By Village Missionary Movement
Wednesday, 12-Oct-2022இன்றைய தியானம்(Tamil) 12-10-2022
உள்ளத்திலிருந்து ஜெபம்
“...அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் மறுஉத்தரவு கொடுக்கமாட்டேன்;...” - நீதிமொழிகள் 1:28
கலா நீண்டநாள் உழைப்பிற்குப் பின் வீடு கட்டி பிரதிஷ்டைக்கு அருகில் உள்ளவர்களை அழைத்தாள். ஆனால் எதிர்வீட்டு ராணியை மட்டும் அவளால் பார்க்க முடியவில்லை. ஞாயிறு ஆராதனையில் ராணியைப் பார்த்து ஆராதனை முடிந்ததும் சென்று வீடு பிரதிஷ்டைக்கு அழைத்தாள். அப்போது பேசும்போது “ ராணி, உன்னைப் பார்க்கவே முடியவில்லை” என்றாள். அதற்கு ராணி “கம்பெனியில் வேலை செய்வதால், பயங்கர பிஸி, ஜெபிக்கக்கூட அரைமணி நேரம் இல்லை என்றால் பாரேன்” என்றாள். அதற்கு கலா “அரைமணிநேரம் ஜெபிக்காவிட்டாலும் ஒரு சில நிமிடம் மனதிலிருந்து ஜெபித்தாலும் அதுவும் ஜெபம் தானே! ஜெபம் என்பது அப்பாவோடு பேசுவது, வேலைபார்க்கும் போதும் ஜெபிக்கலாம்“ என்றாள். ராணி சிந்தித்தவாறே தலையை அசைத்தாள்.
நாம் பிஸியான உலகத்தில் இருக்கிறோம். ஜெபிக்க நேரமில்லை என புலம்பிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் கிடைக்கும் நிமிடங்களை வீணாக்காமல் மனதிலிருந்து ஜெபிக்கலாம். இருவர் ஜெபிக்க ஆலயத்திற்கு சென்றனர். ஒருவர் ஆலயத்தின் உள்ளே கூட வராமல் தூரமாய் நின்று “தேவனே பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்” என்று சுருக்கமாக ஜெபித்தார். இவரே நீதிமானாக்கப்பட்டவராய் சென்றார். ஜெபம் செய்யும் நேரம், இடம் இவற்றை விட இதயத்திலிருந்து ஜெபிக்கிறோமா? என்பதே காரியம். உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஜெபிக்க வேண்டும். மனுஷன் முகத்தைப் பார்ப்பான். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார். (1சாமு.16 :7) என்பதை மறக்கக் கூடாது. குஷ்டரோகியாயிருந்த ஒருவர் ஆண்டவர் இயேசுவிடம் ஓடி வந்து “உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும்” ( மத் 8:2) என சுருக்கமாய் ஜெபித்து சுகத்தைப் பெற்றுச் சென்றான். சிலுவையில் தொங்கும் போது கள்ளன், “ஆண்டவரே நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்“ (லூக்கா 23:42) என ஜெபித்து பரதீசின் வாழ்வைப் பெற்றான்.
இதை வாசிக்கின்ற பிரியமானவர்களே! ஏதேனும் தேவை வரும்போது மட்டும் தேவனைத் தேடிச்செல்லும் நாம் அது முடிந்தவுடன் நன்றி கூறக் கூட மறந்து விடுகிறோம். மேலும் அவரது சத்தத்திற்கு செவிகொடுக்காமல் தேவைக்கு மட்டும் அவரைத் தேடும்போது, அவர் அந்த ஜெபத்திற்கு பதிலளிக்க மாட்டார் என்றும் வேதம் தெளிவாய்க் கூறுகிறது. எனவே கிடைக்கும் நேரம் எல்லாம் தேவனைத் தேடுவோம் அவரை முதன்மைப்படுத்துவோம். உள்ளத்திலிருந்து உண்மையாய் ஜெபிப்போம். தேவ ஆசீர்வாதம் பெறுவோம். ஆமென்.
- Mrs. அன்பு ஜோதி ஸ்டாலின்
ஜெபக்குறிப்பு:
ஆந்திரா மற்றும் ஓடிசாவில் 63 இடங்களில் மக்கள் ஆராதிக்க ஆலயம் அவசியமாய், அவசரமாய் இருக்கிறது. ஆலயம் கட்ட உதவும் நபர்கள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250