By Village Missionary Movement
Wednesday, 06-Jul-2022இன்றைய தியானம்(Tamil) 06-07-2022
இலகுவான சுமை
“வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே!.. நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” - மத்தேயு11:28
கடன் பிரச்சனை, பண நெருக்கடி, காதல் தோல்வி, படிப்பில் தோல்வி, ஒரு சொல் தாங்காமை, உறவுகளில் ஏற்படும் கசப்பு என்று இன்னும் அநேகக் காரணங்களால் மக்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். தொட்டதுக்கெல்லாம் தற்கொலை என்ற நிலைமைக்கு நமது நாடு போய்க் கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது. அதிலும் பெரிய வேதனை குடும்பத்தையும் இளம் தலைமுறையினரையும் வழி நடத்த வேண்டிய அப்பா ஸ்தானத்தில், அம்மா ஸ்தானத்தில் உள்ளவர்கள் சிறுபிள்ளைகளையும் சேர்த்துக் கொன்றுவிடுகிறார்கள். வாழவேண்டிய அவர்கள் சிறுவயதிலே மரித்துப் போய் விடுகிறார்கள். இந்த மாதிரியான செய்தியை கேள்விப்படுகின்ற, பார்க்கின்ற மற்ற சிறு பிள்ளைகளின் மன நிலைமை எப்படி இருக்குமென்று யோசித்துப் பார்க்கவே கலக்கமாக உள்ளது. தற்கொலை செய்துகொள்பவர்களில் பெரும்பாலானோர் “தற்கொலை செய்வது எப்படி?” என்று கூகுளில் தேடுபவர்களாய் இருந்திருக்கின்றனர். மனித வாழ்வுக்கான அர்த்தம், நோக்கத்தை மறந்து வாழ்க்கையின் சுமையைத் தாங்க முடியாமல், வாழவேண்டிய வயதில் அநேகர் வாழ்வைத் தொலைத்துவிட்டனர்.
பரிசுத்த வேதாகமத்தில் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து வாழவேண்டிய விதத்தைப் போதிக்கிறார். மத். 11:28,29,30 ஆகிய மூன்று வசனங்களில் பாரஞ்சுமக்கின்றவர்களை தன் பக்கமாக அழைத்து, “என்னிடத்தில் வாருங்கள் என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள்” என்று பேசுகிறார். அன்புக்குரியவர்களே! அவரால் மட்டுமே நம் வாழ்க்கையின் கவலையை மாற்ற முடியும். அவர் ஒருவர் மட்டுமே என் சுமை இலகுவானது என்று சொல்கிறார். இயேசு ஜனங்களுக்காக பாடுகள் பட்டு, சிலுவையில் தமது இரத்தத்தைச் சிந்தி மரித்து, மூன்றாவது நாள் உயிரோடு எழுந்தார்; அவர் பட்ட பாடுகளை நாம் நினைத்து அவரிடத்தில் நம்பிக்கை வைக்க வேதம் நம்மை அழைக்கின்றது.
நண்பர்களே! வாழ்க்கை என்பது வாழ்வதற்கே, இடையில் மாய்த்துக் கொள்வதற்கல்ல. நமக்கு ஏற்படும் பிரச்சனைகளைக் கண்டு சோர்ந்து போய்த் தவறான முடிவுகளை எடுக்கக் கூடாது. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பட்ட பாடுகளை நாம் நினைத்துப்பார்த்தால், நிச்சயமாக நம் வாழ்க்கையின் சுமை இலகுவாக மாறிவிடும். நீங்கள் எதையெல்லாம் பாரமென்று நினைக்கிறீர்களோ, அதையெல்லாம் கர்த்தரிடத்தில் சொல்லி, அவருடைய வேத வசனங்களை தியானிப்பதில் முழு மூச்சாய் இருங்கள். இது ஒரு அவசர உலகம் என்பார்கள். ஆனால் வாழ்க்கையை அவசரமாக அல்ல, நிதானமாகத்தான் வாழவேண்டும். உங்களின் சுமை இலகுவானது என்று அறிந்துகொள்ளுங்கள். அதிலிருந்து வெளியே வர முடியும் என்ற நம்பிக்கை வையுங்கள். உங்கள் வாழ்க்கை அற்புதமாயிருக்கும்! ஆமென்!
- T.சங்கர் ராஜ்
ஜெபக்குறிப்பு:
மிஷனெரிகளுடைய பிரயாணங்களில் தேவன் பாதுகாப்பைக் கட்டளையிட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250