By Village Missionary Movement
Wednesday, 13-Mar-2024இன்றைய தியானம்(Tamil) 13.03.2024
தேவ கிருபை
"நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது" - ஆதியாகமம் 6:8
ஒரு நிலக்கரி சுரங்கத்தில் ஜேம்ஸ் வேலை செய்து கொண்டிருந்தார். எப்படியாவது எல்லாருக்கும் இயேசுவைப் பற்றி சொல்ல வேண்டும் என்ற ஒரு பாரம் அவர் இருதயத்தில் இருந்தது. அதனால் தன்னுடன் வேலை செய்கிற எல்லாரிடமும் சுவிசேஷத்தை கூறினார். இதனால் இவனுக்கு பைத்தியம் பிடித்துள்ளது என்று கேலி செய்தார்கள். ஒருநாள் எல்லாரும் மதியம் சாப்பிடும்படி அமர்ந்திருந்தபோது நாய் ஒன்று ஜேம்ஸ் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டது. ஜேம்ஸ் நாயிடம் உள்ள சாப்பாட்டை எடுக்க சுரங்கத்தை விட்டு ஓடினான். எல்லாரும் கேலி செய்தனர், "இவனுடைய சாப்பாட்டை இயேசுவால் காப்பாற்ற முடியவில்லை, இவனை எப்படி காப்பாற்றுவார்" என்று. கொஞ்ச நேரத்தில் அந்த சுரங்கத்தில் ஒரு விபத்து ஏற்பட்டு அதன் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அனைவரும் காயப்பட்டனர், சிலர் மரித்தும் போனார்கள். ஆனால் வெளியே சென்ற ஜேம்ஸ் மாத்திரம் தேவனுடைய கிருபையால் பாதுகாக்கப்பட்டார்.
அன்பானவர்களே, வேதத்திலே நோவா தன் காலத்தில் வாழ்ந்த ஜனங்களுக்குள் நீதிமானும், உத்தமனுமாயிருந்தார். நோவா வாழ்ந்த காலத்தில் மனுஷருடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்று கர்த்தர் கண்டார். மனுஷனை படைத்ததற்காக தேவன் மனஸ்தாபப்பட்டார். தேவன் நோவாவை கொண்டு அந்த ஜனங்களை எச்சரித்தபோதிலும் அவர்கள் செவி கொடுக்கவில்லை. நோவாவை ஏளனம் செய்தனர். தேவ கோபத்துக்கு ஆளானார்கள். அதினால் தேவன் ஜலத்தினால் பூமியை அழித்தார். நோவா குடும்பத்திலுள்ள எட்டுப் பேரை தவிர எல்லோரும் ஏகமாய் அழிந்து போனார்கள். ஆனால் நோவாவுக்கும் அவன் குடும்பத்திற்கும் கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது, அனைவரும் பாதுகாக்கப்பட்டனர்.
அன்பானவர்களே, சுரங்கத்தில் வேலை செய்த சகோதரனை அநேகர் ஏளனம் செய்த போதும் தேவன் மேலுள்ள அன்பில் அவர் உறுதியாயிருந்தார். அதனால் பிராணன் அழியாதபடி தப்புவிக்கப்பட்டார். நோவாவும் தேவனுக்கு கீழ்ப்படிந்ததினால் அவனும் அவன் குடும்பமும் பெரு வெள்ளத்துக்கு தப்புவிக்கப்பட்டனர். இதுபோல் நீங்கள் கல்லூரியில் படிக்கிற இடத்தில், வேலை பார்க்கிற இடத்தில், நீங்கள் தேவனுக்காய் வாழ்வதை பார்த்து, உலகத்தோடு இணைந்து வாழாததைக் கண்டு, உடனிருப்பவர்கள் கேலி செய்யலாம், ஒதுக்கி வைக்கலாம். கலங்காதீர்கள், தொடர்ந்து தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடக்கும்போது தேவனுடைய கண்களில் கிருபை கிடைக்கும். எல்லாவிதமான ஆபத்துக்கும் சூழ்நிலைகளுக்கும் தேவன் உங்களை தப்புவிப்பார். தேவன் உங்களோடு இருக்கிறார் என்பதை ஜனங்கள் கண்டு கொள்வார்கள். கர்த்தர் கிருபை உங்களோடு இருப்பதாக.
- Bro. கிறிஸ்டோபர்
ஜெபக்குறிப்பு :
நமது வளாகத்தில் கட்டப்பட்டு வரும் மிஷனெரி அறைகளுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864