தரால் கொடுக்கப்பட்ட திட்டத்தை நாம் நிறைவேற்ற வேண்டும். ஜீவனுள்ளோர் தேசத்தில் நாம் இருப்பதினால் நம்மால் இன்னும் கர்த்தருக்காய் காரியங்களை செய்ய முடியும். அழிந்து கொண்டிருக்கிற ஆத்துமாக்களுக்காக ஜெபிக்க முடியும். தேவன் நம் தேசத்தை இரட்சிக்க வேண்டுமே என்று மன்றாட முடியும். கர்த்தர் கொடுத்த நேரங்களையும், தாலந்துகளையும் பயன்படுத்தி தேவ பணியைச் செய்திட முடியும். இது இந்த வருஷமும் இருக்கட்டும். நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன் என்று கர்த்தர் நம்மை இன்னும் ஜீவனோடு வைத்திருக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவோம். அல்லேலூயா.
- Bro. ஹனீஷ் சாமுவேல்
ஜெபக்குறிப்பு:
நம்முடைய ஊழியத்தில் பயன்படுத்தப்படும் நான்கு சக்கர வாகனங்கள் பழுதின்றி செயல்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250