By Village Missionary Movement
Monday, 31-Jan-2022இன்றைய தியானம்(Tamil) 01-02-2022
பேசும் மரம்
“...நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம்... தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்: அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கிறார்.” – எபேசியர் 2:10
நான் மரம் பேசுகிறேன். சூர் என்ற கொடிய பாலைவனத்தில் நான் இருந்தேன். மழையைப் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டன. என்னைச் சுற்றிலும் வறட்சிதான் காணப்பட்டது. வெயிலின் கொடுமை என்னை வாட்டியது. பசுமை என் வாழ்வில் இல்லையே என அங்கலாய்த்துக் கொண்டிருந்த என் மனதில் அநேக கேள்விகள் எழும்பின. எத்தனையோ பசுமையான இடங்கள், நீர்ப்பாய்ச்சலான இடங்கள் என அழகான இடங்களை தேவன் படைத்திருக்க, நான் மட்டும் ஏன் இந்த வனாந்தரத்தில் இருக்கிறேன். இந்த வாழ்வால் எனக்கும் மகிழ்ச்சியே இல்லை, மற்றவர்களுக்கும் என்னால் எந்த பயனும் இல்லை என்ற எண்ணம் தினமும் எனக்குள் தோன்றிவிடும்.
இப்படியே பல வருடங்கள் போயின. திடீரென ஒருநாள் கூட்டமாக வரும் மக்களைப் பார்த்தேன். என் வாழ்விலே முதன்முதலாக இவ்வளவு பெரிய கூட்டத்தைப் பார்ப்பதால் வியப்படைந்தேன். அவர்கள் பேசும் சத்தமும் என் காதில் விழுந்தது, “ச்சே, இந்த தண்ணீர் எவ்வளவு கசப்பாயிருக்கிறது, இதை எப்படி குடிக்கமுடியும்” என்று முறுமுறுத்தனர். இப்படிப் பேசி அந்த பிரகாசமான முகத்துடன் கையில் கோலைப் பிடித்திருந்த மனிதரோடு வாதாடிக்கொண்டிருந்தனர். பின்னர் தான் அவர் பெயர் மோசே என்றுஅறிந்து கொண்டேன். அப்போது தான் மோசேயிடம் தேவன் என்னைக் காண்பித்தார். உடனே மோசே என்னை வெட்டி அங்கிருந்த தண்ணீரில் போட்டவுடனே கசப்பாயிருந்த தண்ணீர் மதுரமாய் மாறி விட்டது. என்ன ஆச்சர்யம்! வாழ்க்கையே கேள்விக்குறியாய் இருந்த நான்கூட, மூன்று நாட்களாக தண்ணீர் இல்லாமல் வனாந்தரத்தில் அலைந்த ஆறு லட்சத்திற்கும் அதிகமான இஸ்ரவேல் ஜனங்களின் தாகத்தை தீர்த்ததை எண்ணி மகிழ்ச்சியடைந்தேன். சற்று யோசித்துப் பார்த்தேன். எத்தனையோ ஆண்டுகள் கழித்து நடக்கும் இந்த நிகழ்வுக்காக ஆண்டவர் என்னை முன்னமே இந்த இடத்தில வைத்திருக்கிறாரே என எண்ணி ஆச்சரியமடைந்தேன். வனாந்தரத்தில் கேட்பாரற்று அல்ல, தேவதிட்டத்தின்படியே இருந்திருக்கிறேன் என எண்ணிய போது என் உள்ளம் குளிர்ந்தது. பெயரே இல்லாத நான் கூட பரிசுத்த வேதாகமத்தில் இடம்பிடித்து விட்டேன்.
இதை வாசிக்கும் அன்பு நண்பர்களே! உங்களுடைய வாழ்க்கையிலும் நான் ஏன் பிறந்தேன், இப்படிப்பட்ட தாய் தகப்பன் எனக்கு கிடைத்து விட்டார்களே, நான் அழகாக இல்லையே, நான் படிக்கவில்லையே, நல்ல குடும்ப சூழ்நிலை இல்லையே, எனக்கு வேலை கிடைக்கவில்லையே என்று பல கேள்விகளோடு இருக்கிறீர்களோ? கவலைப்படாதிருங்கள். மரமாகிய என்னை தேவன் கண்டு என்னை அநேகருக்கு ஆசீர்வாதமாக மாற்றுவாரானால் மனிதர்களாகிய நீங்கள் என்னிலும் விசேஷித்தவர்கள். உங்களுக்கும் உதவி செய்வது தேவனுக்கு லேசான காரியம். நான் ஆசீர்வதிக்கப்பட எப்படி காத்திருந்தேனோ அதே போல் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட பொறுமையோடிருங்கள். ஏற்ற காலத்தில் தேவன் உங்களை உயர்த்துவது நிச்சயம்.
- K. டேவிட் கணேசன்
ஜெபக்குறிப்பு:
இம்மாதம் முழுவதும் நடைபெறும் ஊழியங்களில் தேவகரம் உடனிருந்து வழிநடத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250