By Village Missionary Movement
Friday, 05-Jan-2024இன்றைய தியானம்(Tamil) 05.01.2024
சுவிசேஷ விதை
"அதற்கு என்ன சம்பவிக்கும் என்பதை அறியும்படி அதன் தமக்கை தூரத்தில் நின்று கொண்டிருந்தாள்" - யாத். 2:4
என்னுடைய சொந்த ஊர் சாத்தூரிலுள்ள ஆண்டாள்புரம். அங்கு சிவகாசியிலிருந்து எப்சிபா என்ற ஒரு அக்கா எங்கள் தெருவிற்கு வந்தார். கையில் பைபிளுடன் வெள்ளை நிற உடையில் சிரித்த முகத்துடன் எங்கள் தெருவில் உள்ள 15 வாலிபர்களை ஓரிடத்தில் கூட்டி சேர்த்து, இயேசுவின் அன்பை அறிவித்து, எங்கள் கைகளில் புதிய ஏற்பாட்டைக் கொடுத்து வாசிக்க சொல்லிச் சென்றார். மறுவாரம் அவர் வரும்போது என்னைத் தவிர வேறு ஒருவரும் அங்கு இல்லை. என் ஒருவனிடம் இயேசு கிறிஸ்துவின் அன்பை குறித்து இன்னும் சொல்ல ஆரம்பித்தார். என் குடும்பத்திற்காக ஜெபித்தார். தொடர்ந்து வாரந்தோறும் அங்கு வந்து என்னிடம் ஆண்டவரைக் குறித்து பேசி எனக்குள்ளாக ஏற்பட்ட மாற்றங்களை அவர் கண்காணிக்க ஆரம்பித்தார். கெட்ட வார்த்தைகளை பேசும் எனது சுபாவம் மாறியது. என் குடும்பத்தில் நான் ஒரு நல்ல மகனாக வாழ ஆரம்பித்தேன். வாரந்தோறும் அருகிலுள்ள ஒரு சபைக்கு சென்று ஞானஸ்நானம் பெற்று பின்னாட்களில் இயேசுவின் அன்பை எனது தெருவில் உள்ள சிறுபிள்ளைகளுக்கு அறிவிக்க ஆரம்பித்து.. சிறிய அளவில் ஊழியம் செய்ய ஆரம்பித்தேன். எப்சிபா அக்கா அதைக் கண்டு மிகவும் சந்தோஷப்பட்டார். பின்பு நான் என்னை முழுநேர ஊழியத்திற்காக அர்ப்பணித்து கடந்த 16ஆண்டுகளாக தேவனுடைய ஊழியத்தை செய்து வருகிறேன். வட இந்தியாவில் சட்டீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் பகுதிகளில் ஊழியர்களை உருவாக்குகிற உன்னத பணியில் கிராம மிஷனரி இயக்கத்தில் முழு நேர ஊழியனாக உள்ளேன்.
இன்றைய வேத பகுதியில் சிறுபிள்ளை மிரியாமின் ஞானமான பிரயாசம் எழுதப்பட்டுள்ளது. பிறக்கும் ஆண் பிள்ளைகளை எல்லாம் கொலை செய்ய வேண்டும் என்கிற ஆணை பார்வோன் ராஜாவால் எகிப்து தேசத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு தாய் தன் சிறுவயது மகளுடன் இணைந்து தன் மகனை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறார். அப்பொழுது ஒரு நாணற்பெட்டியில் குழந்தையை வைத்து அதை நதியில் விட்டு விட்டார். எகிப்து ராஜாவின் மகள் அங்கே ஸ்நானம் பண்ண வரும் போது மிரியாம் அவளிடத்தில் ஞானமாக பேசி குழந்தையை காப்பாற்ற என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்கிறாள். இறுதியாக குழந்தை காப்பாற்றப்பட்டது. மோசே என்று பெயரிடப்பட்டது. பின்னாட்களில் அந்த மோசே மிகப்பெரிய தலைவனாக உருவாகினார்.
இதை வாசிக்கும் நண்பர்களே! எப்சிபா என்ற ஒரு அக்கா எனக்குள் சுவிசேஷ விதையை விதைத்தார். அது என்னுடைய வாழ்வில் மிகப்பெரிய பலனை கொடுத்தது. வட இந்தியாவில் ஊழியர்களை உருவாக்கும் ஊழியனாக என்னைமாற்றியது. மிரியாம் எடுத்த ஒரு முயற்சி மிகப்பெரும் தலைவனை உருவாக்கியது. நண்பர்களே, நீங்களும் சுவிசேஷ விதையை விதைக்க தயாராக உள்ளீர்களா? அது ஒரு மனிதனுடைய இரட்சிப்பிற்காக நீங்கள் எடுத்து வைக்கிற முதல் அடியாகவும் இருக்கலாம், சிறிய ஒரு பிரயாசமாக இருக்கலாம். ஆனால் அதுவே பின்னாட்களில் மிகப்பெரிய ஒரு பலனை கொடுக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். ஆகவே உங்களால் முடிந்தவரை பிறருக்கு இயேசு கிறிஸ்துவை குறித்துச் சொல்லுங்கள். நீங்கள் விதையை விதையுங்கள்; தேவன் விளையச் செய்வார்.
- Bro. சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
தெபோராள் குழுக்களில் இணைந்துள்ள பெண்களின் குடும்பங்களை தேவன் தழைக்கும்படி கட்டளையிட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864