By Village Missionary Movement
Monday, 05-Sep-2022இன்றைய தியானம்(Tamil) 06-09-2022
கைம்மாறு
“...உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்;... சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்;... பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்;...” - மத். 5:44
சில நாட்களாக நம் தமிழ்நாட்டிலே பெய்த மழையால் பூமி மட்டுமல்ல, நம் மனதும் குளிர்ந்தது, யோசித்துப்பாருங்கள். மழையானது பூமியில் வாழ்கின்ற நம் அனைவருக்கும் பல நன்மைகளைத் தருகிறது. ஆனால் அதை அனுபவிக்கும் நாம் அந்த மழைக்கு எந்த கைம்மாறும் செய்வதில்லை. இருப்பினும் அது பாரபட்சமின்றி அனைவருக்கும் நன்மை பயக்கின்றது. வேதத்தில் மத்தேயு 5 –ல் மலைப்பிரசங்கத்தில் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள். உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்” என்று கூறுகிறார். இதன் பொருள், நாம் மற்றவர்களுக்கு உதவ வேண்டும். அதுவும் எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி நாம் நன்மை செய்தால், அவர்கள் மீண்டுமாய் நமக்கு நன்மை செய்வார்கள் அல்லது அவர்களால் நமக்கு ஆதாயம் உண்டாகும் என்பதை எண்ணி, அவ்விதம் உதவி செய்யக்கூடாது என்று கூறுகிறார். பல நல்ல கருத்துக்களைக் கூறும் திருக்குறளிலும், “கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என் ஆற்றுங்கொல்லோ உலகு“ என்று கூறியுள்ளார்.
மேலும், நாம் அவ்வாறு கைம்மாறு எதிர்பார்த்து உதவுவோமானால் நாம் பரிசேயர்களைப் போலாவோம் என்றும் கூறியுள்ளார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அவர் வழியில் நடக்கிறவர்களாகிய நாம் நம்முடைய அன்பில் அவரை வெளிப்படுத்த வேண்டும், நம்முடைய அணுகுமுறையில் வித்தியாசங்கள் இருக்க வேண்டும். ஆண்டவர் இயேசுகிறிஸ்து எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி, நம்மால் அவருக்கு கைம்மாறு ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலையிலும், நாம் இரட்சிக்கப்பட தம் உயிரையே பலியாய்த் தந்தார்.
ஆனால், இன்று நாம் பலநேரங்களில் நம்மை நேசிக்கின்றவர்களை நேசித்து, நம்மை வெறுப்பவர்களை வெறுக்கின்றோம். இது கைம்மாறு எதிர்பார்க்கும் அன்பாகும். ஆனால் நம்முடைய அன்போ மாயமற்றதாய் இருக்க வேண்டும் என்பதே கர்த்தரின் விருப்பமாகும். எனவே கைம்மாறு எதிர்பாராமல், உண்மையாய் கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு உதவும் போது, தேவ நாமம் மகிமைப்படுவது மட்டுமின்றி, அவர்களும் தேவ அன்பை ருசி பார்க்க அது ஏதுவாகும்
- Mrs. ஸ்டெஃபி ராக்ஸன் .
ஜெபக்குறிப்பு:
கிராம ஊழியங்களுக்குச் செல்லும் ஊழியர்களின் பிரயாணப் பாதுகாப்பிற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250