By Village Missionary Movement
Friday, 06-May-2022இன்றைய தியானம்(Tamil) 06-05-2022
வாழ்வாங்கு வாழ்தல்
“நாம்... கிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருந்து... ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே அவருடைய கற்பனையாயிருக்கிறது” – 1 யோவான் 3:23
கவிட்சர்லாந்திலுள்ள ஹோட்டல்கள் விடுமுறை கழிக்க வந்தவர்களால் நிரம்பி வழிந்தது. பகலில் அதிக நேரம் பனிச்சறுக்கு விளையாடுவதிலும் இரவில் அதிக நேரம் நடனமாடுவதிலும் பத்துப் பதினைந்து நாட்களை செலவழித்த பின், ஓய்வுக்காக ( Rest cure) வீடு திரும்பும் நாள் நெருங்கி வந்தது. ஒரு ஞாயிறு மாலையில் சில நண்பர்கள் சேர்ந்து ஒரு ஆராதனை வேளையை ஒழுங்கு செய்தனர். ஹோட்டல் உரிமையாளரும் அதற்கு சம்மதித்தார். அன்று இன்னிசை கூடத்தையும், நடனக் கூடத்தையும் மூடும்படி கேட்டுக்கொண்டனர். லிண்ட்சே க்ளெக் என்ற தேவ ஊழியர் சிறப்புரையாற்ற அழைக்கப்பட்டார். கூட்டம் ஆரம்பிக்கும் சற்று நேரத்திற்கு முன்பு ஒரு நண்பர் க்ளெக்கிடம் வந்து அவர் பேசுவதற்கான தலைப்பைக் கொடுத்தார். தலைப்பு என்னவெனில்: “Life with the capital ‘L’ ”. ஜெபத்துடன் க்ளெக் தனது உரையை ஆரம்பித்தார், “‘L’ எனும் ஆங்கில பெரிய எழுத்தில் உள்ள செங்குத்துக்கோடு நாம் நம் ஆண்டவருடன் கொண்டுள்ள உறவையும், படுக்கைக்கோடு நாம் நம் சக மனிதர்களோடு கொண்டுள்ள உறவையும் குறிக்கிறது” எனக் கூறினார்.
உலகத்தை ஏறிட்டுப் பாராமல், “நானும் என் கடவுளும் மட்டும்” என்ற குறுகிய மனதுடன் யாவையும் துறந்து மடங்களில் வாழும் சந்நியாசி வாழ்க்கையானது “வாழ்வாங்கு வாழ்தல்” ஆகாது. அது சுய நலம் நிறைந்த வாழ்வாகும். அப்படியே கடவுளை மறந்து சமூகசேவை செய்வதில் திருப்தியடையும் வாழ்க்கை வெறும் கோட்டைப் ( blank dash) போன்றது. செங்குத்துக்கோடு மற்றும் படுக்கைக்கோடு ஆகிய இரண்டும் இணையும் போது மட்டுமே Capital ‘L’ எழுதமுடியும், வாழ்வாங்கு வாழ்தல் இயலும். மேலும் ‘L’ ஐ எழுதும் போது முதலாவது செங்குத்துக்கோடும், இரண்டாவதாக படுக்கைக்கோடும் வரையப்படுகிறது. அது போலவே, முதலாவது தேவனோடு உள்ள உறவு அவசியம் என்று மிகவும் வலியுறுத்திக் கூறினார்.
நகைச்சுவையான ஒரு கருத்துப்படம் செய்திதாளில் வெளிவந்தது. கந்தலாடையணிந்து ஒரு மூலையில் திகைத்துக் கொண்டிருந்த ஒரு பிச்சைக்காரனிடம் ஒரு போலீஸ் அருகில் சென்று, “நகரு உனக்கு இங்கு என்ன வேலை?” என அதட்ட, பிச்சைக்காரன் அழுதுகொண்டே “கோடீஸ்வரராகிய அன்ட்ரூ மரித்துவிட்டார்” எனக் கூறினார். உடனே போலீஸ் “அதனால் உனக்கென்ன? அவர் என்ன உனக்கு உறவினரா?” என கேட்க, பிச்சைக்காரன் மிகவும் சத்தமாக அழுதுகொண்டு, “அவர் எனது உறவினராக இல்லாததை எண்ணி அழுகிறேன்” என்றான். ஆம் உறவு மிக அவசியம். கடவுளோடு நாம் சீரான உறவு கொண்டிருந்தால் மட்டுமே அது நம்மை ஐசுவரியவானாக்கும். ஆம், இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தலும், ஒருவரிலொருவர் அன்பாயிருத்தலுமே வாழ்வாங்கு வாழ்தல் ஆகும்.
- Mrs. பியூலா செல்வராஜ்
ஜெபக்குறிப்பு:
“தேவன் சிருஷ்டித்த வாழ்வு” என்ற தலைப்பின் கீழ் இரண்டு பகுதிகளாகநாம் வெளியிட்டுள்ள புத்தகங்களின் மூலம் அநேக சிறுவர்கள் இயேசுவின் அன்பைக் கண்டுகொள்ள ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250