By Village Missionary Movement
Thursday, 05-Jan-2023இன்றைய தியானம்(Tamil) 06-01.2023
எல்லாம் புதிதாயின
“இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின” – 2 கொரி. 5:17
புது வருடம் வந்தாயிற்று. நாமும் புதிய புதிய வாக்குத்தத்தங்களையும், புதிய ஆசீர்வாதங்களையும் விரும்புகிறோம். கடந்த வருடம் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் நிறைவேறியதா? அதைப் பெறுவதற்குரிய கட்டளைகளை நாம் கடைப்பிடித்தோமா என்பதையெல்லாம் சில நிமிடங்களாவது சிந்தித்த பின் புது வருடத்திற்குள் நுழைவோம்.
நாம் ஒரு புதுவீடு கட்டி குடிபோகும்போது தேவையில்லாத பொருட்கள், பயன்படுத்தாத பொருட்கள், ஒன்றுக்கும் உதவாத துணிமணிகள், இவைகளை நிச்சயமாக எடுத்துச் செல்லமாட்டோம். புது ஷோபா, புது பிரிட்ஜ், புது மேஜை, நாற்காலிகள் என்று தான் நாம் எடுத்துச் செல்வோம். அதுபோல் கிறிஸ்துவை அறியும் முன் நம் உள்ளத்திலிருந்த வேண்டாத சிந்தனைகளான பெருமையான எண்ணங்கள், பொறாமைகள், அசுத்தமான நினைவுகள், குப்பை போல் தேங்கிக் கிடக்கும் பகைகள், வைராக்கியங்கள், அடிமைத்தனங்கள் எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு கிறிஸ்துவுக்குள்ளான புதிய சிந்தையை, புதிய அன்பை, புது சந்தோஷத்தை, சமாதானத்தை, நீடிய பொறுமையை எடுத்துச் செல்வோம். கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக் கடவது என்று வேதம் கூறுகிறது. (பிலிப்பியர் 2:2) ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் தான் புது சிருஷ்டியாயிருக்கிறான்.
இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக கழுகை பார்க்கலாம். கழுகானது மிகவும் வலிமையான பறவையாக இருந்தாலும் வயதாகும் போது தன் சிறகுகளை உதிர்த்து விட்டு தன் அலகையும், கால் நகங்களையும் பாறைகளில் கொத்தி தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளும். சில நாட்களுக்குப் பின்பு புதிய சிறகுகளும், கால் நகங்களும் தோன்றி ஒரு புதிய பறவையைப்போல் உருமாறிவிடும். இப்படியாக தன்னை புதுப்பித்துக் கொள்ளும்.
பிரியமானவர்களே, கழுகைப்போல நாமும் நம்முடைய பழைய பாவ சிந்தனைகளை ஒழித்துவிட்டால் கிறிஸ்து நம்மைப் புதுப்பித்து நம் வாழ்க்கையை உயர்த்துவார். கிறிஸ்துவுக்குள் உண்மையான மனந்திரும்புதல், மாற்றங்கள் நிகழ்ந்தால் புது சிருஷ்டியாகிவிடலாம். தவறுகளுக்கும் குற்றங்களுக்கும் மனஸ்தாபப்பட்டு ஆண்டவரிடம் வந்தால், நம்மை அவருடைய இரத்தத்தால் கழுவி புதுப்பிப்பார். இதை வாசித்துக் கொண்டிருக்கிற நீங்களும் உங்களைப் புதுப்பித்து, புது சிருஷ்டிகளாக மாறி ஆண்டவரிடம் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கும் ஆசீர்வாதமாக மாறுங்கள். ஆமென்!
- Mrs. புவனா தனபாலன்
ஜெபக்குறிப்பு:
புதிதாக துவங்கப்பட்டுள்ள 24 மணி நேர சேனலான ஆமென் கிராமிய டிவி அநேக இலட்சங்களுக்கு ஆசீர்வாதமாக அமைய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864