By Village Missionary Movement
Tuesday, 16-May-2023இன்றைய தியானம்(Tamil) 16-05.2023
தேவனின் ஏக்கம்
“சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ!” - 1 கொரி. 9:16
வேதாகமக் கல்லூரியில் ஆசிரியையாக பணியாற்றிய ஒருவர் கர்நாடகாவில் ஊழியம் செய்து வந்தார். ஒரு நாள் மாலை, சபையிலுள்ள ஒரு தாயாருடன் இணைந்து கைப்பிரதி ஊழியம் செய்துவிட்டு, வீட்டிற்குத் திரும்பினார். அப்பொழுது ஆசிரியரது உள்ளத்தில் தேவன் ஒரு உந்துதலைக் கொடுத்தார். "இந்த வீட்டிற்குப் போய் சுவிசேஷம் சொல்" என்றார். "ஆண்டவரே! நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன். நாளைக்கு நிச்சயமாய் போய் சொல்லி விடுகிறேன்" என்று கூறி வீட்டிற்கு வந்து விட்டார். மறுபடியும் ஆண்டவர் அந்த வீட்டிற்குப் போகும்படி சொன்னார். ஆசிரியர் அதே பதிலைக் கூறிவிட்டு தூங்கி விட்டார்.
மறுநாள் காலை அந்த வீட்டிற்கு சென்றபோது, வீட்டிலெங்கும் அமைதி! ஆங்காங்கு நிற்பவர்களின் முகம் துக்கத்தால் கருத்திருந்தது. ஒரு நபரிடம் விசாரித்த போது இவ்வீட்டிலிருந்தவர் இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறினார். கேட்டவுடன் மனமுடைந்து போனார். சரீர சோர்வை பொருட்படுத்தாமல் செயல்பட்டிருப்பேனானால் இந்த நபரை ஆதாயப்படுத்தியிருக்கலாமே! என்று புலம்பினார். இதை எங்கள் வேதாகமக் கல்லூரியில் சொல்லும்போதும் கண் கலங்கினார்.
இந்த சம்பவத்திலிருந்து நம்முடைய ஆண்டவருடைய இருதயத்தின் வாஞ்சையையும் கிறிஸ்துவுக்காக கிரயம் செலுத்த மனமில்லாத நம்முடைய இருதயத்தையும் காணலாம். ஒவ்வொரு தனிமனிதன் மேலும் தேவன் கொண்டுள்ள கரிசனையைப் பாருங்கள். ஒருவரும் கெட்டுப் போவது அவருடைய சித்தமல்ல. ஒருவேளை நாம் நினைக்கலாம் "இந்த உலகிலுள்ள பில்லியன் கணக்கிலுள்ள மக்களில் எங்கோ ஒரு மூலையிலிருக்கும் என்னைத் தேவன் பார்ப்பாரா? என் ஜெபத்தைக் கேட்பாரா?" என்று! ஆனால் தேவனுடைய இருதயத்தைப் பாருங்கள். ஒரு தாய் பிள்ளை சாப்பிடவில்லை என்றால் திரும்பத் திரும்ப கேட்பதைப் போல, தேவன் அந்த நபருக்காக திரும்பத் திரும்ப ஆசிரியையிடம் கேட்கிறார். தேவனது இருதயத்தின் ஏக்கம் தான் எத்தனை?
பிரியமானவர்களே! கிறிஸ்துவுக்காக சிறு சிறு காரியத்தையும் தியாகம் செய்ய தயங்காதவர்களாக வாழ முயற்சிப்போம். வீட்டிற்கு வரும் பால்காரர், வாசலுக்கு வரும் காய்கறி பாட்டி, குப்பை எடுக்க வரும் அம்மா, துணி தேய்த்து கொடுக்க வரும் அண்ணன், பாத்திரம் கழுவ வரும் சகோதரி இவர்களிடம் ஒருமுறையாவது ஆண்டவரைப் பற்றி கூறியிருக்கிறோமா? அவர்கள் ஒவ்வொருவரும் இரட்சிக்கப்பட வேண்டுமென்று தேவன் வாஞ்சையோடு இருக்கிறார் என்பது 100% நிச்சயம். அவரது ஏக்கத்தை உங்கள் பாரமாக ஏற்று செயல்படுவீர்களா? அதற்கான எந்த கிரயத்தையும் செலுத்த முன்வருவீர்களா?
- Mrs. ரூத் அனீஸ்
ஜெபக்குறிப்பு:
நமது வளாகத்தில் நடைபெறும் கட்டுமான வேலைகள் மற்றும் அலுவலகப் பணிகளுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864