By Village Missionary Movement
Wednesday, 04-May-2022இன்றைய தியானம்(Tamil) 04-05-2022
மன்னிப்பு
“…கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” - கொலோசெயர் 3:13
ஒரு பிஸியான தெருவில் பழக்கூடையை சுமந்து கொண்டு ஒரு வயதான பாட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பக்கமாக வந்த வம்புக்காரனான தினேஷ் கூடையை தட்டி விட்டான். உடனே ஏதோ சண்டை வரப்போகிறது என எல்லோரும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர். ஆனால் அம் மூதாட்டி சாந்தமாக தினேஷைப் பார்த்து, ‘’தம்பி ஏதோ தெரியாத விதமாக தட்டி விட்டாய். இனி யாருக்கும் இப்படிச் செய்யாதே’’ என்று சொல்லி குனிந்து அமைதியாக பழங்களைப் பொறுக்கி கூடையில் வைத்தார்கள். அவர்கள் சொன்னதைக் கேட்டதும் தினேஷ் தான் செய்த காரியத்திற்காய் மனம் வருந்தி பாட்டியிடம் மன்னிப்பு கேட்டான். பழங்களைப் பொறுக்கி பாட்டியின் கூடையில் வைக்க உதவினான். வேடிக்கை பார்த்த யாவரும் பாட்டியின் மன்னிக்கும் பண்பை பாராட்டினர்.
நாமும் கூட நம் வீட்டில், வேலை செய்யும் இடங்களில், நாம் செல்லுமிடங்களில் இது போன்று கோபத்தைத் தூண்டக்கூடிய அநேகக் காரியங்களை சந்திக்க நேரிடும். அப்போது நாம் கோபப்படாமல் அந்த இடத்தில் இயேசு கிறிஸ்து இருந்தால் என்ன செய்வாரோ அதைச் செய்வோமானால் சூழ்நிலை தலைகீழாய் மாறிவிடும். நாம் ஒருவருக்கொருவர் மன்னித்து சாந்தத்துடன் பதில் கூறும்போது சூழ்நிலை சுமூகமாக மாறிவிடும். யோபு எல்லாவற்றையும் இழந்து உடல் முழுவதும் பருக்கள் நிறைந்தவராய் இருந்தார். அப்போது ஆறுதல் சொல்ல வந்த நண்பர்கள் அவன் பாவி என்றும் செய்த தவறுக்கான தண்டனையை அனுபவிக்கிறார் என்றும் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அவரை மனமடிவாக்குகின்றனர். ஆனால் அவரோ கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார் கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்று தன் சூழ்நிலையை ஏற்றுக்கொண்டு இரம்மியமாய் இருந்த யோபுவை தன் பிறந்த நாளை சபிக்கும் அளவிற்கு வருத்தப்படுத்தினர். ஆனால் யோபு இறுதியில் அவர்களை மன்னித்து அவர்களுக்காக ஜெபம் பண்ணினார். உடலிலும், மனதிலும் காயங்கள் இருப்பினும் மன்னித்தார். இரட்டிப்பான ஆசீர்வாதத்தைப் பெற்றார்.
இதனை வாசிக்கும் நண்பரே! பாட்டியின் மன்னிக்கும் செய்கை தினேஷ் தன் தவறை உணர வைத்தது. யோபுவின் மன்னிக்கும் பண்பு இரட்டிப்பான ஆசீர்வாதத்தைத் தந்தது. நமக்கு அநீதி செய்பவர்களை, நமக்கு விரோதமாக பேசுபவர்களை மன்னிப்பது கடினம்தான். ஆனால் மன்னிக்கும் போது அவர்கள் மனம் மாற வாய்ப்பு உண்டு. நாமும் மன நிம்மதியோடு வாழலாம். யாரையாவது மன்னிக்க முடியாமல் விரோதத்தோடு இருக்கிறீர்களா? மன்னிக்கும் மனப்பக்குவம் பெற தேவனிடம் பெலன் கேட்போம். சூழ்நிலையை இனிமையாக மாற்றுவோம்.
- Mrs.அன்பு ஜோதி ஸ்டாலின்
ஜெபக்குறிப்பு:
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுதேர்வு எழுதவிருக்கும் மிஷனெரிகளின் பிள்ளைகள் மற்றும் சிறுவர் இல்லப் பிள்ளைகள் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250