By Village Missionary Movement
Friday, 10-Jun-2022இன்றைய தியானம்(Tamil) 11-06-2022
உண்டு – இல்லை
“...தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம் ;...” – மத்தேயு 5:39
சமீபத்தில் வரும் செய்திகளையும் அதன் வீடியோ பதிவுகளையும் பார்க்கும்போது இளைய சமுதாயம் எங்கே சென்று கொண்டிருக்கிறது? எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது? என்று மிகவும் பயமாக உள்ளது. கல்லூரி மாணவிகள் பொது இடம், பேருந்து நிலையம் என்று கூட பார்க்காமல் தன் நிலையை மறந்து, அற்பமான காரியங்களுக்கெல்லாம் குடுமிப்பிடி சண்டை போடுகிறார்கள். இதை தடுக்காமல் மற்ற மாணவ, மாணவிகள் வீடியோ எடுத்து அதை சமூக ஊடகங்களில் பரப்பி விடுகிறார்கள். இதிலும் இன்னொரு மோசமான விஷயம் என்னவென்றால் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் பொது இடங்களில் ஒருவரை ஒருவர் அடிக்கிறார்கள். தலைமுடியைப் பிடித்து ஆக்ரோஷமாக சண்டை போடுகிறார்கள். சின்னச் சின்ன காரியங்களில் கூட விட்டுக்கொடுக்கும் மனம் இல்லை. “நீயா – நானா? உண்டு – இல்லை” என்று பார்த்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இது போன்ற இளம் தலைமுறையினரின் நிலை மிகவும் ஆபத்தானது!.
பரிசுத்த வேதாகமத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மத்தேயு 5-ம் அதிகாரத்தில் ஒரு அடிப்படை கிறிஸ்தவனின் குணநலன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என கூறுகிறார். அவருடைய போதனைகள் ஆச்சரியமானது! அன்றாடம் நமக்கு தேவையானது. தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம் (மத்.5:39) எனக் கூறுகிறார். யோசேப்புக்கு தனது சொந்த சகோதரர்கள் மூலம் தீங்கு ஏற்பட்டது. ஆனாலும் அவன் அதை எதிர்க்கவில்லை. மாறாக பொறுமையோடு இருந்தான். உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு என்று இயேசு கற்றுக்கொடுத்திருக்கிறார். இதனுடைய அர்த்தம் என்னவென்றால் நமக்கு தீங்கு செய்ய நினைக்கும்போது நாம் அமைதியாகிவிட வேண்டும்.
இதை வாசிக்கின்ற நண்பர்களே! நமது கைகளில் அநேக பொறுப்புகள் உள்ளதை மறந்து போய்விட வேண்டாம். நமக்கு தீமை என்பது ஏதோ ஒரு நாட்டின் எல்லையிலிருந்தோ, அல்லது நாம் கற்பனை கூட செய்யாத ஒரு நபரிடத்திலிருந்தோ வராது. நம்மோடு இருக்கிறவர்கள், நம்மைச் சார்ந்தவர்கள், நண்பர்கள் என நம்மைச் சுற்றியுள்ளவர்கள் மூலமாகவே தீமை நேரிடலாம். நாம்தான் பொறுமையாக, அமைதியாக இருக்கவேண்டும் என்று வேதத்தின் மூலம் கற்க வேண்டும். நமது சிறுவர்கள் வாலிபர்கள் என இளைய தலைமுறையினருக்கு நாம்தான் கற்றுக் கொடுக்க வேண்டும். “இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள்” என்பார்கள்.அமைதியாக வேத வசனங்களை ஆராய்ந்து பார்க்க மாணவ-மாணவியருக்கு கற்றுத்தர வேண்டும். உண்டு-இல்லை எனப் பார்த்துவிடுவோம் என்ற பேச்சுக்கும், பழக்கத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இளம் தலைமுறையினரை விட்டுக்கொடுத்து வாழ்கிறவர்களாக அவர்களை உருவாக்குவோம். தேச நலனைக் காப்போம்!
- Bro. சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
கடைசிக்கால எழுப்புதலுக்கென்று 120 மிஷனெரிகளை உருவாக்கும் திட்டத்தில் எடுக்கப்படுகின்ற பிரயசங்களை தேவன் வாய்க்கச் செய்ய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250