By Village Missionary Movement
Monday, 17-Oct-2022இன்றைய தியானம்(Tamil) 18-10-2022
இது நடக்குமா?
“கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும் இப்படி நடக்குமா?...” - 2 இராஜாக்கள் 7:2
அரசாங்க வேலையிலிருந்த ஒரு சபை விசுவாசி, அவரது மேலதிகாரி அநியாயமாக நடத்தினபடியால், மேலதிகாரியிடம் எதிர்ப்பைத் தெரிவித்தார். இதனால் வேலை போய்விடும் என்பது தெளிவாக அவருக்குத் தெரிந்தது. அவர் பயந்து போதகரிடம் சென்று ஜெபிக்கச் சொன்னார். இதற்காக போதகரும், சபை விசுவாசிகள் எல்லாரும் இணைந்து ஜெபித்து வந்தனர். தலைமை அலுவலகத்திலிருந்து விசாரணை செய்யும்படி இருவர் வந்தனர். அவர்களது மனதில் கர்த்தர் பேசினபடியால், விசுவாசியைக் கொடுமையாய் நடத்தின மேலதிகாரியின் மேல்தான் குற்றம் என்று எழுதி அனுப்பினர். மேலதிகாரிக்கு transfer-ம் வந்தது. மட்டுமல்ல, அவரது மேலான பதவியையும், விசுவாசிக்குக் கொடுத்தனர். ஆம், இப்படியெல்லாம் நடக்குமா? இது சாத்தியமாகுமா? என்று மனித மூளையின்படி நாம் நினைக்கும் காரியத்தில், ஆண்டவர் நமக்காக யுத்தம் செய்து ஜெயத்தைத் தருகிறவராயிருக்கிறார்.
வேதத்திலே சீரியாவின் ராஜா, இஸ்ரவேலின் தலைநகரமான சமாரியாவை முற்றுகை போட்டதினால் சமாரியாவிலே கொடிய உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. இஸ்ரவேலின் ராஜா கலக்கமடைந்து, எலிசா தீர்க்கதரிசியிடம் ஆள் அனுப்புகிறார். அவர்களிடம் எலிசா “நாளை இஸ்ரவேலில் சமாரியாவின் வாசலில் ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்படும்” என்று சொன்னார். அதைக் கேட்ட ராஜாவின் பிரதானி “இதோ கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும் இப்படி நடக்குமா?” என்று சந்தேகத்துடன் கேட்டு, இஸ்ரவேலின் தேவனை மட்டுப்படுத்தினான். ஆனால் நடந்தது என்ன தெரியுமா? கர்த்தர் சீரியரின் காதிலே மகா ராணுவத்தின் இரைச்சலைக் கேட்கப் பண்ணினார். கதிகலங்கிய சீரியர்கள் இஸ்ரவேலுக்குத் துணையாக அநேக ராஜாக்கள் வருகிறார்கள் என்று நினைத்து ஓட்டம் பிடித்தனர். கர்த்தர் எலிசா தீர்க்கதரிசி மூலம் சொன்னதுபோல் காரியம் மாறுதலாய் முடிந்தது.
பிரியமானவர்களே! உங்களுடைய வாழ்க்கையிலும் “இது நடக்குமா” என்ற கேள்வி உள்ளதா? ஒரு காரியத்தை தேவன் உங்களுக்கு வாக்குக் கொடுத்தும், அந்த பிரதானியைப் போல விசுவாசிக்க முடியாதபடி காணப்படுகிறீர்களா? தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. ஆராய்ந்துமுடியாத பெரிய காரியங்களையும், எண்ணி முடியாத அதிசயங்களையும் செய்கிற தேவன் மேற்கண்ட விசுவாசியின் வாழ்வில் செய்தது போலவே பெரிய காரியம் செய்வார். விசுவாசியுங்கள். ஆமென்.
- A. பியூலா
ஜெபக்குறிப்பு:
நமது கெத்செமனே வளாகத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 11 மணி முதல் 1 மணி வரை நடக்கும் சுகமளிக்கும் ஆராதனைக்கு வரும் வியாதியஸ்தர்கள் விடுதலையைப் பெற்றுக்கொள்ள ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250