By Village Missionary Movement
Tuesday, 15-Mar-2022இன்றைய தியானம்(Tamil) 15-03-2022
முழங்காலில் வல்லமை
“ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும் போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்.” - மாற்கு 11:24
மிஷனெரி ஒருவர் தான் ஊழியம் செய்ய அனுப்பப்பட்ட ஊழிய ஸ்தலத்திற்கு உற்சாகமாக சென்று ஊழியத்தை ஆரம்பித்தார். மாதங்களும், வருடங்களும் உருண்டோடினபோதும் இவரின் சுவிசேஷத்தை ஒருவரும் கேட்க மனதில்லாமல், முரட்டாட்டம் உள்ளவர்களாயும் மனம்போன போக்கில் வாழ்பவர்களாகவும் காணப்பட்டனர். இடைவிடாமல் ஊழியம் செய்தும் ஒரு சிலர் கூட இரட்சிக்கப்படாததால் எல்லா முயற்சியும் பயனற்றுப்போய் விட்டதே என்று நினைத்தவராக சோர்வுடன் பட்டணத்தின் வேறு பகுதிக்கு வந்தார். அங்குள்ள சாலை அருகில் கல் உடைக்கும் ஒருவரைப் பார்த்தார். பெரிய பெரிய கற்களை அவர் சம்மட்டியால் உடைத்துக் கொண்டிருந்தார். ஊழியர் அவரிடம் சென்று, “ஐயா, உங்களால் எப்படி இவ்வளவு பெரிய கடினமான பாறைகளை உடைக்க முடிகிறது?” என்று கேட்டார். அதற்கு கல் உடைப்பவர், “ஐயா, கடினமான பாறையை உடைக்கும்போது, முழங்காலில் நின்று உடைக்க வேண்டும். முழங்காலில் நிற்கும்போது எப்படிப்பட்ட கடினமான பாறையையும் உடைத்து விடலாம்” என்றார். அவர் மூலம் தேவன் தன்னோடு பேசுவதை ஊழியர் ஒரு நொடிப்பொழுதில் புரிந்துகொண்டார். உள்ளத்தில் உற்சாகமடைந்தவராக வீடு திரும்பினவர் அன்றிலிருந்து பலமணி நேரம் முழங்காலில் நின்று ஜெபித்து வெற்றி பெற்றார். முழங்காலில் நிற்பதுதான் வெற்றியின் இரகசியம்.
வேதத்திலே தானியேல், எலியா, பவுல், எஸ்தர் இவர்களெல்லாரும் ஜெபித்து வெற்றி கண்டவர்கள். நாமும் முழங்காலில் நின்று இருதயத்தை ஊற்றும்போது மிகுந்த பெலனை பெறமுடியும். உங்கள் வாழ்வில் ஏற்பட்ட தொடர் தோல்வியை எண்ணி சோர்ந்து போயிருக்கிறீர்களோ? எவ்வளவு முயற்சித்தும் எந்த மாற்றமும் இல்லையே என கண்ணீர் வடிக்கிறீர்களோ? உங்கள் முழங்கால்களை முடக்குங்கள். வெற்றிக்காக நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஜெயத்தை கட்டளையிடுபவர் நம் தேவன் மட்டுமே. மூளையால் செய்ய முடியாததை முழங்கால்களால் சாதிக்க முடியும். உங்கள் வாலிப பிள்ளையின் மனம்போன போக்கு மாற வேண்டுமென்று பலரது ஆலோசனையை நாடுகிறவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு யோசனை அந்தரங்கத்தில் முழங்கால் படியிடுங்கள். உங்கள் கண்ணீருக்கும் முழங்கால் ஜெபத்திற்கும் கண்டிப்பாய் பதிலுண்டு.
அன்பான ஊழியர்களே! நான் எவ்வளவு வருடம் ஊழியம் செய்கிறேன். ஆனாலும் ஒரு பலனும் இல்லை, இதுவரை நான் செய்த அனைத்திலும் பலன் ஒன்றுமில்லை என்று புலம்புகிறீர்களோ? கர்த்தருக்காக செய்யும் ஒரு சிறு காரியமும் வீணாவதில்லை என்பதை முழு நிச்சயமாய் நம்புங்கள். ஆனால் எதை செய்தாலும் முழங்காலில் நின்று செய்து பாருங்கள். நிச்சயம் அறுவடையைக் காண்பீர்கள்.
- Bro. ஹனீஸ் சாமுவேல்
ஜெபக்குறிப்பு:
மருத்துவமனை ஊழியங்கள், ஸ்கூல் மிஷன் ஊழியங்கள் தடையின்றி நடைபெற, புதிய வழிவாசல்கள் திறக்கப்பட ஜெபியுங்கள்.
Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250