இன்றைய தியானம்(Tamil) 30.04.2025
இன்றைய தியானம்(Tamil) 30.04.2025
அனைவரிடத்திலும் அன்பு
"...ராஜா பிரதியுத்தரமாக, மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்…" - மத் 25:40
உலகை ஆண்டவர் படைத்து, மனிதர்களிடத்தில் கொடுத்தபோது, "ஆண்டு கொள்ளுங்கள்" என்று கட்டளையை கொடுத்தார். ஆண்டு கொள்ளுங்கள் என்பதற்கு பராமரித்து பாதுகாக்க வேண்டும் என்றே பொருளாகும். ஆனால் நாம் ஒருவரை ஒருவர், நம்மிலும் கீழானவர்களாக, எண்ணி அவர்களை அடக்கி ஆள எண்ணுகிறோம், அழித்துவிட நினைக்கிறோம். சில ஆட்சியாளர்களால், பல மனித இனங்கள் அழிக்கப்பட்டன, சிதறடிக்கப்பட்டன. இன்று வரை இது தொடர்கதையாக உள்ளது. அப்படி சிதறடிக்கப்பட்ட, அல்லது அழிக்க முயற்சிக்கப்பட்ட இனங்களில் யூதர்கள் முக்கிய இடம் பிடிக்கின்றனர். ஆனால் இன்று பாலஸ்தீனர்களின் மீது ஆதிக்கம் செலுத்தி, அவர்களை அழித்துவிட யூதர்கள் துடிக்கின்றனர். எத்தனையோ குழந்தைகள், வயதானவர்கள், மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் என ஒரு இனமே, நம் கண் முன் அழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. ஈழத் தமிழின மக்கள் எத்தனை பேர் படு கொலை செய்யப்பட்டனர் என்றும், உலகில் பல தேசத்துக்கும் சிதறடிக்கப்பட்டனர், என்பதையும் நாம் கண்கூடாக கண்டு வருகிறோம். இப்படி மனிதர்களை கொல்லும் அதிகாரத்தை கடவுள் மனிதருக்கு கொடுக்கவில்லை.
இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியை ஹிட்லர் ஆண்டு வந்தார். அவர் ஒரு சர்வாதிகாரி அல்லவா? தம் நாட்டில் பரம ஏழைகள், மன நோயாளிகள், கொடூர வியாதியில் இருப்போர் என்று பட்டியலிட்டு இப்படிப்பட்ட நபர்களை கொன்று விட எண்ணினார். இவர்களால் நாட்டிற்கு எந்த பயனும் இல்லை என்று முடிவு செய்தார். அதன்படி மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை விஷவாயுவினால் கொலைசெய்யும்படி டாக்டர் வோன் அவர்களின் மருத்துவமனைக்கு அதிகாரிகள் அனுப்பப்பட்டனர். இங்குள்ள மன நோயாளிகள் நரம்பு நோய் உள்ளவர்களை கொல்ல தீர்மானித்து உள்ளோம் என அதிகாரிகள் கூறியதும், டாக்டர் வோன் அதிர்ச்சியுற்றார். எனினும், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு "தேவை என்றால் என்னை கொன்று விடுங்கள், என் உயிர் இருக்கும் வரை இங்குள்ள எந்த ஒரு நோயாளியையும் நீங்கள் தொட முடியாது இவர்கள் எல்லாரும் கிறிஸ்துவின் பிள்ளைகள். நான் கிறிஸ்துவின் கட்டளைக்கு கீழ்படிகிறேன் கண்டிப்பாக இதை செய்ய மாட்டேன்". என்று திட்டவட்டமாக கூறினார்.
மத்தேயு 25 லே ஆண்டவர் ஏழை மக்கள், வியாதியஸ்தர், காவலில் அடைக்கப்பட்ட மக்களை, விசாரிக்கிறவர்களையும், உதவி செய்பவர்களையும், பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பரலோக ராஜ்யத்திற்கு உரியவர்கள் என்று அழைக்கிறார். நாமும் இப்படிப்பட்ட நம்முடைய சகோதர, சகோதரிகளை நேசித்து உதவி செய்வோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.
ஜெபக்குறிப்பு:-
1000 மிஷனெரிகளைத் தாங்கும் 1000 ஜெபக் குழுக்கள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864