By Village Missionary Movement
Sunday, 16-Jan-2022இன்றைய தியானம்(Tamil) 17-01-2022
பராக்கிரமசாலியின் தேவன்
“...உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ;… உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா...” – நியாயாதிபதிகள் 6:14
பிரபல எழுப்புதல் பிரசங்கி D.L. மூடி அவர்களின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான ஒரு சம்பவம் இது. தனது சரீர பெலவீனத்தினால் அவர் மருத்துவரை சந்திக்க நேர்ந்தது. அவருக்கு இருதய பிரச்சனை என்றும் ஓய்வு தேவை என்றும் டாக்டர் கூறினார். அவரின் மனம் அதிலிருந்து ஓய்வை விரும்பியது. இந்நிலையில் 5 மாதங்கள் கூட்டத்துக்காக அமெரிக்க நாடு நோக்கி கப்பலில் பயணித்து கொண்டிருந்தார். கடல் பயணம் ஒத்துக் கொள்ளாததால் தம் அறையிலேயே இருந்தார். நடக்கவிருக்கும் எழுப்புதல் கூட்டங்களில் தமது பணிகளை யார் யாருக்குப் பங்கிட்டுத் தர வேண்டும் எனத் திட்டமிட்டார். கடலில் புயல்காற்று வீசி, கடல் கொந்தளித்து கப்பலின் ஆதார கம்பம் இரண்டு துண்டாக உடைந்தது. கப்பலில் கடல் நீர் ஏற ஆரம்பித்தது. மூடி பிரசங்கியாரோ கர்த்தரை நோக்கிப் பார்த்தார். கர்த்தர் அவருக்கு “நீ ஓய்வு தேவை என தீர்மானித்தாய், நீ உன் முழு பெலத்துடன் செயல்படாவிட்டால் எனக்குப் பயன் இல்லை. ஆகவே நான் உன்னை என்னிடம் எடுத்துக் கொள்கிறேன்” என்று கூறிய வார்த்தைகள் அவரின் மனதை பிளந்தன. முழங்காலில் விழுந்தார். ஆபத்தில் தன்னை பிழைக்க செய்தால் முழு பெலத்தோடு அறிவிப்பேன் என்று கூறினார். அதன்பின் தன் பலவீனத்தை பற்றி தம் வாழ்நாளில் எண்ணியதே இல்லையாம். அதிகாலையில் அவர்களை காப்பாற்ற ஒரு கப்பல் வந்ததின் மூலம் அனைவரும் கரை சேர்ந்தனர். பிரசங்கியார் தேவனை போற்றி புகழ்ந்தார். அவர் உள்ளம் புதிய வைராக்கியத்தால் நிறைந்தது.
வேதத்திலும் கூட தேவன்பயன்படுத்திய பாத்திரங்களை கவனித்து பார்த்தீர்களானால், தன் காரியத்தில் முழு ஈடுபாட்டோடு செயல்பட்டு கொண்டிருப்பவர்களையே தம்முடைய மகிமைக்கென்று பயன்படுத்தினார். மழையையே கண்டிராத நாட்களில் மாபெரும் பேழையை செய்ய நோவாவை முன் அறிந்தார். மீதியானியர் கையிலிருந்து கோதுமையை தப்புவிக்க போரடித்துக் கொண்டிருந்த கிதியோனை பயன்படுத்தினார். 12 ஏர்மாடு பூட்டி உழுது கொண்டிருந்த எலிசாவிற்கு இரட்டிப்பான வரங்களை அளித்து பயன்படுத்தினார். ஆடுகளை மேய்த்து, சிங்கத்துக்கும், கரடிக்கும், ஆடுகளை தப்பிக்கச் செய்த தாவீதைத் தெரிந்து கொண்டார். தேவனுடைய வேலைக்காக முழு பெலத்தோடு நீங்களும் செயல்பட ஆயத்தம்தானா?
ஒரு வேளை பெலவீனத்தால் சோர்வானீர்களோ? தேவைகளை நினைத்து சோர்ந்து போனீர்களோ? தேவனுக்காய் வைராக்கியமாய் எழும்பி காரியங்களை நடப்பியுங்கள். உங்களைத் தம் மகிமைக்காக தம் வல்லமையை அளித்துப் பயன்படுத்துவார். அல்லேலூயா!
- R. மஞ்சுளா
ஜெபக்குறிப்பு:
வடமாநிலங்களில் புதிய பணித்தளங்கள் ஆரம்பிக்கப்பட. தேவன் கிருபை பாராட்ட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250