By Village Missionary Movement
Monday, 12-Sep-2022இன்றைய தியானம்(Tamil) 13-09-2022
ஏமாறாதே
“எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்.” - 1 தெச. 5:21
சென்னையில் வசித்த போலி வழக்கறிஞரை பற்றிய செய்தி ஒன்றை சில நாட்களுக்கு முன்பாக வாசிக்க நேர்ந்தது. தான் ஒரு வழக்கறிஞர் என்று 20 வருடங்களாக அந்த ஆசாமி தன் குடும்பத்தினரையும் அநேக மக்களையும் எமாற்றியுள்ளார். இவருடைய போலித்தன்மை ஒருநாள் வெளிச்சத்திற்கு வர, இவர் மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்த அநேகருக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. இதைப் போல் சில வருடங்களுக்கு முன்பாக அமெரிக்காவில் பிரசித்திபெற்ற கைராசியான டாக்டராக கருதப்பட்டவர், ஒரு திருடன் என்று கண்டறியப்பட்டார். அந்த போலி டாக்டர் வசித்து வந்த நகரத்து மேயர், “இவன் இங்கிலாந்தில் இருந்து தப்பி நமது நகரத்தில் அடைக்கலமாக குடியேறியுள்ளான்“ என்று அவனைப் பற்றிய செய்தியை அறிவித்தார். அந்த மருத்துவரைப் பற்றிய நல்ல மனநிலை கொண்டிருந்த மக்களுக்கு இந்த செய்தி பெரிய இடியாக இருந்தது.
அப்போஸ்தலர் புஸ்தகத்தில் இயேசு கிறிஸ்துவுக்கு பின்பாக, தன்னை கிறிஸ்து என்று அறிவித்தவர்களும் தங்களை முன்னிறுத்தி நிலைநாட்ட விரும்பினவர்களையும் பின்பற்றி ஏமாந்த அநேகரைப் பற்றி 5ம் அதிகாரத்தில் வாசிக்கின்றோம். கர்த்தராகிய இயேசுவும் சுவிசேஷங்களில் கூறும்பொழுது ”ஒருவனும் உங்களை வஞ்சியாதபடி எச்சரிக்கையாக இருங்கள்” என்று சொன்னார். மேலும் நானே கிறிஸ்து என்று சொல்லி அநேகர் உங்களை வஞ்சிப்பார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறதை நாம் வேதாகமத்தில் வாசிக்க முடிகிறது. சாத்தான் நம்மை நேரடியாக வஞ்சிப்பது இல்லை. மாறாக மிகவும் தந்திரமாக அவன் ஒவ்வொருவரையும் ஏமாற்றுகிறான். அவனுடைய ஏமாற்று வழியில் நாம் சிக்கி அதற்கு பிறரை குறை சொல்வதில் அர்த்தமில்லை.
பேசுகிற எல்லாருடைய வார்த்தைகளை அப்படியே முழுவதுமாக நம்பாமல் “பரிசுத்த வேதாகமத்தில் என்ன சொல்லி இருக்கிறது” என்று வாசித்து வேதத்தின் வெளிச்சத்தில் பகுத்தறிந்து பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டும். “ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரையிலும் ஏமாற்றுகிறவர்கள் இருப்பார்கள்” என்று வழக்கத்தில் சொல்லவதை நாம் கேட்டிருப்போம். பிரியமானவர்களே, இன்றைய வேத பகுதியில் அப். பவுல் நிருபங்களில் தொடர்ந்து எழுதும் பொழுது, “எல்லாவற்றையும் சோதித்துப் பாருங்கள்., நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்” என்கிறார். சாத்தானின் தந்திரங்களுக்கு இரையாகாமல் எச்சரிக்கையுடன் இருக்க பரிசுத்த ஆவியானவர் மூலம் இன்று தேவன் நம்மை அறிவுறுத்துகிறார். நாம் கவனமாக இருக்க ஆண்டவர் உதவி செய்வாராக.
- P. ஜேக்கப் சங்கர்
ஜெபக்குறிப்பு:
மாவட்டங்கள்தோறும் 300 கிதியோன் (வாலிபர்)கள் எழும்ப, இவர்கள் ஒருமணி நேரம் ஜெபிக்கிறவர்களாகவும், ஒரு மணிநேரம் செயல்படுகிறவர்களாகவும் தங்களை அர்ப்பணிக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com