By Village Missionary Movement
Monday, 07-Mar-2022இன்றைய தியானம்(Tamil) 07-03-2022
நல்ல நிலத்தில் விழுந்த விதை
“சில விதை நல்ல நிலத்தில் விழுந்தது; அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார்...” – லூக்கா 8:8
ஒருமுறை இரண்டு நண்பர்கள் இணைந்து பொழுதுபோக்கிற்காக காட்டுக்கு வேட்டையாட சென்றனர். அதில் ஒருவர் மருத்துவர், மற்றவர் ஊழியர். அவர்கள் காட்டிற்குள் செல்லுகையில்., ஒரு கரடி எதிரே வந்தது. முதலில் இருவரும் பயந்தனர். பின்பு சற்று நிதானித்துக் கொண்டு ஒளித்துக்கொண்டு, அவரவர் தங்கள் கைகளில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கரடியை நோக்கிக் குறிவைத்து ஒரே நேரத்தில் கரடியை சுட்டனர். அந்தக் கரடி சுருண்டு விழுந்தது. கரடியின் அருகில் சென்று பார்த்தனர். அந்தக் கரடியின் நெஞ்சில் ஒரு குண்டு, காதில் பட்டு ஒரு குண்டு வெளியே சென்றிருந்தது, இருவரும் எது தங்கள் குண்டினால் வந்த காயம் என ஜாலியாக பேசிக்கொண்டனர். அந்த டாக்டர், நெஞ்சில் பட்டது நான் சுட்ட குண்டு, காரணம் மக்களுக்கு நான் சொல்லுவது எப்போதும் நேராக அவர்கள் இருதயத்திற்குள் போகிறது. அது அவர்கள் உயிர் சம்மந்தப்பட்டதாக இருப்பதால் அதை அப்படியே பின்பற்றுகின்றனர். அந்த ஊழியக்காரர் என்ன சொல்வது என தெரியாமல் நின்ற நேரத்தில், மருத்துவர் இந்த காதில் உள்ள குண்டின் ஓட்டைதான் நீ சுட்டது, காரணம் மக்களுக்கு எப்போதும் நீ கூறுவது காதைத் தாண்டி உள்ளே செல்வதில்லை என்பதாகக் கூறினார்.
ஆம், பிரியமானவர்களே! இது எத்தனை உண்மை. நாமும் கூட இப்படித்தான் பல நேரங்களில் வேதவசனத்தை கேட்கிறோம், வாசிக்கிறோம், ஆனாலும்கூட இந்த வார்த்தைகள் நம்மிடம் கிரியை செய்து மாற்றம் ஏற்பட இடம் கொடுக்கிறோமா? இதைத்தான் ஆண்டவர் லூக்கா 8: 4-8ல் உள்ள வசனங்களில் உவமையாகக் கூறுகின்றார். சிலர் வழியருகே விதைக்கப்பட்டவர்களாய் வசனத்தை கேட்க மட்டுமே செய்கின்றனர், சிலர் கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்களாய் பெலனில்லாமல் விழுந்து போகின்றனர், சிலர் முட்செடி போன்ற பிரச்சனைகள் வந்ததும் பின்வாங்கிப் போய்விடுகின்றனர். ஆனால் சிலர் மாத்திரம் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்களாய் அறுபதும், நூறுமாய் பலன் தருகின்றனர். பல நேரங்களில் நாமும் கூட இப்படித்தான் உலகப்பிரகாரமான காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை சிந்தனை செய்துகொண்டு, வேதவசனத்தை மறந்து போகிறோம். சிலருக்கு அது செவிகளில் ஏறுவதே இல்லை. எனவே நாம் இதில் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை ஆராய்ந்து, வேத வசனம் நம்மில் கிரியை செய்யும்படியாக அதை இருதயத்தில் ஏற்றுக்கொண்டு, தியானம் செய்வோமானால் நாம் உலகிற்கு ஆசீர்வாதமாயிருப்போம்.
- Mrs. ஸ்டெஃபி ராக்சன்
ஜெபக்குறிப்பு:
தோழமை ஊழியர்கள் மூலம் 5 கிராமங்களில் நடைபெறும் ஊழியங்களுக்காக; ஆலயமில்லாத கிராமங்களில் ஆலயம் கட்டப்பட ஜெபியுங்கள்.
Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250